அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label பொன். சிவபாலன். Show all posts
Showing posts with label பொன். சிவபாலன். Show all posts

Saturday, September 11, 2010

முன்னாள் யாழ் முதல்வர் அமரர் பொன் சிவபாலன் அவர்களின் நினைவு தினம் இன்று!



















நேரமின்மை காரணமாக எழுதுவதைத் தவிர்த்து படங்களை மட்டும் பிரசுரித்தேன். கனடாவிலிருந்து திரு. விக்னேஸ்வரன் தெய்வேந்திரம் அவர்கள் சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் - அதை அப்படியே இணைத்துள்ளேன்!

இன்று பொன் சிவபாலனின் யாழ் மேயர் 12 வது வருட நினைவு நாள். சிவபாலன் தமிழ் இனத்துக்கு மறைந்த தமிழன் தலைவன் அமிர்தலிங்கம் வழியில் தன் இளம் பருவதிலிருந்து சேவை செய்துவறும் வேளையில் 12.09.1998 தமிழ் கடவுள் முருகன் வீரூருந்து அருள்பாலிக்கும் நல்லூர் பதியில்

வைத்து கொலை செய்யபட்டர். இவரின் இழப்பு சித்தன்கேணி மக்களுக்கு மட்டுமல்லது தமிழ் மக்களுக்கும பெரும் இழப்பாகும் .

1989ஆண்டு மார்கழி மாதம் கட்டுனயாக்க சர்வதேச விமானநிலயத்தில் சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. நாம் இருவரும் எம் இந்திய பயணம் தொடர்ப்பாக எயர் லங்கா விமானத்துக்கு (UL 303) UL "Usually Late" வழமை போல் அன்றும் late. எமக்கு கிடைத்த அந்த சந்தர்ப்பம் பலத்தரப்பட விடயங்களை பரிமாற வாய்ப்பாக இருந்தது.
முக்கிய விடயம் அரசியல், சிவபாலன் அன்றைய பயணம் கூட தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் மறைந்த திரு. சிவசிதம்பரம் அவர்களை சந்திக்கும் நோக்கமாக சென்னை செல்வதாக இருந்தது .

மிக மனவேதனையுடன் தலைவர் அமிர்தலிங்கம் 1989 July 13 இல் கொழும்பில் வைத்து கொலை செய்து ஒரு பெரும் தமிழ் தலைவரை இழ்ந்து விட்டோம் என்றார். இக் கொலையால் எதனை சாதிக்கபோகின்றோம் என்று அவர் அன்று கூறியமை இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டு இருகின்றது. .

Monday, September 15, 2008

யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனின் 10வது நினைவு தினம் இன்று - பகுதி 2

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்கள் தொடர்பான சில பதிவுகளை ஈழத் தமிழர் மனசாட்சி என்ற தலைப்பில் ஒரு நினைவு மலரை கூட்டணியின் ஐக்கிய இராட்சியக் கிளை(London Branch) 2003 ஓகஸ்டில் வெளியிட்டது. அதில் எனது நிகரற்ற தலைவர் என்ற கட்டுரையின் 6வது பந்தியில்
1989இல் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்ற சிவாஐயா சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று அதன் பின் இந்தியாவில் தங்கியிருந்து 1991இல் கொழும்பு திரும்பினார். சுpல நாள்கள் ராணி வீதியிலுள்ள விடுதி இல்லத்திலும் பின் சில நாள்கள் டியூறோ ஹோட்டலிலும் தங்கியிருந்தார். தனித்திருந்த சிவா ஐயாவை எமது ஹவ்லொக் வீதி அலுவலகத்தில் திரு. தங்கத்துரை திரு. வீ. ஆனந்தசங்கரி திரு. பொன் சிவபாலன் திரு. க. சின்னத்தரை ஆகியோருடன் நானும் ஒரு கூட்டுக்குடும்பமாக வசித்தோம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
நான் இத்தொடரின் முதற்பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டிருந்ததுபோல 1989.07.13 பௌத்தலோக மாவத்தையில் பேசவென வந்த 3 விடுதலைப் புலி உறுப்பினர்களால் திருமதி சரோஜினி யோகேஸ்வரனின் கையால் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திக் கொண்டிருந்துவிட்டு தேநீர்க் கோப்பையை வைக்கப்போகும் சாட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளால் எனது பெரியப்பா அமிர்தலிங்கம் அவர்களும் மாமா என அன்புடன் அழைக்கப்பட்ட (விடுதலைப் புலிகளால் ஏற்கனவே வன்னியில் சில விரும்பத்தகாத நடவடிக்கைகளால் மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் சுகமடைந்திருந்த) திரு. யோகேஸ்வரன் அவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டும் இச்சம்பவத்தில் படுகாயமடைந்த சிவாஐயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததும் வாகசர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். இச்சம்பவம் நடைபெற்ற போது நான் சென்னையில் குளோபல் தொலைத் தொடர்பு நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கப்பநாயக்கன் தெருவில் எமது அலுவலகத்திலேயே நாம் தங்கியும் இருந்தோம். அக்காலகட்டத்தில் சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்திருந்த எமது நிறுவனத்தின் தலைவர் அமரத்துவமடைந்த சண்முகராஜா அவர்களது நண்பர் மலே முஸ்லிம் இனத்தைச்சேர்ந்த திரு. காசிம் குடும்பத்தினர் எமது அலுவலகத்திலேயே தங்கிநின்று தமது சிகிச்சைகளை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர். சிறுவயதிலிருந்து எல்லோருடன் அன்பாகப் பழகும் குணமுடைய நான் என்னால் முடிந்த உதவிகளையும் செய்து வருவது இன்றும் தொடர்ந்தபடிதான் இருக்கிறது. இவர்கள் சென்னைக்கு வந்து தங்கியிருந்தபோது முடிந்த உதவிகளைச் செய்ததும் மறக்காது போனவுடனேயே அவர்கள் நன்றியுடன் ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். 13.07.1989 வியாழக்கிழமை இரவு 10.00 மணிபோல் எனக்கு தொலைபேசியில் அவர்கள் செய்தி அறிந்தும் எனக்கு ஏதோ ஒரு அசம்பாவிதம் கொழும்பு அலுவலகத்தில் நடந்திருப்பதாகவும் உடனடியாக அங்கு ஒருக்கால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்படியும் சொன்னார்கள். நானும் உடனேயே தொடர்புகொள்ள முயற்சித்தும் நீண்ட நேரத்தின்பின் இணைப்புக்கிடைத்தது.
இந்நிகழ்வகளை நான் எனது பெரியப்பா என்ற கட்டுரையில் விரிவாகத் தெரிவித்திருப்பதால் அதிகம் இத்தொடரில் எழுதாது ஏனையவற்றை எழுதுகிறேன். வாசகர்கள் அத்தகவல்களை அறிய விரும்பி வேண்டினால் அதை தனியாகப் பதிவிடலாம். 1989.07.14 வெள்ளிக்கிழமை நான் கொழும்பு அலுவலகத்திற்குப் போனபோது எனது கண்ணில் முதலில் தென்பட்டவர் அண்ணன் சிவபாலன் அவர்களே! அங்குமிங்கும் ஓடியவண்ணம் அவரும் மாவை. சேனாதிராசா அவர்களும் மரணச் சடங்குக்கு வேண்டிய ஒழுங்ககளை மேற்கொண்டதும் மறக்கமுடியாது.
நான் அங்கு சென்ற சமயம் அமரர்களுடைய பூதவுடல்கள் கொண்டுவரப்படவில்லை. வீடு கழுவப்பட்டுக் கொண்டு இருந்தது. இரவு சடலங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர் அடுத்த நாள் காலைவரை இருவரது பூதவுடல்களும் மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அடுத்தநாள் சனிக்கிழமை நண்பகல் இரத்மலானை விமான நிலையத்திற்கு எடுத்தச் செல்லப்பட்டு முதலில் திருகோணமலைக்கும் பின்னர் மாலையில் மட்டக்களப்பு நகருக்கும் எடுத்தச் செல்லப்பட்டது. அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை காலையில் மட்டக்களப்பிலிருந்து பலாலிக்கு எடுத்தச் செல்லப்பட்டு அதன் பின் ஒரு இந்திய விமானப்படை ஹெலியில் அமிர்தலிங்கம் அவர்களின் பூதவுடலும் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் ஆதரவாளர்கள் அனைவரும் செல்ல மற்றொரு ஹெலியில் யோகேஸ்வரனின் பூதவுடலும் அவரது மனைவி மற்றும் சிலரும செல்ல முறையே வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரி மைதானத்திற்கும் யாழ் முற்ற வெளி மைதானத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டது. நானும் வட்டுக்கோட்டை செல்லும் ஹெலியில் பயணித்தேன். இதை இலங்கைத் தமிழருக்காக 20 ஆண்டுகள் என்ற நூலில் டாக்டர் ஜனார்த்தனன் மிக அருமையாக அண்ணன் அமிரை இழந்தோம் என்று 54ஆம் பக்கத்திலிருந்து கட்டுரை அமிரின் மரணச்சடங்குபற்றி அவர் இந்தியாவிலிருந்து இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியதை மிக அழகாக வர்ணித்துள்ளார்.
அண்ணன் சிவபாலனின் நினைவுகளை எழுதம்போது அவர் சம்பந்தப்பட்ட நிகழ்வுடன் மேலும் பல விடயங்கள் எழுதவேண்டிய கட்டாய நிலை இருப்பதால் தொடர் நீண்டுகொண்டு போகிறது. வாசகர்கள் அதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் இதனை ஒரு வரலாற்றுக் குறிப்பாக பதிவிட விரும்புவதால் எனது அனுபவங்களை விபரமாகத் தெரிவிக்க விரும்புகிறேன். இதனால் எனது மனம் நிறைவடையும் ஒரு திருப்தியை நான் அடைகிறேன்.(மீதி பின் தொடரும்)

Friday, September 12, 2008

முன்னாள் யாழ் மாநகர முதல்வர் பொன் சிவபாலனுடன் சில நினைவுகள் - புகைப்படங்கள்

மாநகர சபையில் பதவியேற்ற முதல்நாள் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் 9 பேருடன் மூத்த துணைத் தலைவர்

தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் பிறந்தநாளின்போது வாழ்த்துத் தெரிவிக்க வந்த முஸ்லிம் காங்கிரஸ்க் கட்சித் தலைவர் அஷ்ரப் அவர்களுடன்

வடக்குக் கிழக்க மாநகர சபை ஆளுனர் காமினி பொன்சேகா அவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தியபொழுது மறைந்த அமிர்தலிங்கம் அவர்கள் மீது தான் அதிக மரியாதை கொண்டவரெனக் கூறி என் கைகளைப்பற்றியே பிடித்திருந்தார்

Thursday, September 11, 2008

இன்று அமரத்துவமடைந்த யாழ் முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனின் 10வது நினைவு தினம்.

எனது நினைவுகளில் சிவபாலன் அண்ணன் ஒரு தனித்த முக்கிய இடத்திலிருப்பவர். காரணம் அவர் எமதூருக்கு அண்மையில் சித்தங்கேணியில் வசித்தவர். எமக்கு உறவினர்கள் பலர் சித்தங்கேணியிலிருப்பதால் அவரும் உறவினர்தான் அடிக்கடி சென்றுவருவதுண்டு. அவரைப்பற்றி தொடரில் எழுதலாம் என்றிருந்தாலும் இன்றைய நினைவு நாளில் அவர்சம்பந்தப்பட்ட சில நினைவுகளையாவது வாசகர்களுடன் பகிரலாம் என இன்று பதிவிடுகிறேன். விரிவாக இன்று குறிப்பிட நேர அவகாசம் இல்லாமைக்கு மன்னிக்கும்படி அன்பாக வேண்டுகிறேன்.

அளவுகடந்த சமய நம்பிக்கையுடன் நிறைந்த கல்வி அறிவும் - பேச்சுத்திறனிலும் கவிபாடும் திறமையும் அவருக்குண்டு. ஒரு தடவை எமதூரில் இடம்பெற்ற இந்து இளைஞர் மன்றத்தின் ஆண்டுவிழாவுக்கு அவரும் புதுவை இரத்தினதுரை போன்ற பலரும் கவி அரங்கிற்க வந்தவேளை இவர் ஏதாவது இடக்குமுடக்காக கவி பாடுவார் என்று நான் கருதியதும் அப்படியே அவரும் கவிதை வடித்ததையும் இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அவரை மீண்டும் வாசகர்களுடன் நினைவு கொள்வதில் ஓரளவு மனநிறைவடைகிறேன்.

நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் உறுப்பினராக இணைந்தது எனது பெரியதந்தையாரின் மறைவுக்குப்பின் என்றாலும் தொடர்பு ஏற்பட்டது சிறு வயதிலிருந்தே. ஏனெனில் எனது 5ஆவது வயதில் 1970 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் பெரியப்பா தோல்வியடைந்தபோது இரவிரவாக பலர் வந்த தமது சோகத்தைத் தெரிவித்துச் சென்றதுபற்றி எனது பெரியப்பா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் (வரலாற்றின் மனிதன் - அமிர்தலிங்கம் பவள விழா மலரில் 32வது கட்டுரை) குறிப்பிட்டிருக்கின்றேன். அதேநேரம் வீரகேசரியில் வெளியான நம்மவர் நட்புகளை பார்த்தால் கடவுள்தான் வந்தாலும் காப்பாற்றுவாரோ தெரியாது – யாழ் மாநகர உறுப்பினர் உள்ளம் குமுறுகிறார் என்ற தலைப்பிட்டு வீரசேகரியில் 17.04.1999 10ஆம் பக்கத்தில் பிரசுரித்தது. நான் 20.03.1999 திகதியிட்டு எழுதிய ஈழப் போராட்ட விடுதலை வீரர்களுக்கு மனிதாபிமானத்தின் பெயரால் விடுக்கம் பணிவான வேண்டுகோள் என்ற 3 பக்கச் செய்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வரிகளை வீரகேசரி ஓரிரு சொற்களை மாற்றி வெளியிட்டிருந்தாலும் மீண்டும் இன்று இங்கே குறிப்பிடுவது இன்றைய கால கட்டத்திற்குப் பொருத்தமானதென நினைக்கின்றேன்.
ஆயுதக் குழுக்கள் தமக்குள் முட்டி மோதுவதைக் கண்டு உளம் நொந்துபோன யாழ் மாநகரசபை உறுப்பினர் தங்க. முகுந்தன் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அந்த வேண்டுகோள் வருமாறு:-
தந்தை செல்வா காலத்திலிருந்து அரசியல் நடவடிக்கைகளை அறிந்தவன் என்ற வகையில் இந்த வேண்டுகோள்.
1976-5-14 பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப மாநாட்டில் பங்கு பற்றியவன் நான்.

தந்தை செல்வா அவர்கள் உதயசூரியன் கொடியை ஏற்றியபோது பாடல் இசைத்தவன் நான். வீர உணர்வு வரக் கூடிய அந்த அடிகள் இன்னும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது. அதாவது தந்தை வாழ்ந்த நாட்டிலே நம் தாயும் வாழ்ந்த நாட்டிலே சொந்தமற்ற பிரஜையாய் நாம் நிந்தையுற்று வீழ்வதா? என்பதே அந்த வைர வரிகள.; மக்களின் இன்றைய அவல வாழ்வுக்கும் புரையோடிப்போயுள்ள இந்நாட்டின் இனப்பிரச்சனைக்கும் காரணமான ஆயுதப் போராட்டம் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஒருவித விரக்தி நிலையையும் ஏற்படுத்தியுள்ளதை எவரும் நியாய சிந்தனையுடன் பார்க்கும்போது மறுப்பதற்கில்லை. இன்றுள்ள சூழ்நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதுபோல எதுவுமே எமக்கு வேண்டாம் நிம்மதியாக எமது சொந்த வீடுகளில் இருக்க விட்டாலே போதும் என்ற ஆதங்கமே மக்களிடத்திலே வலுப்பெற்றிருக்கிறது.

சாத்வீகப் போராட்டங்கயோ பேச்சுவார்த்தைகளோ எமது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சரிவராது என்றுகூறி இவற்றை நிராகரித்தும் கொச்சைப்படுத்தியும் விலக்கிவட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் தமக்குள் பிளவுண்டு நான் என்ற ஆணவத்தாலும் தலைமைப் பதவி மோகத்தினாலும் இன்று தம்மைத்தாமே அழித்துக்கொள்வதோடு எந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கவெனக் கூறிப் புறப்பட்டார்களோ அந்த மக்களுக்கெதிராகச் சொல்லொணாத வேதனைகளை அளிப்பதும் சிலவேளைகளில் அவர்களது உயிர்களையும் அழிக்கம் போக்கை எண்ணியோ என்னவோ தந்தை செல்வா தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார் போலும்.
ஒரு போராட்டத்தை நிராகரித்து அதைக் கொச்சைப்படுத்தி அப்படிச் செய்பவரஇகள் அனைவருமே துரோகிகள் என்று கூறிவிட்டு அதே செயலைத் தாம் செய்யும்பொழுது இதைச் சந்தர்ப்பவாதம் என்பதா? அல்லது அரசியல் சித்தாந்தம் என்பதா?

எது எப்படியாயினும் சிங்கள அரசுகளின் படையினர் செய்த அட்டுழியங்களை எதிர்க்க ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட எமது இளைஞர்கள் எந்தப் பொது எதிரியை தமது நம்பிக்கைக்குரியவர்களாக கருதி இன்று சொந்த இனத்தினுள் தமது கருத்துக் கொள்கைகளுக்கெதிரானவர்களைக் கொன்று தீர்த்துப் பழிவாங்கப் போனார்கள் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய சூழ்நிலையில் விடுதலை காணப் புறப்பட்ட உங்களிடம் மனிதாபிமான ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள் இதோ:-
எந்த ஒரு மனித உயிரையும் கொல்லாதீர்கள். அது யாராயிருந்தாலும் இனிமேல் ஒருபோதும் வேண்டாம்.
ஆவல வாழ்வின் ஒடுங்கிப்போயுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க உங்கள் அனைத்து முயற்சிகளையும் திரிகரண சுத்தியோடு மேற்கொள்ளுங்கள். அவர்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்காதிருங்கள். அவர்களிடமிருந்து வரி மற்றும் தண்டப்பணம் பெறாதிருப்பது குறித்துப் பகிரங்கமான உறுதியுரை வழங்குங்கள்.
ஒருவர்மீது ஒருவர் பழி சுமத்துவதையும் குற்றம் கூறுவதையும் விடுத்து எதிர்காலத்தில் மக்களின் தேவைகளைப் பூரணப்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும் சந்தேகங்களை நீக்கி ஒன்றுபட்ட சமுதாயம் சீர்நிலைபெற உறுதுணை புரிவீர்களென எதிர்பார்க்கின்றேன்.
மீதி பின் தொடரும்.

Tuesday, September 9, 2008

யாழ்ப்பாண மாநகரத்தின் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி முதல்வர்களின் ஞாபகார்த்தமாக.......(களத்து மேட்டின் ஈழவனுக்காக இதை சமர்ப்பிக்கின்றேன்)

வலைப்பதிவு நண்பர்களில் ஒருவரான களத்துமேட்டின் ஈழவனை நானறியேன். அவர் எப்படிப்பட்டவர். எத்தனை வயது. எங்கிருக்கிறார். என்ன செய்கின்றார். என்ற எந்த தகவலையும் அறியாத நான் அவர்மீதும் அவரைப்போன்ற வலைப்பதிவாளர்கள் குறிப்பாக இதுவரை நான் பார்த்த பதிவுகளில் முருகப்பெருமான் (கண்ணபிரான் ரவி சங்கர்) நல்லூர்கந்த்சுவாமிகோவில் சென்னைத் தமிழன் (முகுந்தன்) தமிழ்ப் பூங்கா (சர்வேசா) சிவத்தமிழோன் றேடியோஸ்பதி (கானாபிரபா) மாயாஸ்போட்டோபுளொக் (மாயா) ரிஎம்பொலிரிக்ஸ் கடைசிப்பக்கம் இதுதான்உண்மை தமிழ் நெஞ்சம் மகா மதுவர்மன் தெய்வசுகந்தி சரவணகுமரன் சேவியர் மாயா வந்தியத்தேவன் பகீ ரிஷான் போன்ற முக்கியமானவர்களையும் இன்னும் பல பெயர் தெரியாத பார்க்காத வலைப்பதிவர்கள் அனைவரையும் அன்புடன் நேசிப்பவன். மேடை புதியமலையகம் நிர்ஷன் எனது உயிர்த்தோழனின் தம்பி. கணித சமன்பாடுகளின்படியும் அன்பியலின் கோட்பாடுகளின்படியும் ஆத்மார்த்த தொடர்புகளின்படியும் அவரும் எனது உயிர்த்தோழன். அவரது பதிவுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் எனது மானசீகமான வழிகாட்டி அன்னை துர்க்காதுரந்தரி பண்டிதை செல்வி. தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் மறைவையொட்டி ஏதாவது கட்டுரையை மதிப்புக்குரிய நீதியரசர் சீ.வி. விக்கினேஸ்வரன் எழுதினாரா என்று கேட்கப்போய் அதிலிருந்து நானொரு பகிர்தலை வழங்க அதிலிருந்து தொடங்கியது இந்த வலைப்பதிவுப் பைத்தியம்.
நேரமின்மை ஒருபுறம். எனது தாய்மொழி தமிழையும் எனது நாட்டு மொழி சிங்களத்தையும் சர்வதேச மொழி எனப்படுகின்ற ஆங்கிலத்தையும் அறிந்திருந்தும் புகலிடம் தேடிய குற்றத்தினால் புதிய ஒரு மொழியான ஜேர்மன் மொழியை(டொச் என்பார்கள்) கற்கும் சிரமம் ஒருபுறமாக இருக்கும் எனக்கு வலைப்பதிவு பண்ணுவதும் அதற்கான குறிப்புக்களை தட்டெழுத்திடுவதும்தான் தற்போதைய வேலையும் தொழிலும். எனக்கு இங்கு சுவிற்சலாந்து நாட்டுக்கு வந்த சில காலங்களிலேயே குறிப்பறிந்து எனக்கு ஒரு கணனியைத் தந்துதவிய அன்பான நண்பர் செபஸ்ரியன் இராஜன் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளை இவ்விடத்தில் சொல்லவேண்டிய கடமை எனக்குண்டு. துப்பாக்கிச் சூடுபட்ட என்னைக் காப்பாற்றிய எனது கிராமத்து நண்பர்கள் இளைஞர்கள் பெரியவர்களை நான் இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கின்றேன். 12.06.2006 திங்கட்கிழமை சூரியன் அஸ்தமனமாகிற வேளையில் அந்தச் சம்பவம் இடம்பெற்றது.
இதை நான் விலாவாரியாகக் குறிப்பிட வேண்டியவனாயிருந்தும் இன்னொரு இடத்தில் அதை விபரமாகத் தெரிவிக்கின்றேன் என்று கூறித் தற்போதைய விடயத்திற்கு வருகின்றேன்.
நேற்றைய 08.09.2008 பதிவில் களத்துமேட்டின் ஈழவன் ஒரு தகவலைத் தனது பதிவில் தெரிவித்திருந்தார். எனது பதிவிற்கு அவர்களைப்பற்றி எழுதலாம் தானே என்று பதிவிட்டிருந்தார். ஆறுதலாக எழுதலாம் என்றுவிட்டு பதிவுகளில்போய் என்ன போட்டிருக்கிறார்கள் என்று பார்க்கப்போனால் இவர் சொல்லியிருக்கிறார். மேலதிக விபரங்களை தங்க. முகுந்தனின் வலைப்பதிவில் எதிர்பார்ப்போம் என்று. எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. என்னடா செய்யலாம் என்று தலையைப் போட்டுப் பிய்த்தேன். எனக்கு நானே திட்டித் தீர்த்தேன். என்னடைய அலுமாரிகள் கோப்புக்கள் எல்லாவற்றையும் புரட்டிப் புரட்டித் தேடினேன். எந்தத் தகவலும் அவர்களைப்பற்றியது கிடைக்கவில்லை. என்னடா செய்யலாம் என்றிருந்தபோது ஒரு சிறிய குறிப்பொன்று மட்டம் தனியாக உறையிலிட்டு இருந்ததைக் கண்டேன். எடுத்தப் பார்த்தால் திரு. சிவசிதம்பரம் அவர்கள் சொல்ல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்ட குறிப்பு திரு. சிவபாலனைப்பற்றியது. அதை உடனேயே தட்டச்சிலிட்டேன்.
அதன்பிறகு நான் அவர்களுடன் நெருங்கிப்பழகிய நினைவுகளைப் பதிய ஆவலுடன் குறிப்புக்களை எழுதத் தொடங்கினேன். எங்கிருந்த தொடர்வது எப்படி ஆரம்பிப்பது என்று குழப்பத்தில் மீண்டும் எனது கோப்புக்களைத் துளாவினானேன். சில புகைப்படங்கள் மாத்திரம் பதிவுபண்ணி வைத்திருந்ததை எடுத்து முதலில் அவற்றை வாசகர்களுக்கு முக்கியமாக களத்துமேட்டின் ஈழவனுக்கச் சமர்ப்பிக்கலாம் எனக் கருதி இன்று அவற்றைச் சமர்ப்பிக்கின்றேன். மீதி நாளை ஒரு புதிய தலைப்புடன் தொடராக எழுத விரும்புகின்றேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரின் அனுதாபச் செய்தி.

திரு. பொன். சிவபாலன் அவர்களின் அகால மறைவு பெரும் வேதனையைத் தருகின்றது. குடாநாட்டு மக்களின் துன்ப துயரங்களை நீக்குவதற்குத் தன்னாலானதைச் செய்ய வேண்டும் என்ற பெருநோக்கில்தான் அவர் யாழ் மாநகர முதல்வர் பதவியைப் பொறுப்பேற்றார்.மிகவும் ஆர்வத்தோடு அவர் செயல்பட்டார். அழிந்துபோன நகரைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சர் ஜனாதிபதி பிரித்தானியத் தூதுவர் ஏனைய மாநகர நகர சபை முதல்வர்கள் என்போரையெல்லாம் சந்தித்து நிலைமைகளை எடுத்துரைத்தார். கொள்கைவழி நின்று வடக்குக் கிழக்கு இணைப்புக்கும் சுயநிர்ணயத்தை அங்கீகரிக்கும் வகையிலான அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக் கொள்வதற்குமெனக் கூடியவரையில் உழைத்தவர். திரு. பொன். சிவபாலன் அவர்கள்.மனித உரிமைகள் தொடர்பாக அக்கறை கொண்டு சர்வதேச மனித உரிமை மகாநாடுகளில் கலந்துகொண்டு இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை எடுத்துரைத்ததுடன் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் விடயத்தில் அந்தந்த நாடுகள் அனுதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தி வந்தவர். எமது கட்சியின் சட்டத்துறைச் செயலாளராக இருந்து பலவித சட்ட நடவடிக்கைகளிலும் கரிசனையுடன் ஈடுபட்டவர். இதனால் தனது சொந்தச் சட்டத் தொழிலாற் பெறக் கூடிய சம்பாத்தியங்களைத் தியாகம் செய்தவர். அன்போடும் விசுவாசத்தோடும் பழகும் பண்பும் எடுத்த காரியத்தை விடாப்பிடியாக நிறைவேற்றும் மனத்துணிவும் கொண்டவர். அமரர் அமிர்தலிங்கம் அவர்களிடம் கொண்ட அன்பு காரணமாக அமிர்தலிங்கம் நினைவுப் பணிமன்றத்னை உருவாக்கி வருடாவருடம் அவருக்கு நினைவு விழா எடுப்பதில் அக்கறை காட்டி வந்தவர். யாழ் நகரின் வீதி ஒழுங்குகளைச் சீர் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கையில் அவருக்கு இந்த நிலமை ஏற்பட்டு விட்டது. இத்தகைய உயிரிழப்புகளால் யாருக்கும் நன்மை கிட்டப்போவதில்லை. தம்பி சிவபாலனின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்பதோடு அவரது துணைவியாருக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மு. சிவசிதம்பரம்
தலைவர் - தமிழர் விடுதலைக் கூட்டணி.

மிகுதியை நாளை தொடர்கிறேன்