அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label நல்லூர். Show all posts
Showing posts with label நல்லூர். Show all posts

Sunday, August 11, 2013

நல்லை நகர்க் கந்தனுக்கு நாளை கொடியேற்றம்!

நல்லை நகரில் வீற்றிருக்கும் அலங்காரக் கந்தனுக்கு நாளை 12.08.2013 திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றம் நடைபெறவுள்ளது. இன்று காலை கொடிச்சீலை ஆலயத்திற்கு இரதத்தில் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 25 நாட்களுக்கு திருவிழா நடைபெற இருக்கிறது. வழமைபோல இன்றே நாமெல்லோரும் நல்லூர் முருகப்பெருமானுடைய திருவிழாவுக்கு ஆயத்தமாகிவிட்டோம்! இனி என்ன 25 நாட்களும் சகலதையும் மறந்து தமிழ்த் தெய்வமான ஆறுமுகப் பெருமானை பல்வேறு அழகான தோற்றங்களில் காண ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்! நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனடி என்பது யோகர் சுவாமிகள் வாக்கு!

Wednesday, August 8, 2012

நல்லூர் முருகனின் 15ஆம் நாள் திருவிழாவில் பிறந்த பிறப்பின் பயனைப் பெற்றேன்!

நேற்று 07.08.2012 செவ்வாய்க் கிழமை நல்லைக் கந்தனுடைய 15ஆம் நாள் திருவிழா. மாலைத் திருவிழாவில் வேற்பெருமானும் தேவியர் இருவரும் அடியார்களின் திருமுறைப் பாராயணத்துடன் உள்வீதியில் எழுந்தருளியபோது அடியேனுக்கும் அதில் பங்குபெறும் பாக்கியம் கிடைத்தது!
என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீ புரி நல்வினைப் பயனி......என்ற சம்பந்தரின் தேவாரப் பாடலுக்கு ஒப்ப வாழ்க்கையிலே என்றும் கிடைக்கப்பெறாத அந்த அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. நல்லூர்க் கந்தனுடைய திருவருளினையும் அத்தலத்தின் பெருமையையும் நாம் தொடர்ந்தும் அனுபவித்தும் கட்டிக்காத்தும் வருவோமாக!
நன்றி - நல்லூரான்.கொம்

Tuesday, August 7, 2012

சிறப்பாக நடந்த நல்லைக் குமரன் மலர் வெளியீடு!

நேற்றைய தினம் (06.12.2012 திங்கட்கிழமை) காலையில் நாவலர் கலாச்சார மண்டபத்தில் யாழ் மாநகர சபையின் ஆணையாளர் திரு. செ . பிரணவநாதன் அவர்களின் தலைமையில் நல்லைக் குமரன் மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவிற்கு பிரதம விருந்தினராக மாநகர சபை முதல்வர் திருமதி. யோ. பற்குணராசா கலந்துகொண்டார். நல்லை குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சின்மயாமிஷன் சுவாமி சைதன்யானந்தா மற்றும் பருத்தித்துறை சாரதா சேவாச்சிரம சுவாமிகள் சித்டூபானந்தா ஆகியோரின் ஆசியுடன் ஆரம்பித்த விழாவில் பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து வழமைக்கு மாறாக இம்முறை நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபையினருக்கு யாழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 20ஆவது நல்லைக் குமரன் மலரின் வெளியீட்டுரையை பதிப்பாசிரியரும் வலம்புரி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான திரு. ந. விஜயசுந்தரம் கழ்த்தி வெளியிட்டு வைத்தார். முதற்பிரதியை வழமைபோல தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தினர் பெற்றுக் கொண்டனர். ஆய்வுரையை பேராசிரியர் திரு. கி. விசாகரூபன் அவர்கள் நிகழ்த்தினார். பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Thursday, August 4, 2011

மறக்க முடியாத நல்லூர்! திருவிழா இன்று ஆரம்பம்!


என் வாழ்க்கையில் மறக்க முடியாத சில சம்பவங்களுள் நல்லூர்த் திருவிழா ஒரு தனியான இடத்தை வகிக்கும்!
சிறு வயதில் எமது கிராமத்துப் பாடசாலை மூலம் அப்போதைய யாழ்ப்பாணப் பட்டணத்துக்கு சுற்றுலா போனது இன்றும் நல்ல ஞாபகம்!
வரும்வழியில் கல்லுண்டாயிலுள்ள உப்பளத்திற்கும் போய் உப்பு விளைவதையும் கண்டுவந்தோம்!
இது நடந்தது 1973 – 1974 காலப்பகுதிகளில் - இற்றைக்கு சுமார் 37 வருடங்களுக்கு முன்னர்.

நல்லூர்க் கோவிலுக்குப் போகுமுன்பு யாழ்ப்பாணப் பட்டணத்திலுள்ள – பழைய சந்தை – வள்ளுவர் - ஓளவையார் - பாரதியார் சிலைகள் – யாழ்ப்பாணக் கோட்டை – நூல்நிலையம் - இவற்றைப் பார்த்த பின்பு நல்லூருக்கப் போனோம்!
அப்போது கோவில் கேணி – தண்டாயுதபாணி கோவில் தனியாக பிரதான வீதிக்கு அந்தப் பக்கம் இருந்தது! அருகில் நாவலர் சிலை மண்டபம்!
இதற்கு முன்பாக கோவில்! கோவிலுக்கு அருகில் வெளியிலேயே ஒரு கூட்டில் அழகான மயிலும் இருந்து அகவியதை இப்போதும் மறக்க முடியாது!


இதன் பின்னர் 1977ல் தேரின்போது பஜனை பாடியதும் ஞாபகம்!

நல்லை நகர் வீற்றிருக்கும் கந்தா நின் சரணம்!
தொல்லைகளைத் தீர்த்தருள்வாய் கந்தா உன் சரணம்!
இல்லை உனக்கீடு என்றோம் கந்தா உன் சரணம்!
இடகரற்ற குரல் கொடுத்தோம் கந்தா உன்சரணம்!

பார்வதியாள் பெற்றெடுத்த பாலா உன் சரணம்!
பார்த்தருள்வாய் பைந்தமிழைக் காத்தருள்வாய் சரணம்!

இதற்குப் பின் 1984 – 1987 காலப் பகுதிகளில் மூளாய் இந்து இளைஞர் மன்றத்தின் அங்கத்தவராயிருந்த சமயம் - யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவை - நல்லை ஆதீனத் தொண்டர் சபை மூலம் நல்லூர் மகோற்சவ காலம் 25 நாட்களும் ஆலயத்தின் சுற்றாடலில் நாம் எம்மாலியன்ற தொண்டையும் பணிகளையும் மேற்கொண்டோம்!

ஒரு தடவை சரியாக எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை 1985 அல்லது 1986 ஆக இருக்க வேண்டும் தீர்த்த நாளன்று அதிகாலை 4மணிக்கு எழுந்து காலைக்கடன் முடித்து கோவிலுக்கு வந்தால் கோவிலின் பிரதான வாசற்கதவு பூட்டப்பட்டிருந்தது! பக்தர்கள் கோவிலின் வாசற்கதவை முண்டியடித்தபடி இருந்தனர்! உள்ளே பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இயக்க இளைஞர்கள் சிலர் கோவில் கூரையின் மேல் எதையோ தேடுவதுபோல இருந்தது! நாங்கள் ஒரு 5,6 தொண்டர்கள் என்னவென அறிவதற்கு முயற்சி எடுத்தோம். கோவிலினுள் யாரோ குண்டு வைத்துவிட்டார்கள் என்ற கதை அடிபட்டது! நானும் ஓரிரு தொண்டர்களும் வாயிற்கதவுக்கு போய் பக்தர்களை அமைதிப்படுத்துவது என முடிவு செய்தோம். மிகவும் சிரமப்பட்டு நெரிசலுக்கு மத்தியில் வாயிற் கதவையடைந்தோம். இரும்புக் கதவை தள்ளியபடி கூட்டம் நெருக்கியடித்துக் கொண்டிருந்தது! நாங்கள் அவர்களுக்கும் கதவுக்கும் இடையில் சென்று கூட்டத்தை சற்றுப் பின்னகர்த்தி இருக்கும்படி சொன்னோம்! பக்தர்களில் பலர் எமது கருத்தை ஏற்று அமர்ந்திருந்தனர். ஒரு சில வயதான ஆண்கள் இருத்தி என்னத்தைச் சாதிக்கப் போகிறீர்கள் என்று கோபமாகக் கேட்டனர். நீங்கள் நின்று என்ன சாதிக்கிறீர்கள் என்று நான் பதிலுக்குக் கேட்டேன். முருகன் மீது உண்மையான பக்தி வைத்து விரதமிருந்தால் எப்படியும் தீர்த்தம் நாம் பார்க்கலாம்! என்று சொல்லி அடக்க முடியாத கோபத்தால் எனக்கு அழுகையும் வந்து விட்டது. ஒரு சில வயதானவர்கள் தம்பி இவர்களைத் திருத்த முடியாது நீர் ஏன் இவர்களுடன் சண்டையிடுகிறாய் என எனக்குப் பரிந்து பேசினார்கள்! இப்படி நாமும் அவர்களும் சண்டைபிடித்துக் கொண்டிருக்கும் வேளையிலேயே கோவிலினுள் ஒன்றும் இல்லை என கோவிற்கதவையும் திறந்து விட்டார்கள்! தீர்த்தம் மிகச் சிறப்பாக நடைபெற்றது!

1987இல் திருவிழா முடிந்த பின்னர் ஒக்டோபரில் 10.10.1987இல் புலிகளுக்கும் - இந்திய இராணுவத்திற்குமிடையில் போர் தொடங்கிய நாள் ஒரு சனிக்கிழமை!
புரட்டாதிச் சனிக் கிழமைகளில் வண்ணை ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் கோவிலில் சனீஸ்வரருக்கு எள்ளெண்ணெய்ச் சட்டி எரிப்பவர்களுக்கு வசதியாக நாம் எரிந்த சட்டிகளை எடுத்து அப்புறப்படுத்தவது எமது பணி! இந்த நேரத்தில்தான் சண்டை தொடங்கியது. மதியம் ஒரு மணியிருக்கும். பலத்த குண்டுச் சத்தங்கள். பக்தர்கள் வருகை குறையவே ஆலயத்தையும் பூட்ட ஆயத்தமாக நாம் எமது வீடுகளுக்குச் சென்றோம். அப்போது நான்
கந்தர்மடம் பழம் றோட் பிள்ளையார் கோவில் ஐயா வீட்டில் தங்கியிருந்தேன்! கோவிலிலிருந்து திரும்பிய பின் சிலமணி நேரம் கழித்து எனது நண்பனொருவன் அவசரமாக வந்து "வாடா! நிறையச் சனம் காயப்பட்டுக் கிடக்காம்! உதவ யாருமில்லையாம்! நாங்கள் போவோம்" என்று சொல்ல நானும் அவனுடைய சைக்கிளில் ஏறிப் போனேன்! ஸ்ரீதர் தியேட்டருக்கு முன்பாக நாம் செல்லும்போது பிள்ளையார் கோவிலுக்கு முன்னால் விழுந்து ஒரு குண்டு வெடித்தது! ஒரு பெடியன் சைக்கிளுடன் விழுவதைப் பார்த்தோம்! அவனுக்கு உதவ நாம் விரைந்த போது மீண்டும் ஒரு குண்டு அதே இடத்தில்!

மீதி நாளை!

நல்லூர்க் கோவிலில் இடம் பெயர்ந்தவர்கள் பற்றிய செய்தியும் அடங்கும்!

Saturday, August 14, 2010

நல்லூரைக் கும்பிடு! - நாளை கொடியேற்றம்!

வழமைபோல நல்லூர் முருகனின் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது! யாழ்ப்பாணக் குடாநாடே விழாக் கோலம் பூண்டுவிடும்.2006இல் இருந்து கடந்த 5 வருடங்களாக முருகனைக் காணாமல் மனம் தவியாய்த் தவிக்கிறது! எப்போது மீண்டும் ஒருதடவைவந்து தேரடியிலும் உள்ளே கொடித்தம்பத்துக்கு முன்பாகவும் விழுந்து கும்பிடுவேன் என்றிருக்கிறது!

கடந்த வருடம் வெளியாகிய நல்லைக் குமரன் மலரிலிருந்த எழிலான படங்களை இணைத்துள்ளேன்.










பல்லவி

நல்லூரைக் கும்பிட்டு நீ பாடு - அதனாலே
நாட்டிலுள்ள பிணிகள் ஓடும்

அநுபல்லவி

செல்லாதே வெறுங்கையாய் செல்லப்பன் வாழ்ந்த நாடு
தேங்காயுடன் பழம் கொண்டு நீ செல்லு

சரணம்

வாடி உன் மனம் ஓடினாலும் வருத்தங்கள்
கோடிகோடியாகக் டினாலும் குறைகள் வந்து
தேடி உன்னை மூடினாலும் செல்லப்பன் பாதம்
சிந்தித்தால் ஓடிப் போமே!
பெண்டு பிள்ளைகளென்று பேதைமை கொண்டு நீ
கண்ட கண்ட இடம் கலங்கி நீ திரியாதே!


(யோகர் சுவாமிகளின் நற்சிந்தனை)

Friday, August 21, 2009

நல்லூர்த் திருவிழா - 25நாட்களும் ஓடிவிட்டன!

20.08.2009 வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கொடியிறக்கத் திருவிழாப் படங்கள்!










படங்களுக்காக நல்லார்முருகன்.கொம் இணையத்தினருக்கு நன்றிகள்!

Wednesday, August 19, 2009

நல்லூரான் இவ்வருடம் வழமைக்கு மாறாக இரண்டரை மணி நேரத்துக்குமேல் வெளிவீதியில் இருந்து அருள் பாலித்தாராம்!

தேர்த்திருவிழாவின்போது வழமையாக ஒரு மணி நேரம் வெளிவீதியிலிருந்து அருள்பாலிக்கும் செந்தமிழ்க் கடவுளான நல்லூர் முருகப் பெருமான் இவ்வருடம் இரண்டரை மணித்தியாலயங்களுக்கு மேல் வெளிவீதியில் இருந்து அருள்பாலித்தாரென்று சற்று நேரத்துக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது செய்தி அறிந்து பேரானந்தம் அடைந்தேன்.












படங்களுக்காக நல்லூர்முருகன்.கொம் இணையத்தினருக்கு நன்றிகள்!

திருவிழாப் படங்களைப் பார்ப்பதற்கு http://nallurmurugan.com

பிரசித்திபெற்ற யாழ்ப்பாண நல்லூர்க் கந்தனின் தேர்த்திருவிழா இன்று!

நாட்டைவிட்டு வெகு தூரத்தில் இருந்தாலும் நல்லூர் அலங்காரக் கந்தனின் 25 நாள் திருவிழாக் காலத்தை எளிதில் மறக்க முடியாது! மகோற்சவ காலங்களில் நாம் யாழ் மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தொண்டராகவும் பின்னர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தொண்டராகவும் பணியாற்றிய காலகட்டங்களை சுலபமாக மறந்தவிட முடியாது! எம்முடல் இன்று இங்கிருந்தாலும் ஆன்மா அங்குதான் சுழன்று கொண்டிருக்கிறது!

இம்முறையும் திருவிழாக் காலங்களில் அடிக்கடி பலருடன் தொடர்பு கொண்டபடி அங்கு நடைபெறும் அனைத்து விடயங்களையும் உடனுக்குடன் தெரிந்து ஆன்மீக அனுபூதி கிடைத்தவண்ணமே இருக்கிறது! இன்று நடைபெறும் தேர்த் திருவிழாவை இங்கிருந்தபடியே மனமுருகித் தொழுது எம்மினத்தின் இடர் களைந்து - மக்களின் கௌரவமான வாழ்க்கைக்கு வழியேற்படுத்த அனைவரும் பிரார்த்திப்போமாக!
இன்றைய நன்னாளில் தேரடிச் செல்லப்பரின் சீடர் சிவயோக சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடலில் குறிப்பிட்ட நல்லூரான் கிருபை வேண்டும் என்ற பாடல்கள் இரண்டையும் பதிவிலிட்டு எம்மக்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

நல்லூரான் கிருபை வேண்டும் - 1

நல்லூரான் கிருபை வேண்டும் - வேறென்ன வேண்டும்
நம்மைப் பிரியானென நம்பிட வேண்டும் - (நல்லூரான்)

எல்லாரிடத்தும் அவன் இருப்பதைக் காணவேண்டும்
கொல்லாமை கள்ளாமை கோபத்தை நீக்க வேண்டும் - (நல்லூரான்)

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா இருக்க வேண்டும்
அல்லும் பகலுமவன் அடியிணையே தொழவேண்டும் - (நல்லூரான்)

உல்லாசமாக உலகிற் றிரிய வேண்டும்
ஓம் சிவாய நமவென ஓதிக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

பல்லோர் புகழ் நல்லூர்ச் செல்லப்பன் பாதத்தை
பக்தியாய்க் கும்பிட்டுப் பாடிட வேண்டும் - (நல்லாரான்)

சொல்லும் யோகசுவாமி தோத்திரப் பாடலை
எல்லோரும் கேட்டு மகிழ்ந்திட வேண்டும் - (நல்லூரான்)


நல்லூரான் கிருபை வேண்டும் - 2

இராகம் - சுருட்டி தாளம் ஆதி

பல்லவி

நல்லூரான் கிருபை வேண்டும் - நாம் எந்நாளும்
பாட வேண்டும் - வேறென்ன வேண்டும் - (நல்லூரான்)

அநுபல்லவி

சொல்லும் பொருளுமற்றுச் சும்மா விருக்கவேண்டும்
தூய குருவின் பாதம் துணையாகக் கொள்ள வேண்டும் - (நல்லூரான்)

சரணங்கள்

அல்லும் பகலுஞ் சிவ நாமத்தைச் சொல்லவேண்டும்
ஆசை மூன்றையும் அடியோடு கொல்லவேண்டும்
கண்டு கண்டு மனங் குளிர்ந்திட வேண்டும்
காமக் குரோத மோகத்தைத் தீர்க்க வேண்டும் - (நல்லூரான்)

பொறிவழி போய் மனம் அலையாமை வேண்டும்
பூரண மான நிட்டையும் வேண்டும்
எல்லா ரிடத்துமன்பு செலுத்த வேண்டும்
எழில்பெறுஞ் சுழுமுனை வழிச்செல்ல வேண்டும். - (நல்லூரான்)