அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Wednesday, April 30, 2014

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஒதுங்குதல்!


யாழ்ப்பாணம், 30.04.2014.

திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள், செயலாளர் நாயகம், தமிழர் விடுதலைக் கூட்டணி.

அன்புடையீர்,

தாங்கள் இருக்கும்வரை எமது கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் தாங்கள் எமது கட்சியைவிட்டுப் போகும்வரை அல்லது உங்களது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ள படியால் இத்தால் நான் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறியத் தருகிறேன். கடந்த 6.4.2014, மற்றும் 28.4.2014 உங்களுடன் வாக்குவாதப் பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத்தருகிறேன். மேலும் சில விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனபதற்காக இலக்கமிட்டுப் பிரச்சினைகளையும் உங்களுக்கு விளக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.

1. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் சபைக் கூட்டம் கடந்த 5.4.2014 சனிக்கிழமை நடைபெற ஏற்பாடுகள் செய்தபொழுது நியாயமாக நீங்களும், மற்றயவர்களும் செயற்பட்டீர்களா என்பதை உங்களிடம் வினவ விரும்புகிறேன். இக்கூட்டத்திற்கு பல உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பாமல் தவிர்த்தமை எதற்காக?

2. புதிதாக வவுனியாவில் ஒரு கிளையை ஆரம்பித்து தலைவராக முன்னைய ஈபிஆர்எல்எப் பா.உ திரு. இராஜா குகனேஸ்வரனைத் தெரிவுசெய்து அதன் உறுப்பினர்களை இக்கூட்டத்துக்கு அழைப்பித்து அவர்களால் 5ஆந்திகதிக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதையும் பல எமது கட்சியின் பழைய உறுப்பினர்கள் இதனால் மனமுடைந்து கூட்டத்திலிருந்து வெளியேறியதையும் நீங்கள் அறிவீர்களா?

3. நீங்கள் பேசும்போது உங்கள் பேச்சை எல்லோரும் கேட்கவேண்டும். ஆனால் மற்றவர்கள் பேசும்போது அதை இடைநிறுத்தி அல்லது அதற்கு ஏதேனுமொரு மறுமொழி கூறி பேச்சைக் குழப்புவதும் பேசவந்த விடயங்களை பேச முடியாதவாறு குறுக்கீடு செய்வதால் முழுமையான அவர்கள் கருத்துக்கள் தெரிவிக்காமல் போவதும் சில வேளைகளில் பேச்சை முடிக்குமாறு கூறி தடுப்பதும் நியாயமா? இது 5.4.2014 கூட்டத்தில் நடைபெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த நடைமுறை நான் கட்சியிலிருந்த கடந்த 1990 களிலிருந்து உங்களால் மட்டுமல்ல, சம்பந்தன், சிவசிதம்பரம் ஆகியோர் ஏன் அதற்கு முன்பு 1977களின் பின் அமிர்தலிங்கம் காலத்திலிருந்து நடைபெறுகிறது - இதற்கு ஒரு தடவை கொழும்பு திம்பிரிகஸ்யாய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திரு. இரா. சம்பந்தனுக்கு திருகோணமலை ஈழத்துநாதன் சொன்ன கருத்துத்தான் எனக்கு நினைவுக்கு வருகிறது! அதாவது கட்சியில் நீங்கள் சொல்லுபவை எல்லாம் கேட்கவேண்டும் என்பதற்காக நாம் ஒன்றும் தெரியாதவர்கள் என்று எம்மை எண்ணி விடாதீர்கள்! கட்சியில் எல்லாருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு. பதவியை வகிப்பதால் நீங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை மாற்றிவிடுங்கள்!

4. சாதாரணமாக ஒரு அங்கத்தவரைச் சேர்ப்பதென்றால் அவரது விண்ணப்பப்படிவம் பொதுச்சபையில் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுவதே முறை இந்த நடைமுறை 2004களின் பின் நடைமுறையில் இருக்கிறதா என்பதே எனது அடுத்த கேள்வி.

5. கடந்த 2003இன் பின் ஏற்பட்ட சில முக்கிய பிரச்சனைகளால் அன்றிலிருந்து இன்றுவரை 2003 – 2009 வரை விடுத்தாலும் 2009 இல் நடைபெற்ற எல்லா அழிவுகளின் பின்னரும் நீங்கள் ஒருவரே கூட்டமைப்புத் தலைவர்களையும் சில உறுப்பினர்களையும் விமர்சித்து கடிதங்கள் எழுதிவருகிறீர்கள். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் பெருந்தன்மையுடன் இருப்பதால் உங்களின் நடவடிக்கை எல்லை மீறிப் போவதை நாம் சிலர் கட்சியில் இருந்தும் எதுவித கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது உங்களுக்கு வாய்ப்பாக இருக்கிறது போலத் தெரிகிறது. இதுவரை காலமும் சிலவேளை உங்களிடம் நேரடியாக கருத்துக்களைத் தெரிவித்து வாக்குவாதப் பட்டிருந்தாலும் இன்று உங்கள் பாணியில் உங்களுக்கு ஒரு கடிதம் வரைய முடிவெடுத்துள்ளேன். ஏனெனில் உங்களுக்கு சில விடயங்கள் தெரியாமல் நினைத்த பாட்டுக்கு எழுதிவருகிறீர்கள். ஆனால் நான் ஆதாரத்தோடே எழுதுகிறேன்.

6. 1977இல் தமிழரசுக்கட்சியின் சின்னம் தேரதலில் பாவிக்கப்பட்ட பின்னர் முடக்கி வைக்கப்பட்டதாக எழுதிவருகிறீர்கள். அதற்கு முன் உங்ளுக்குத் தெரியாத ஒரு விடயம் 1989 ஆடி 13 அமரர்கள் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் கொல்லப்பட்ட பின் மாவை. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா கூட்டிய சர்வகட்சி மாநாட்டில் பிரதிநிதிகள் - கட்சி சார்பில் கலந்து கொண்ட போது அதிகமானவர்கள் கலந்து கொள்ள வசதியாக எமது கூட்டணியிலிருந்தும் தமிழரசுக் கட்சியிலிருந்தும் அந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்கள். குறிப்பாக நீங்கள் அந்தக் காலத்தில் இங்கிருக்கவில்லை. இந்தியாவுக்கு அடிக்கடி போய் வருவீர்கள்! நீலன் திருச்செல்வம், சட்டத்தரணி சிவபாலன் ஆகியோர் கூட்டணி சார்பிலும், தங்கத்துரை, சின்னத்துரை ஆகியோர் தமிழரசுக் கட்சி சார்பிலும் கலந்து கொண்டார்கள். திரு. சேனாதிராசா பாராளுமன்ற உறுப்பினர் என்ற கோதாவில் கூட்டணி சார்பில் கலந்து கொண்டாரா அல்லது தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்று அந்தக் கட்சியில் பங்கு கொண்டாரா என்பதை அவரிடம் தான் கேட்டுத் தெரிய வேண்டும். திரு இராஜேந்திரனும் இடைக்கிடை போனதாக ஞாபகம். 2004 இல் புலிகளை ஏகப்பிபரதிநிதிகளாக ஏற்றுக் கொண்ட கூட்டணியினரின் பெரும்பாலானோரும், விடுதலைப் புலிகளும், ஏனைய இயக்கங்களும் தாம் தேர்தலில் நிற்பதற்காக தமிழரசுக் கட்சியை தெரிவு செய்தார்கள். என்னதான் ஆயுதப் போராட்டத்தை ஏற்றிருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தல் என்று வரும்போது தந்தையின் பெயரையும் அவரது கட்சியின் சின்னத்தையும் பாவித்தாலேயே தமக்கு வாய்ப்பு உண்டு என்பதை நன்கு அறிந்து அதில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்கள். பேச்சுவார்த்தை சரிவராது என்றுகூறி ஆயுதப் போராட்டம்தான் தீர்வு என்று புறப்பட்ட அனைவரும் 1983 – 1987 காலங்களில் கூடுதலாக எமது கட்சியை விமர்சித்தே வந்தார்கள்! கூட்டணித் தலைவர்களில் ஒரு சிலரைக் கொன்றதும் இவர்களே! பாராளுமன்றை அவமதித்து உறுப்பினர்களைக் கொன்று மக்களுக்கு விடிவுதேடப் புறப்பட்டவர்கள் இன்று மக்களை மறந்து சுகபோகம் அனுபவிக்கிறார்கள்! இதில் விடுதலைப் புலிகளின் அரசியற்கட்சி பதிவிலிருந்தும் அவர்கள் தமது சின்னத்தையோ கட்சிப் பெயரையோ எந்தத் தேர்தலிலும் பாவிக்கவில்லை. ஆனால் இரு தடவைகள் தந்தையின் கட்சியான எமது கூட்டணி தமிழர்பகுதியில் தேர்தலில் பெரும்பான்மையாக வராது போனதை நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். காலத்தின் தேவைகருதி நான் அதைக் குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று 1989இல் நடந்த பாராளுமன்றத் தேர்தல் மற்றது 1994 பாராளுமன்றத் தேர்தல். இந்த 2 தேர்தல்களிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கு கிழக்கில் பெரும்பான்மையைப் பெறவில்லை. 1989இல் ஈரோஸ் அமைப்பின் சுயேட்சைக் குழு 13 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. கூட்டணிக்கு 10 இடங்கள். 1994இல் ஈபிடிபிக்கு 9 ஆசனங்கள் கூட்டணிக்கு 5 ஆசனங்கள்.

7. எல்லாக் கடிதங்களிலும் திரு. சேனாதிராசாவை நான்தான் பாராளுமன்ற உறுப்பினராக்கினேன் என்று குறிப்பிடுகிறீர்கள். நீங்கள் மட்டும் அல்ல. கட்சியின் எல்லா உறுப்பினர்களும் இணைந்தே அந்த முடிவை எடுத்தார்கள்! உங்களுக்கு ஆசையிருந்திருந்தால் அதை சொல்லியிருக்கலாம். உங்களால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் பலரும் எம். பி பதவியில் ஆசைப்பட்டிருந்தார்கள் என்பதை நான் அறிவேன். 1994தேர்தலின் பின் திருமலையில் தோல்வியடைந்த இரா. சம்பந்தனும், அம்பாறையில் தோல்வியடைந்த மாவை. சேனாதிராசாவும் ஆதரவாளர்களுடன் வந்தபோது நல்லவேளை வவுனியாவில் தலைவர். சிவசிதம்பரத்திற்கு அடுத்ததாக நீங்கள் வந்தபடியால் சிவசிதம்பரம் கண்டிப்பாக வவுனியாக் கிளையினருக்கு கூறிவிட்டார் - ஒருவரும் வரப்படாது என்று. தேசியப்பட்டியலில் பெயர்குறித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அந்த கூட்டத்தில் அடுத்தவர்கள் பதவிக்கு ஆசைப்படும் கதைகளைப் பார்த்து இறுதியில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தபோது கண்கலங்கியது இன்றும் எனக்கு ஞாபகத்திலிருக்கிறது.

8. நான் அதிகம் பழைய வரலாறுகளைக் குறிப்பிட விரும்பவில்லை. ஆனாலும் அமரர் மு. சிவசிதம்பரத்தின் மறைவின்பின் பெயர் குறிப்பிடப்பட்ட திரு. முத்துலிங்கத்துக்கு எம்.பி பதவி வழங்காது சம்பந்தனும், ஜோசப்பும் அவரது எடுபிடிகளும் சிவசிதம்பரத்தின் பூதவுடலுக்கு தீமூட்டியவுடனேயே முகமாலைக்குப் போய் விடுதலைப் புலிகளிடம் கோள்மூட்டிய நிகழ்வுகளையும், அதன்பின் எமது கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட்டதும் நாம் மறப்பதற்கில்லை.

9. கடந்த மாகாண சபைத் தேர்தலில் 5 கட்சிகளின் தலைவர் என்ற கோதாவில் நடைபெற்ற கூட்டத்தில் நீங்கள் இதய சுத்தியோடு பங்குபற்றினீர்களா? முதலாவது கூட்டத்தில் பங்குபற்றிய பிறகு எச்சந்தர்ப்பத்திலாவது நீங்கள் அவர்களுடன் தொடர்பு கொண்டீர்களா? தேர்தல் நியமனப் பத்திரத்தில் கையெழுத்திட முதன்முதல் தமிழரசுக் கட்சி அலுவலகத்திற்குப் போனபோது, சிறிது நேரம் கழித்து நான் அங்கு வந்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

10. கடந்த 27ஆந்திகதி கடைசியாக நான் பிரச்சினைப்பட்ட விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உங்களிடம் தருமாறு கோரி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுத முற்பட்டபோதே! அதாவது பத்திரிகைகளுக்கு 2001இல் வெளியிட்ட கடிதத்தைக் காட்டி தேர்தல் ஆணையாளரிடம் நியாயம் கோருவது எவ்விதத்தில் நியாயம் என எனது அறிவுக்கு எட்டிய வரை உங்களுக்குக் கூறியும் நீங்கள் கடிதம் எழுதியே தீரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் கொழும்பிலிருந்து கடிதம் தயார்பண்ணி அனுப்பிவைத்துள்ளீர்கள்! இது நியாயமாக எனக்குப் புலப்படவில்லை. 2013 தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் பதவிக்காக 2004இலிருந்து கட்டிக்காத்த கொள்கையை விட்டு - வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு அவர்களது துரோகத்தனத்தால் படுதோல்வியடைந்த பின் தேவையற்ற விதத்தில் இருக்கும் கொஞ்ச மரியாதையையும் இழக்கவே இந்தப் புதிய தாண்டவம் ஆடுகிறீர்கள்! கடிதம் எழுதியே சாதனை படைக்கும் நீங்கள் 2009இன் பின் யுத்தம் முடிவடைந்த பிறகு கூட்டமைப்பால் ஒழுங்காக நிரப்பப்படாது நிராகரிக்கப்பட்ட 2 சபைகளில் வெற்றிபெற்ற வாக்குகளைக் கூட தக்கவைக்க முடியவில்லை! 2000ஆம் ஆண்டு தேர்தலில் யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த திரு. சித்தார்த்தன் கடந்த மாகாணசபைத் தேர்தலில் 3ஆவதாக வர முடியுமானால் நீங்கள் இங்கு போட்டியிட்டிருந்தால் கட்டாயம் வெற்றிபெற்றிருக்க முடியும். ஆனால் வம்புக்கு கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருடன் மல்லுக்கட்டப் போய் கடைசியாக நீங்கள் உங்கள் கட்சி உறுப்பினர்களிடமே வாங்கிக்கட்டியதுதான் மிச்சம். 2010 பாராளுமன்றத் தேர்தலில் தெரிவான கௌரவ. சிறீதரனின் அலுவலகம் இருக்கத் தக்கதாக கிளிநொச்சியில் எமது கட்சி அலுவலகத்தை திடீரென கூட்டமைப்பு அலுவலகமாக மாற்றியபோதே உங்கள் இயலாமை தெரிந்துவிட்டது.

இறுதியாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அ. அமிர்தலிங்கம் அவர்கள் மட்டுமல்ல கூட்டணியே 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் நடைபெற்ற வன்செயல்களுக்காக குறிப்பாக நூலக எரிப்புக்கு சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தது. தலைவர் சிவா ஐயா மிக அருமையாக இந்தவிடயங்களை நடைபெற்ற உண்ணாவிரதக் கூட்டங்களில் தெரிவித்திருக்கிறார். 1983 கலவரங்கள், அதன்பின் 2009வரை நடைபெற்ற அனர்தங்களுக்கு இப்போதுதான் ஒரு விடிவு தெரியும்போது உங்களுடைய முட்டாள்த்தனமான அறிக்கைகள் நீங்கள் தமிழருக்காக அரசியல் செய்கிறீர்களா அல்லது பெரும்பான்மையினத்துக்கு சாதகமான அரசியல் செய்கிறீர்களா என சாதாரண பொதுமகனுக்கு மாத்திரமல்ல எங்களுக்கே புரியாமல் பெரும் குழப்பமாக இருக்கிறது. நீங்கள் கூட்டணியில் இருக்கும்வரை கடிதம் எழுதும் பணியை மாத்திரமே செய்வீர்கள்! மக்களுக்கு எந்தவிதமான உருப்படியான பணியை - கூட்டமைப்பில் எவருமே செய்வதாக இல்லை! இதில் நீங்களும் அடங்குவீரகள்! நாம் ஏதாவது செய்ய வேண்டும் - இல்லாவிட்டால் ஒதுங்கியிருப்பது மேல் எனக் கருதி இம்முடிவை எடுத்துள்ளேன்.

என்றும் மக்கள் நலனில் அக்கறையுள்ள,

(ஒப்பம்)தங்க. முகுந்தன்.

No comments: