அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, April 10, 2014

இன்று சிவயோக சுவாமிகளின் 50ஆவது குருபூசை!


ஈழத்துச் சித்தர் பரம்பரையில் யாழ்ப்பாணத்து விசர்ச் செல்லப்பா சுவாமிகளைப் பற்றி பலரும் தெரிந்திருப்பார்கள்! அவரது சீடரான சிவயோகசுவாமிகளின் 50ஆவது குருபூசைத் தினம் இன்றாகும் - பங்குனி ஆயிலியம்! யாழ்ப்பாணத்துக் கடைவீதிகளிலும் - நல்லூர்த்தேரடியிலும் இன்னும் பல வேறு இடங்களிலும் சுற்றித் திரியும் சுவாமிகளுக்கு பல அடியார்கள் பக்தர்களாக இருக்கிறார்கள். அவரை நேரடியாக காணாதபோதிலும்- அவரது சரிதத்தை அறிந்து வைத்திருக்கும் நான் அவரது சீடரான அமெரிக்க சைவசித்தாந்த திருச்சபையின் ஸ்தாபகர் ஸ்ரீ சிவாய சுப்பிரமுனிய சுவாமிகளின் அளவெட்டி ஆச்சிரமத்தில் 1985ஆம் ஆண்டுகளில் பணியாற்றினேன். திருச்சபையின் அமைச்சராக இலங்கையில் பணிபுரிந்த கலாநிதி சோ.சண்முகசுந்தரம் ஐயா யோக சுவாமிகளின் வாழ்வு அனுபவத்தை மிக அருமையாகச் சொல்லக் கேட்பேன்!
ஏறக்குறைய 28 வருடங்கள் மானசீகமாக சுவாமிகளை வழுத்திவருகிறேன். நற்சிந்தனையின் எழுக புலருமுன் ஏத்துக பொன்னடி என்ற பாடலில் தன்னைப் போலச் சகலமும் ஓம்புக விண்ணைப் போல வியாபகமாகுக கண்ணைப் போலக் காக்க அறத்தை ... என்ற இந்த 3 வரிகளை ஏனோ என்மனம் இறுகப்பற்றியது! இன்றும் உயிருடன் - வாழ்வதற்கும் இதுவே உற்ற துணையென நான் உணர்கிறேன். இன்றைய நாட்டு நிலையை கருத்தில்வைத்து சுவாமிகள் சொன்னதாக நான் கேட்ட அடிவாங்கிச் சாகப்போறாங்கள்! அடிபட்டுச் சாகப்போறாங்கள்! எப்பவோ முடிந்த காரியம் - ஒரு பொல்லாப்புமில்லை - யாமறியோம் - முழுதும் உண்மை. இந்த வார்த்தைகள் இன்றைய நிலைக்குப் பொருத்தமாகவே அமைகிறது. எமக்குள் அடிபட்டுச் செத்ததையும் - மற்றவர்களிடம் அடிவாங்கியதையும் சொல்லலாம். இன்றைய குருபூசை நன்னாளில் - எம்மை நல்வழிகாட்ட - அவரது பாடல்களான நற்சிந்தனையை நாம் படித்து முன்னேறுவோமாக!

No comments: