அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, December 19, 2013

1999இல் சபரிமலையில் நிகழ்ந்த அனர்த்தம் பற்றிய என் கருத்து!



(இக்கட்டுரை 1999 பெப்ரவரி மாதத்தில் எழுதப்பட்டது. வேலைப்பளு காரணமாக இதனை நான் கட்டுரையாக குறிப்பிட்ட தினகரன் பத்திரிகைக்கு அனுப்பவில்லை! ஆனால் தற்போது எனது மனத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையைக் கருத்தில் எடுத்து இதனைப் பதிவிடுகிறேன்! தயவுசெய்து யாரும் மனம் நோக வேண்டாம்! ஏனக்குத் தோன்றுவதை நான் செய்வதற்கு எனக்கு உரிமை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இதனைப் பதிவிடுகிறேன்.)

"இந்தியா செல்லும் இந்து யாத்திரிகர்களின் நலன்காக்க இந்து கலாசாரத் திணைக்களம் ஏன் முன்வருவதில்லை?" என்றும், “சபரிமலை அனர்த்தத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்வோம்” என்றும் தலைப்பிட்டு 07.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும், அதற்குப் பதிலளிக்கத்தக்க முறையில் 'இந்து யாத்திரிகர்களும் இந்து கலாசாரத் திணைக்களமும்' "வளமும் அதிகாரமும் இருந்தால் செய்து காட்டுவோம்" என்று 14.02.1999 தினகரன் வாரமஞ்சரியிலும் வெளியான கட்டுரைகளுக்கு ஒரு விதத்தில் பதிலளிக்க வேண்டிய ரீதியிலேயே இக்கட்டுரையை எழுத விரும்புகின்றேன். இதனால் எவருக்கேனும் மனத்தாங்கல் ஏற்படுமாயின், அதற்காக ஐயனிடத்தில் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். இந்தக் கட்டுரையில் குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற போது நானும் பம்பைக் கரையிலே மகர ஜோதியைப் பார்த்தவன். இன்று வரை சரியான செய்தி கிடைக்கவுமில்லை. எமக்கு அது பற்றி தெரிய வேண்டும் என்ற எண்ணமும் ஏற்படவில்லை என்றே வெளிப்படையாக உண்மையைக் கூற வேண்டும். குறிப்பிட்ட பகுதியிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். தெளிவாக மகர ஜோதியைப் பார்ப்பதற்கு இந்தப் பகுதியில் கூட்டம் கூடுவது சர்வசாதாரணமானதே. ஆனாலும் இம்முறை அளவுக்கதிகமான பக்தர்கள் கூடியிருந்தமையும், பாதுகாப்பு உத்தியோகத்தர்களது சோதனை நடவடிக்கை. மற்றும் பல்வேறுபட்ட காரணங்களின் நிமித்தம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முதலில் ஒரு உண்மையை நான் கூறவேண்டும். நான் சபரிமலை யாத்திரை மேற்கொண்டாலும் சரி. கூட்டமாகக் குழுவாக மேற்கொண்டாலும் சரி. யாத்திரிரை மேற்கொள்ள மாலை அணியும் போது எமது மனங்களிலே ஏற்படும் திடமான ஒரு நம்பிக்கையும், லட்சியமும் - நாம் சபரிமலை சென்று அங்கு எழுந்தருளி இருக்கும் கலியுக வரதனுக்கு நெய் அபிஷேகம் செய்வித்து அவன் திவ்ய தரிசனக் காட்சியைக் காணவேண்டும் என்பதுடன் மகர சங்கிராந்தியில் அன்று தோன்றும் ஜோதியையும் விளக்கையும் தரிசிக்க வேண்டும் என்பதே. இக்காட்சியைக் கண்டபின்பே நாம் எமது ஏனைய குடும்ப அல்லது தனிப்பட்ட விடயங்களைச் செய்ய முற்படுவோம். மேலும் யாத்திரை புறப்படும் வேளையில் சுவாமியே சரணம் என்று சொல்லித்தான் புறப்படவேண்டுமே அன்றி போய்வருகின்றேன் என்று கூறல் ஆகாது. நாம் இந்து சமயத்தவர்கள். சனாதன தர்மத்தின்படி, எமது பிறவிக் கோட்பாடுகளின்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற முறையில் எமக்குப் பிறவிகள் உண்டு என்பதும், மரணம் என்பது என்றோ ஒருநாள் நிச்சயம் உண்டு என்பதும், அது எப்போது என்பதை நிர்ணயம் செய்பவன் தர்மவான் என்று சொல்லப்படும் யமனுடைய கடமை என்பதும் அறிந்த விடயம்.


சபரிமலைப் புனித யாத்திரை செய்கின்ற ஓர் சுவாமி தேவவியோகம் அடைந்தால் அந்த ஆத்மா நிச்சயம் ஐயனுடைய பரிப+ரண அருளுக்குப் பாத்திரமாகி பேரின்பப் பெருவாழ்வு அடையும் என்பது முடிந்த முடிபு. கடந்த வருடம் (1997-1998இல்)எமது குழுவினருடன் யாத்திரை செய்த இலட்சுமணண் சுவாமி கரிமலையில் தேகவியோகம் ஆகியதை நாம் நினைவு கூர வேண்டும். அவருக்கு மயக்கம் ஏற்பட்ட போது எமது குழுவில் இருந்த ஓரிரு சுவாமிகளும் வெளிநாட்டு சுவாமி ஒருவருமே அவருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். எனினும் அவரது உயிர் பிரிந்த பின்பும் கூட அவரது உடலை எப்படியாகிலும் இலங்கைக்கு எடுத்துவர வேண்டும் என்ற ஆதங்கத்துடன் பெரும் பிரயத்தனம் செய்து அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தொண்டர்களின் உதவியுடன் அவரது உடலை பம்பையில் உள்ள வைத்தியசாலைக்குக் கொண்டு வந்து பின்னர் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. அவரது பூதவுடலைக் கொண்டு வர முடிந்தமைக்காக காரணம் அவருக்கு அருகில் அந்த நேரத்தில் எமது குழுவினர் இருந்தமையால்தான். இல்லாவிட்டால் அவரது உடலை அருகே பள்ளத்தில் தள்ளி விட்டிருப்பார்கள். இது ஏன் குறிப்பிடுகின்றேன் என்றால் “எம்மவர்களில் பலர் மாலை அணிந்திருக்கும் போது சில விடயங்களைத் தவிர்ப்பதும் அவை தீட்டு ‘குற்றம்’ எனக் கருதுவதும் மனிதாபிமான அடிப்படையில் தவறாகும்” என்பது எனது கருத்து. இறைவன் கருணை வடிவானவன். சபரிமலை யாத்திரையின் போது ஏழை, பண்காரன், பெரியவன் சிறியவன், உயர்ந்த சாதி - தாழ்ந்த சாதி என்ற எண்ணம் எல்லாம் மறையப் பெற்று நாம் அனைவரும் ஒரு குலம் என்ற ஒற்றுமை வலுப்பெறுகின்றது. மக்கள் அனைவரும் ஒரு குலம். இறைவன் அனைவருக்கும் பொதுவானவனே. அவனது சந்நிதியில் அனைவரும் சமமே. அதுவே உண்மையான ஜீவாத்மா, பரமாத்மா சங்கமம். அதுவே தத்வமஸி எனும் மகா வாக்கியத்தின் பொருளுமாகும்!


ரிஷி அவர்களின் கட்டுரையின் ஆரம்பத்திலேயே “பக்தர்களில் 52 பேர் தத்தமது வீடுகளுக்கு உயிருடன் திரும்பவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். வருடாவருடம் சபரிமலையில் பலர் மாரடைப்பினாலும் நெரிசலில் சிக்குண்டும் சரணமடைந்திருப்பினும் இம்முறை குறிப்பிட்ட அனர்த்தத்தால் பலர் சரணமடைந்துள்ளனர். இதற்கான காரணத்தை நாம் விரிவாக ஆராய வேண்டும்.

பிரார்த்தனை என்பது வீண்போவதில்லை. எவ்வளவுக்கு எவ்வளவு எமது பிரார்த்தனைகள் பக்தி ப+ர்வமாக அமைகின்றதோ அவ்வளவுக்கவ்வளவு பலன்களையும் நாம் எதிர்பார்க்க முடியும். உதாரணமாக எனது அனுபவத்தில் நான் கண்ட அனுபவங்களையும் பெற்ற பேறுகளையும் கண்டிப்பாக சொல்லியே தீர வேண்டும்.

முதலில் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டுமாயின் இலங்கை பக்தர்களுக்குக் கடவுச்சீட:டும், இந்தியா செல்வதற்கான அனுமதியும் “விசா”வும், குறிப்பிட்ட தினத்தில் யாத்திரை மேற்கொள்ள விமானப் பயணச் சீட்டும் அவசியம். இம்மூன்றையும் சரிவரப் பெற்றபின்னர் தான் இந்தியா சென்று எமது யாத்திரையைத் தொடர முடியும். கார்த்திகை முதலாம் நாள் மாலையணிந்த சபரிமலை யாத்திரையைத் தொடங்குவதே பண்டைய நெறிமுறை. அதற்கேற்ற வகையிலேயே ஸ்ரீஐயப்ப சன்னிதானமும் கார்த்திகை முதலாம் நாளில் இருந்து மண்டலப் பூர்த்தி வரை “41 நாட்கள்” ஆலயம் திறந்திருக்கும். அதன் பின் மகரஜோதி தரிசனத்திற்காக ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 20 நாட்களுக்கு 20ஆம் திகதிவரை திறந்திருக்கும்.

எனக்குக் கரிமலை இறக்கத்தில் ஏற்பட்ட ஒரு சம்பவத்தை நான் முக்கியமாக குறிப்பிட்டே ஆக வேண்டும். ஐயனின் திருவருளுக்கும் எனது பற்றற்ற வாழ்க்கைக்கும் இது உதாரணமாகும். ஸ்ரீபம்பா விக்னேஸ்வரா சத்தியாலாயா குழுவினரால் நடாத்தப்படுகின்ற அன்னதானத்தில் நானும் பங்குகொண்டு அடியார்களுக்கு உணவு பரிமாறுவதில் உதவ சீக்கிரமாக நடந்து சென்று உதவ வேண்டும் என்ற ஆதங்கப்பட்டு முன்பு இரு தடவைகள் பங்கேற்றது போலு இம்முறையும் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் எருமேலியில் இருந்து பம்பைக்குச் செல்ல முடிவு செய்து இன்னோர் பழமலை சுவாமியுடன் யாத்திரையைத் தொடர்ந்தேன். முதல் தடவை நாம் எருமேலியில் இருந்து ஆரம்பித்து அழுதையிலும் கரியிலம்pதோட்டிலும் தங்கியே பம்பையை அடைந்தோம். இரண்டாவது முறை அழுதையில் தங்கி கரியிலந்தோட்டில் தங்காது பெரியாணை வட்டத்தில் மழையில் நனைந்து பம்பையை அடைந்து அன்றிரவு முழுவதும் நல்ல காய்ச்சலினால் அவதிப்பட்டு அடுத்தநாள் ஊசி மருந்து எடுத்ததன் மூலம் சுகமாகி முதன் முதல் அன்னதானத்தில் பங்கு கொண்டு பணிசெய்தேன். கடந்த தடவை எவ்வித தடங்கலுமின்றி அழுதையில் தங்கி கரிவலந்தோட்டில் சக்தி ப+சைக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுத்துதவி செய்தபின் பம்பையை அடைந்து அன்னதானத்தில் பங்கு கொண்டேன். இம்முறை அழுதையிலும் தங்காது புறப்பட்டு முக்குளித் தாவளத்தில் அம்மன் கோவிலில் வைத்து என்னுடன் கூடவே வந்த பழமலை சுவாமியைவிட்டுப் பிரிந்து அவரைத் தேடிக் காணாமல் எனது யாத்திரையைத் தொடரவும் மழை ஆரம்பிக்கவும் ஒரு தாவளத்தில் தங்கினேன். மழையையும் பொருட்படுத்தாமல் பலர் தமது யாத்திரையைத் தொடர்ந்து கொண்டிருந்தனர். நானும் தொடர ஆயத்தமான வேளையில் இரண்டு ஐயப்ப சேவா தொண்டர்கள் பெரிய தடியொன்றில் வேட்டியை மடித்துக் கட்டி “ஏணை போல” ஒருவரைத் தூக்கிச் செல்ல ஒரு வயதுபோன அம்மா சுவாமி தொடர்ந்து கண்ணீர் வடித்துச் செல்வதைக் கண்டு அங்கேயே தங்கிச் செல்ல முடிவு செய்தேன். பதினைந்து ரூபா தங்குவதற்கு வாடகை கொடுத்து விரிப்பு எடுத்தேன். அதிகாலை நான்கு மணிகெல்லாம் சரியாக யாத்திரையைத் தொடர்ந்து கரிவலந்தோடு தாண்டி கரிமலை ஏற்றமும் ஏறி பின் இறக்கத்தை அடைந்தேன். மழை பெய்திருந்த காரணத்தாலும் அந்த இறக்கம் மிகவும் ஆபத்தானதாக இருந்தமையாலும் மிகவும் அவதானத்துடன் மிக மெதுவாக இறங்கிச் சென்ற வேளையில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாகி ஒவ்வொருவராக இறங்க கவனமாக நடந்து கொண்டிருந்த வேளையில் என்பின்னால் சரக் சரக் என்ற சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்ப்பதும் பின்பு கவனமாக இறங்குவதிலும் அவதானமாயிருந்தேன். பலர் இடிபட்டுக் கொண்டிருந்தார்கள். எனது சோல்னாப் பையை சரிசெய்து கொண்டு இறக்கத்தில் இறங்கி “இந்த வேளையில் நாம் எமது இரு கைகளாலும் இருமுடி சரிந்து விழாவண்ணம் பிடித்துக் கொண்டு கண்களைப் பாதையில் நிலைப்படுத்தி சரணம் விழித்துக் கொண்டு சமனிலையைப் பேணிபடி நடந்து செல்வோம். பெரியாணை வட்டம் தாண்டியப pன் சிறியாணை வட்டத்தில் வத்தகைப் பழத்தின் நீர் குடிப்பதற்காக இருமுடியை இறக்கி வைக்க எனது சோல்நாப் பையைக் கழற்றிய போது தாவளத்தில் இருந்த ஒரு மணிகண்ட சுவாமி எனது சோல்னாப் பையை யாரோ வெட்டியிருக்கிறார்கள் என்று கூறவும் அப்போதுதான் என்னிடம் குருசுவாமி தந்த ரூபா 10,000 இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. அவசரம் அவசரமாக இருமுடியை இறக்கி வைத்துவிட்டு சோல்னாப்பையைப் பார்த்தபோது பம்பா கணபதிக்கு அடிக்க வேண்டிய தேங்காயும் கற்ப+ரமும் முன்பாகத் தெரிந்தது. கைப்பையின் உள்ளே பத்திரமாக நூறு ரூபாத் தாள்கள் கட்டாக குருசுவாமி தந்த பணம் அப்படியே இருந்தது. பின்னர் அந்த சுவாமியின் கூற்றுப்படி தலையிலேயே வேட்டி ஒன்றினுள் சோல்னாப் பையை வைத்து அதன்மீது இருமுடியை வைத்து பம்பை நதிக்கரையை அடைந்த போது ஒருநாளும் இல்லாதவாறு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. கன்னிமூலகணபதிக்கு முன்பாக இருந்த படிக்கட்டினால் மாத்திரமே பக்தர்கள் சபரிமலை செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். அதிலும் சந்தேகத்திற்கு இடமான பக்தர்களின் சோல்னாப் பைகள் சோதனையிடப்பட்டன. விமான நிலையத்தில் இருப்பது போல பம்பா கணபதி ஆலய சுற்றுவட்டத்தில் சோதனைக் கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதனூடாகவே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது நடந்தது 13.01.1999 புதன்கிழமை. ஒருசில முக்கிய பிரமுகர்களுக்காக (“V.I.P”) வருகின்ற அத்தனை அடியார்களையும் சோதனையிடுவது ஒரு முறையான செயல் அல்ல. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்கள் ஒன்றுடனொன்று தொடர்புபடுத்திப் பார்க்கும்போது அனர்த்தத்துக்கு போதுமான காரணங்கள் பல கிடைக்கும்.

எமது யாத்திரைக் குழு மகர சங்கிராந்தி தினத்தன்று பம்பையில் தங்கி - ஜோதி பார்த்த மறுதினம் அன்னதானம் - பம்பா சக்தி மற்றும் பம்பா விளக்கு நிறைவு செய்து அடுத்த நாள் அதிகாலையிலேயே சுவாமி தரிசனத்திற்காக சபரிமலை சென்று நெய்யபிஷேகம் செய்வித்து அதன்பின் அலங்கார ரூபத்திலிருக்கும் ஐயனைத் தரிசித்து இரவு பம்பைக்கு வந்து புறப்படுவது வழக்கம்.


ஜோதி பார்த்தவுடனேயே பலர் மலைக்குச் செல்வதற்கும், பலர் வீடு திரும்புவதற்கும் ஆயத்தமாகி நெருக்கியடித்துக் கொள்ளுவது வழமை. மழைபெய்திருந்த காரணத்தாலும், தற்காலிகமாக வெட்டிச் சமப்படுத்திய மணற்திட்டிகள் கூட்டத்தின் பாரத்தால் சரிந்து கீழே இருந்தவர்கள் மீது விழுந்தமையாலேயே மூச்சுத் திணறி இப்பரிதாபகரமான நிகழ்வு நிகழ்ந்தது. மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபா பணம் வழங்கப்படும் என்ற செய்தியுடன் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பினும் இன்றுவரை சரியான காரணத்தை எவரும் அறிவிக்க வில்லை. இந்தச் சம்பவத்திற்கும் இங்கு நம்நாட்டில் உள்ள இந்துக் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கும் முடிச்சுப் போடுவதுதான் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு ஆலயம் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாகப் பூசைகள் இன்றிப் பூட்டப்பட்டு இருக்கின்றது. இங்கு நடைபெறும் மார்கழிமாத இராமர் பஜனைப் பிரச்சினையால் இந்த ஆலயம் இந்நிலைக்க ஆளாகியது. ஒவ்வொரு வருடமும் இந்த ஆலயத்தில் தான் நான் சபரிமலைக்குக் கொண்டுபோகும் தேங்காயை பூசையில் வைத்து எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த வருடத்திற்கு முன்னரே 1997 இல் சபரிமலை யாத்திரையை நிறைவு செய்து கொண்டு திரும்பிய பின் இந்த ஆலயத்தில் வைத்தே எனது பிரசாதத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஓடோடிச் சென்ற போது ஆலயம் பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் கடந்த வருடமும் நான் உள்ளுராட்சித் தேர்தல் முடித்துக் கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து வந்தபின் சென்றேன். அப்போதும் ஆலயம் பூட்டப்பட்டிருந்தது. கடந்த 16.04.1998 அன்று இவ்வலயத்தில் தீவிபத்து ஒன்று நடந்ததைச் சுட்டிக்காட்டி செயலாளருக்கு அவ்வாலயத்தின் அறங்காவலர் “தலைவர்” எழுதிய பிரதி இந்தத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருந்தும் இதுவரை எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுத்தாகத் தெரியவில்லை. குறிப்பிட்ட ஆலயத்தின் அனுசரணையோடு நடைபெறும் அறநெறிப் பாடசாலையின் போசகராக நான் முன்னர் இருந்தேன். 23.10.1994 இல் நடைபெற்ற இரத்தினபுரி மாவட்டத்தில் இந்து சமயப் போட்டிகளில் கலந்துகொள்ள வந்த 7 அறநெறிப் பாடசாலைகள் பங்குபற்றாமல் பகிஸ்கரித்த காரணத்தால் அப்போட்டிகள் விசாரணையின் பின்னர் 5.03.1993 இல் மீண்டும் நடாத்தப்பட்டது. அதற்கான பரிசில்கள் இன்றுவரை வழங்கப்படவில்லை. இந்த வரைவிலக்கணத்தில் ஒழுங்காக இங்குள்ள கடமைகளைச் செய்ய முடியாத திணைக்களம் எவ்வாறு சபரிமலை யாத்திரையில் சம்பந்தப்பட்டு தீர்வுகாணப் போகின்றது. எனது மனக் கவலை யாதெனில் கடந்த 3 வருடங்களாக இந்த ஆலயத்தின் சுற்றுவீதியில் உள்ள மரங்களில் இருந்து பெற்ற தேங்காய்களையே ஒவ்வொரு தடவையும் நான் யாத்திரையின் போது நெய் நிரப்பி இருமுடியில் சுமந்து செல்வேன். இம்முறை மாலையிட்ட பின் இந்த ஆலயத்தை வந்து திறந்து பார்க்கவுமில்லை. இங்கு தேங்காய் பூசையில் வைக்கவுமில்லை. இந்தக் குறையும் இப்படிப்பட்ட அனர்த்தத்திற்குக் காரணம் ஆகுமா என்ற வினா என் மனதில் எழுகின்றது. கந்த 14.09.1992 சிவராத்திரி தினத்தன்று குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற என்னை ஒரு ஆசிரியர் (எனது நெருங்கிய நண்பரும் கூட) சபரிமலை குறித்தும் இவ்வாலயம் குறித்தும் என்னைக் கேட்ட சில கேள்விகள் குற்றம் சுமத்துவது போல உள்ளுர என்னை உறுத்துகின்றது. குறிப்பிட்ட இந்த ஆலயத்தில் மிகச் சிறப்பாகப் பல தடவைகள் நவராத்திரி விழாவைச் சிறப்பாக நடாத்தி வந்தோம். கடந்த வருடம் நவராத்திரி நடக்கவுமில்லை. என்னை அழைக்கவுமில்லை. நானும் போகவுமில்லை. இங்குள்ள மக்கள் செய்கின்ற குறைகளால் அங்கு அனர்த்தம் ஏற்பட்டிருக்குமா என்றும் ஒரு வினா எழும்புகின்றது. காரணம் இங்கு மலையகத்தில் வாழுபவர்களுக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கின்றது.

குறிப்பிட்ட கட்டுரையில் பிஸ்னஸ் ஆகக் கருதுவோர் என்ற ஒரு சொல் இருக்கின்றது. உண்மைதான். சில பக்தர்கள் விமான நிலையத்தில் தீர்வையற்ற வியாபார நிலையங்களில் மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்வதும் இங்கிருந்து போவோர் பலர் தமது பயணப் பொதிகளில் கராம்பு, ஏலம் போன்றவற்றை எடுத்துச் செல்வதும் சர்வசாதாரணமே. ஆனால் எமது யாத்திரைக் குழுவில் இப்படியான தேவையற்ற செயல்களை நாம் அனுமதிப்பதில்லை. ஆனால் பல குழுவினர் சுங்கப்பகுதியில் இதனால் பலமணிநேரம் தாமதப்படுவதை என் கண்களால் நேரடியாகப் பார்த்திருக்கின்றேன்.

Friday, November 22, 2013

யாழ்ப்பாணத்தில் சபரிமலை ஐயப்ப விரதமும் நாம் படும்பாடும்!


சபரிமலை செல்வதற்கு யாழ்ப்பாணத்திலும் பல யாத்திரைக் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது மிகவும் பெருமளவில் ஐயப்பயாத்திரீகர்கள் மாலையணிந்து விரதமனுட்டித்தாலும் சரியான முறையில் ஐயப்ப விரதத்தை அறிந்து வைத்திருக்கிறார்களா? என்ற வினா எம்மிடத்தில் எழுகிறது! இது குறித்து என்னால் இன்று எழுதப்பட்ட ஒரு வேண்டுகோளை இங்கு பதிவிட விரும்புகின்றேன்!


அனைத்து சபரிமலை குருஸ்வாமிகளுக்கும் ஒரு பணிவான விண்ணப்பம்!

திருவருளும் குருவருளும் முன்னிற்க!

சபரி மலைக்கு முதன் முறையாகச் செல்லும் கன்னி ஸ்வாமிகளை சில பழ மலை ஸ்வாமிகளும் சில குருஸ்வாமிகளும் சபரிமலை நடைமுறைகளுக்கு ஒவ்வாத தேவையற்ற விடயங்களைச் சொல்லி அவர்களை சபரிமலை விரதத்தின் உண்மைகளை அறிய விடாது தமது கட்டுப்பாட்டுக்குள் எப்போதும் வைத்திருக்க விரும்புவது போலத் தெரிகிறது. முதலில் சபரிமலை செல்பவர்கள் அங்குள்ள நடைமுறைகள் - விரதத்தின் நோக்கம் - ஐயப்பனுடைய வரலாறுகளை முழுவதுமாகத் தெரிந்திருக்க வேண்டும். ஒரு சில யாழ்ப்பாணத்து குருஸ்வாமிகள் அந்தணர்களாக இருப்பதால் அவர்கள் தமக்குரிய வேத - ஆகம வழிபாட்டை இதனுள்ளும் புகுத்துவதற்கு எத்தனிக்கிறார்கள். சாதாரணமாக அனைவராலும் மேற்கொள்ளப்படும் இவ்விரதத்திலும் தாம் நினைத்தபடி பூசைமுறைகளை ஏற்படுத்தி அதையே தொடர்ந்து பின்பற்றிவருவதும் எம்மைப் போன்ற சில மாலை போட்ட ஸ்வாமிகளின் மனதை வருத்தமுறச் செய்கின்றன. எந்தவித மந்திரமோ, கிரியைகளோ இந்த வழிபாட்டில் சொல்லப்படவில்லை. ஐயப்பன் படத்தை வைத்து அவரவர் வசதிக்கேற்றபடி வணங்கக்கூடிய மிக எளிமையான விரதத்தை பகட்டுக்காகவும், வருமானத்திற்காகவும் ஒரு சில குருஸ்வாமிகள் செய்வது அந்த பகவானாலேயே ஏற்றுக் கொள்ளப்பட முடியாத அளவுக்கு மாபெரும் குற்றமும் தவறுமாகும். மாலை போட்ட ஸ்வாமி தன் வசதிக்கேற்றபடி வீட்டில் ஒரு பூசை செய்ய முயன்றாலும், சில அந்தணப் பெருமக்கள் தாம் கொண்டுசெல்லும் ஐயப்பனின் ஐம்பொன்னாலான உருவச் சிலைக்கு அபிஷேக ஆராதனைகளை தாம் செய்வதற்காக அந்த வீட்டை உபயோகிப்பதும் நல்லதல்ல. குறிப்பிட்ட வீட்டில் நடக்கும் பூசையை குருஸ்வாமி முன்னின்று வழிநடத்த - அந்த வீட்டுக்குரிய ஸ்வாமிகளும் மற்ற குடும்ப அங்கத்தவர்களும் அவரவர் திருக்கரங்களால் செய்ய வேண்டும். இதுதான் அந்த மாலைபோட்ட ஸ்வாமிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் அந்த வீட்டிற்கும் நன்மை பயக்கும், 18 படிகள் வைத்து பூஜை செய்ய வேண்டிய ஐயனின் வழிபாட்டில் அதைத் தவிர்த்து ஐயனை கோபத்திற்குரிய கடவுளாக சித்தரிப்பதும் கண்டிக்கப்படத் தக்கது. குறிப்பிட்ட வீட்டில் ஐயப்பனுடைய பூஜைக்குச் செல்வோர் தவறாது அந்த வீட்டில் வழங்கப்படும் அன்னதானத்தையோ - பிரசாதங்களையோ ஏற்றுக் கொண்டு அங்கேயே உட்கொள்ள வேண்டும். அதைவிடுத்து பூசை முடிந்தவுடனே தன் வீட்டிலுள்ள ஐயப்பனுக்கு படைத்த பின்பே சாப்பிடுவேன் எனக்கூறி வந்த இல்லத்தில் உணவருந்தாமல் செல்வது மாபெரும் குற்றமாகும். இதைவிட அவர்கள் அந்தப் பூஜையில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது புண்ணியமாகும். மாலை அணிந்தால் அனைவரும் சமம் என்ற தத்துவமஸி என்கின்ற பேருண்மையைப் புரியாமல் அந்தணர்கள் சிலர் அந்தணரல்லாதோருக்கு பாத நமஸ்காரம் பண்ணாமல் விடுவதும், தனியாகப் போயிருந்து உணவு உட்கொள்வதும் முறையாகாது. இவர்கள் ஐயப்பனின் வழிபாட்டை கேவலப்படுத்தாமல் மாலை அணிவதைத் தவிர்ப்பது சிறப்பாகும். ஐயப்பனின் வழிபாட்டில் அன்னதானம் மிகச் சிறப்புடையது! அன்னதானப் பிரபுவான அவரின் முன்பாக அன்னம் உண்பதைத் தவிர்த்து வீடுகளுக்குச் சென்று உணவருந்த பார்ச்ல் கட்டிக் கொடுப்பதும் ஏற்புடையதல்ல.
ஆலயத்தினுள் இடம்போதாவிடில் ஆலய வளாகத்தில் தனியான ஒரு மண்டபம் அமைத்து ஆலயச் சூழலிலேயே அன்னம் பரிமாற ஆவன செய்யப்பட வேண்டும். மேலும் ஐயப்பனுக்கு படிப்பூசை, ஸ்லோகம் எல்லாம் கூறிவிட்டு பூசை நிறைவில் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசை வைப்பதும், வீட்டிற்கு கழிப்பு எனப்படும் பூசணிக்காய் வெட்டி சில சடங்குகளை நடத்துவதும் ஐயப்பனைக் கேலி செய்வதாக அமையும்! ஐயப்பனின் படிப்பூசையை செய்வதற்கு முன் காவலுக்கு உதவும் கறுப்பண்ணஸ்வாமிக்கு பூசையை நடத்தலாம். அதில் தவறில்லை! ஆனால் ஐயப்பனுக்குப் பூசையை நிகழ்த்திவிட்டு பின்னர் சாந்தி செய்வது – ஐயப்பனின் அருள் நிறைந்த வீட்டை குற்றம் சுமத்துவது போலாகும்! நித்திய பிரமச்சாரியான ஐயப்பனின் திருஉருவத்திற்கு அருகில் மஞ்சமாதாவை வைப்பதும், சரிசமமாக ஐயப்பனுடன் வீதியுலா செய்வதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்! மஞ்சமாதா எனக் கூறி சர்வவல்லமை பொருந்திய அம்பிகையின் திருவுருவை வைத்து வழிபடுவதும் மிகவும் தவறாகும். சம்பந்தப்பட்டவர்கள் இதில் அதிக கவனம் எடுத்து ஐயப்பனின் வழிபாட்டை அமைதியாக ஆன்மீக வளர்ச்சிக்கு மாத்திரம் கைக்கொள்ளுமாறும், தேவையற்ற சம்பிரதாயங்களை சடங்குகளாக்கி கேளிக்கை நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனவும் சபரிமலை ஸ்ரீ தர்மஸாஸ்தாவின் பெயரால் அவனது அடியவனாக தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன்.

Sunday, August 11, 2013

நல்லை நகர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்!

நல்லை நகரில் வீற்றிருக்கும் அலங்காரக் கந்தனுக்கு நாளை 12.08.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இன்று காலை கொடிச்சீலை ஆலயத்திற்கு இரதத்தில் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. வழமைபோல இன்றே நாமெல்லோரும் நல்லூர் முருகப்பெருமானுடைய திருவிழாவுக்கு ஆயத்தமாகிவிட்டோம்! இனி என்ன 25 நாட்களும் சகலதையும் மறந்து தமிழ்த் தெய்வமான ஆறுமுகப் பெருமானை பல்வேறு அழகான தோற்றங்களில் காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்! நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி என்பது யோகர் சுவாமிகள் வாக்கு!

Wednesday, July 17, 2013

Indo Ceylon Accord - இந்திய இலங்கை ஒப்பந்தம் - 29.07.1987

29.07.1987இல் கைச்சாத்தாகிய இலங்கை இந்திய ஒப்பந்தம்




Wednesday, June 12, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 10)

ஆவணப்படுத்தலுக்கு சில முக்கிய பத்திரிகைச் செய்திகளை இணைக்கலாம் எனக் கருதியமையால் அவற்றை இங்கு சேர்த்துள்ளேன்.

16.06.1981 வீரகேசரி “யாழ் பொதுநூலகத்தை எரித்தது காட்டுமிராண்டிச் செயல் - வாசுதேவநாணயக்கார - கூட்டணி எம்பிக்களின் பகிஷ்கரிப்புக்கு ஆதரவு

17.06.1981 ஈழநாடு தாவீது அடிகள் மற்றும் நால்வர் ஆத்மசாந்திக்கு அஞ்சலி அச்சுவேலி தம்பாலையைச் சேர்ந்த பாலசோதி, கோப்பாய் பயிர்ச்செய்கை உத்தியோகத்தர் பரமேஸ்வரன், நீர்வேலி சலவைத் தொழிலாளி கணபதிப்பிள்ளை சண்முகம், தெல்லிப்பழை கோவிந்தசாமி சண்முகராஜா

17.06.1981 தினபதி யாழ் கொலை,கொள்ளை, தீவைப்பு சம்பவங்களுக்கு மாநகராளுமன்றம் பலத்த கண்டனம் உறுப்பினர்கள் ஆவேசமான உரை - தினபதிப்படங்களுக்கு நன்றி – தலையங்கத்துக்குப் பாராட்டு

22.06.1981 தமிழ்த் தேசிய இனத்தைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது ஆயுதப்படையினர் வாபஸ் பெறவேண்டும் - தமிழ்க் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்

24.06.1981 வீரகேசரி எங்களைக் கண்டதும் பொலிசார் மதில் ஏறிக் குதித்து அப்பால் சென்றனர் - யாழ் பொதுநூல்நிலையக் காவலாளி பொலிஸ் விசாரணையில் தகவல்

6.7.1981 வீரகேசரி அணுகுண்டைவிட ஆத்மீக சக்திக்கு அதிகவலிமை உண்டு - வவுனியா உண்ணாவிரதத்தில் சாவகச்சேரி எம்.பி.

8.7.1981 வீரகேசரி யாழ் நூலக எரிப்பு பற்றி எனக்கும் கவலை உண்டு. ஆனால் கண்டிக்கும் நிலையில் இல்லை. அமைச்சர் என்பதால் அரசின் முடிவகளுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன் என்கிறார் “தேவா”

12.7.1981 யாழ் நூலக புனரமைப்பு நிதிக்கு தாராளமாக உதவுங்கள் - மகாநாயக்க தேரோக்கள், இதிமேற்றிராணிமார் மற்றும் பிரமுகர்கள் வேண்டுகோள்

14.7.1981 ஈழநாடு யாழ் வன்செயல்கள் குவைத் நாட்டுப் பத்திரிகை வெளியிட்ட செய்தி

17.7.1981 தினகரன் யாழ் வன்செயல்களுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா

12.10.1981 ஈழநாடு ஈழத்தமிழருக்கு எப்படி உதவலாம் என்பதுபற்றி முடிவு செய்ய அனைத்துக்கட்சி மகாநாடு தமிழக முதல்வர் கூட்டுகிறார் யாழ் நூலகத்துக்கு நூல்கள் வழங்க எம்.ஜி.ஆர் ஏற்பாடு.

15.10.1981 யாழ் மக்களின் கவலையில் நானும் பங்கெடுக்கின்றேன் - யாழ்நகரில் ஆரியரத்னா

8.11.1981 பொதுசனநூலகத்துக்கு 1 1/2 லட்சம் ரூபா நூல்கள் யாழ் கிறீஸ்தவ ஐக்கிய சங்கம் வழங்கும்.

13.12.1981 ஈழநாடு யாழ் பொதுசன நூலக புனரமைப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்றும் நாளையும் வீடுகளில் நிதி திரட்டுவர்

21.12.1981 ஈழநாடு யாழ் பொது சன நூலகநிதி - பல்கலைக்கழக மாணவர்கள் ரூ 193,965 சேர்த்தனர்

23.12.1981 வீரகேசரி யாழ் நூலக கட்டிட நிதிக்கு வரிவிலக்குக் கோருகிறார் சூசை

20.1.1981 ஈழநாடு யாழ் நூல் நிலைய புனரமைப்புக்கு நிதி திரட்டும் பணியில் தொழில் பிரமுகர்கள் குழு!

24.2.1982 ஈழநாடு நூலகத்துக்கு வைக்கப்பட்ட தீ தமிழினத்துக்கு ஏற்பட்ட சவால்! இதனைக்கட்டி எழுப்புவது தமிழினத்தின் தூய கடமை - நூலக வார ஆரம்பத்தில் அமிர்

25.02.1982 வீரகேசரி யாழ் பொது நூலகத்தை கட்டிமுடித்து மீண்டும் பூத்துக் குலுங்க வைப்பது தமிழரின் தலையாய கடமை - கொடிதின ஆரம்ப விழாவில் தலைவர் அமிர் கோரிக்கை

25.2.1982 தினபதி யாழ் நூலகவாரத்தையொட்டி வியாழக்கிழமையன்று நூலக கொடி தினம் அனுட்டிக்கப்பட்டது. யாழ் முதல்வர் திரு.இராசா விசுவநாதன் முதலாவது கொடியை எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கத்துக்கு அணிவித்து கொடி விற்பனை தினத்தை ஆரம்பித்து வைத்தபோது எடுக்கப்பட்ட படம்.

3.6.1982 வீரகேசரி தமிழனைத் தமிழனே அழித்துக் கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். யாழ் உண்ணாவிரதத்தில் அமிர் - சரியான தலைமையின்றி தவறான பாதையில் செல்லாதீர்

தினபதி 3.6.1982 யாழ் பொது நூல்நிலையம் எரிக்கப்பட்ட ஓராண்டுப் பூiர்த்தியை முன்னிட்டு நூல்நிலையத்தின் முன்னால் நேற்றுக் கூட்டணியினர் உண்ணாவிரதம் இருந்து துக்கம் அனுட்டித்தனர். உண்ணாவிரதத்தில் கலந்து கொண்ட யாழ் எம்.பி. திரு. வெ. யோகேஸ்வரன், திரு. நீலன் திருச்செல்வம், மன்னார் எம்.பி திரு. பி.எஸ் சூசைதாசன் , கோப்பாய் எம்.பி. திரு. எம். ஆலாலசுந்தரன் ஆகியோரை முதலாவது படத்தில் காண்க. செல்வா நினைவாலத்தின் முன்னால் தமிழ் ஈழ விடுதலை அணியினரும் மாணவர்களும் உண்ணாவிரதம் இருந்தனர். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களில் ஒரு பகுதியினர் இரண்டாவது படத்தில் காணப்படுகின்றனர்.

2.6.1982 தமிழனைத் தமிழன் அழிக்கும் நிலை எமக்குள் நிகழ வேண்டாம் உண்ணாவிரதத்தில் அமிர் கோரிக்கை

Monday, June 10, 2013

யாழ். மாநகர சபை குடிநல - சுகாதார வாரமலர் மற்றும் வெள்ளிவிழா மலர்

யாழ்ப்பாண மாநகர சபையின் குடிநல - சுகாதார வாரம் 1968ஆம் ஆண்டிலும் வெள்ளிவிழா 1974இலும் கொண்டாடப்பட்டபோது வெளியிடப்பட்ட மலர்களின் பிரதிகளை இங்கே ஆவணப்படுத்தலுக்காகப் பதிவிடுகிறேன். மூலப்பிரதி கிடைத்ததும் மாற்றி சீர்செய்வேன்.


Sunday, June 9, 2013

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 9)

“ஏசுவார்கள், எரிப்பார்கள், அஞ்சவேண்டாம்,உண்மையை எழுதுங்கள், உண்மையாய் எழுதுங்கள்”. 1959 “ஈழநாடு” முதல் பிரதியைப் பார்த்ததும் யோகசுவாமிகள் இவ்வாறு கூறி ஆசீர்வதித்தார்களாம்.


கடந்த 23வருட காலத்தில் எம்மை ஏசியவர்கள் உண்டு.திட்டியவர்களுமுண்டு. ஏன் பத்திரிகையை எரிக்கவும் செய்தார்கள்.ஆனால் ஈழநாடு கட்டிடத்தையே தீயிட்டுக்கொளுத்துவார்கள் என்று யாருமே எண்ணியதில்லை. இப்படியும் நடக்கும் என்பதைத்தான் சுவாமிகள் அப்பொழுதே சூசகமாகக் குறிப்பிட்டிருப்பாரோ என்று இப்பொழுது எண்ணத் தோன்றுகிறது. ஜுன் முதலாந்திகதி திங்கட்கிழமை காலையில் வழமைபோல் வேலைக்குப் போகப் புறப்பட ஆயத்தமாகின்றேன். “பஸ்” ஓடவில்லையென்று யாரோ கூறினார்கள். வேலை நிறுத்தமாகவிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீதிக்கு வருகின்றேன். ‘யாழ்ப்பாணத்தில் குழப்பம். ஆதனால்தான் பஸ் ஓடவில்லையென்று பேசிக்கொள்கிறார்கள்.….. இவ்வாறு தொடங்கும் ‘பேனா’ எழுதுவது - உணர்வுகள் எரிவதில்லை என்ற கட்டுரை 3.7.1981 வெள்ளிக்கிழமை முதல் 16.7.1981 வெள்ளிக்கிழமை வரை தொடராக வந்தது.

ஈழநாடு எரியூட்டப்பட்டதன் பின் நான்கு நாட்களின் பின்னர் ஆறூந்திகதி அப்பத்திரிகை மீண்டும் வெளிவந்தது. வரலாறுகளை எழுதுவோர் ஏனோதானோ என எழுந்தமானமாக பதிவிடுதல் கூடாது. சம்பந்தப்பட்ட சகல விபரங்களையும் தெரிந்து உண்மையை உண்மையாக எழுதவேண்டும்.

தந்தை செல்வாவுடைய சரித்திரத்தை எழுதிய பத்திரிகை ஆசிரியர் ரி. சபாரத்தினம் அவர்கள் அந்நூலில் என்னுரையில் மூன்றாவது பந்தியில் குறிப்பிட்டவற்றை ஆவணப்படுத்தல் - பதிவிடுதல், பத்திரிகை ஏன் எழுத்துத்துறையிலிருப்பவருக்கும் அறிந்துகொள்வதற்காக இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

ஒரு நல்ல பத்திரிகையாளனின் பணி ஆய்வில் ஈடுபடுவதல்ல. அதைச் செய்ய நிறையப்பேர் இருக்கிறார்கள். பத்திரிகையாளனின் பணி, தான் மிக அருகே நின்று பார்த்தவற்றைப் பதிவுசெய்து வைப்பதே. பத்திரிகையாளனுக்குக் கிடைக்கும் அந்த அருமையான சந்தர்ப்பம் ஆய்வாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 32வது ஆண்டு நிறைவு இன்று(01.06.2013)! பலருக்கு உண்மை நிகழ்வுகள் தெரியாது! (Part 8)

6. "State Terrorism" in Jaffna - V. Yogeswaran Member of Parliambet for Jaffna

நாச்சிமார் கோவிலடியில் மே 31 இரவு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காவலுக்கு நின்ற நான்கு பொலிசாரில் இரண்டு பொலிசார் சுடப்பட்டதன் பின்னர் கலவரங்கள் ஆரம்பமாகியது.அன்றிரவு யாழ்ப்பாணமத்திலுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகமும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. வெ. யோகேஸ்வரன் அவர்களின் இல்லமும் எரிக்கப்பட்டன.இப்புத்தகம் நேரடியாகப் பாதிக்கப்பட்ட ஒருவரின் சாட்சியம். அது முக்கியமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.மொத்தம் 12 பக்கங்களை உள்ளடக்கியது அவரது கடிதம்.

7. ஒரு வரலாற்றுக் குற்றம் - NON

சுவிற்சர்லாந்தில் நான் இருந்த காலப்பகுதியில் எனது கரங்களுக்கு கிடைத்த இப்புத்தகத்தில் முழுவதுமே பிழையான தகவல்கள் - அவர்கள் தாமாகவே கற்பனை செய்து எழுதியுள்ளார்கள் போலத் தெரிகிறது. இதை நான் பின்பு விபரிக்கின்றேன்.