அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி
Showing posts with label வெளிவராத என் செய்திகள். Show all posts
Showing posts with label வெளிவராத என் செய்திகள். Show all posts

Sunday, June 21, 2009

கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது, ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும்!

இக்கடிதம் தந்தை செல்வாவினுடைய சிலை திறப்பு நடைபெற்ற பின் வெளியான வீரகேசரி வாரவெளியீட்டுச் செய்திக்கு எழுதிய பதில் கட்டுரை. 10 வருடங்களாகியும் இதுவரை வெளியிடவில்லை. இன்றும் பத்திரிகைகள் குழப்புகின்ற செய்திகளைத் தான் எழுதி சிண்டுமுடிக்கும் விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றன என்பதும் கவலையைத் தருகிறது. நியாயமாக நீதியாக எழுதி அல்லல்படும் அநாதரவாக இருக்கும் மக்களுக்கு தம்மால் செய்யமுடிந்ததைச் செய்யத் தக்கதாக கட்டுரைகள் செய்திகள் வெளிவர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. உண்மைகளை - நடப்பவைகளை எழுதுங்கள் - கட்டுரை என்கிறபோது நல்லவழியில் சிந்தித்து எழுதுங்கள் - என்பதே எனது பணிவான கருத்து!


ஆசிரியர்
வீரகேசரி வார வெளியீடு
கொழும்பு 14.

அன்புடையீர்,
தங்களின் 02.05.1999 வீரகேசரி வார வெளியீட்டில் 6ஆம் பக்கத்தில் வெளியான தந்தை செல்வாவின் வழி செல்ல இன்று யார் உள்ளனர்? என்ற தலைப்பிலான கட்டுரையில் அதை எழுதிய ஆர். தயாபரன் அவர்கள் உண்மைக்கு மாறான தகவல்கள் சிலவற்றைத் தெரிவித்தள்ளார். உண்மையான கருத்துக்கள் வீரகேசரியில் வரவேண்டுமென்ற அபிமானத்தால் இதனை எழுதுகிறேன். தயவுசெய்து பிரசுரிக்க வேண்டுகிறேன்.

26.04.99 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான வைபவத்தில் மாநகரசபையின் உறுப்பினரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினருமான நானும் கலந்து கொண்டதை ஏனோ திரு. ஆர். தயாபரன் அவர்கள் குறிப்பிட மறுத்துவிட்டார்.மேலும் நிகழ்ச்சியின்போது தமிழ் வாழ்த்தினையும், ஈழத்தமிழ் தேசிய கீதத்தையும் (பரமஹம்சதாசன் இயற்றிய இப்பாடல் அமரர் கு. வன்னியசிங்கம் அவர்கள் காலத்திலிருந்து அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட தேசிய கீதசபையால் தெரிவுசெய்யப்பட்டபாடல்) இசைத்தவன் என்ற வகையிலும் அன்றைய முழுநிகழ்ச்சிகளின்போதும் இருந்தவன் என்ற வகையிலும் பொய்யான தகவலைத் தந்தமைக்கு மனம்வருந்தியே இதைக் குறிப்பிட்டு எழுதுகிறேன்.

தந்தை செல்வாவினுடைய நினைவுநாளில் அவரது அரசியல் ஞானத்தை – அவரது எளிய வாழ்க்கை முறையை – தமிழ் தேசிய இனத்தின் அன்றைய போராட்ட(சாத்வீக) நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகவே பேச்சுக்கள் பெரும்பாலும் அமைந்திருந்தது. மேலும் இந்நிகழ்ச்சி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையினால்மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் - சகல கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வேளையிலும் ரெலோவைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே பங்குபற்றினர்.

தன்னிகரில்லாத் தலைவன் ஒருவனை நினைவு கூரவும், கௌரவிக்கவும், அவரை அடியொற்றிப் பின்வளர்ந்தவர்கள் யாராயிருப்பினும் அழைப்பு இல்லாமலேயே வந்திருக்கலாம். அழைப்பு அனுப்பியும் வராதிருந்தமைக்கு காரணம் எமக்குத் தெரியாது. மேலும் புளொட் அமைப்பின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர்(அரசியல்) திரு. கிருபைராசா அவர்கள் அன்றையதினம் கொழும்பில் இருந்ததையும் நினைவுபடுத்தவேண்டும்.

தமிழீழத் தீர்மானத்திலிருந்த எவரும் (கூட்டணி உட்பட) இன்றுவரை விலகிச் செல்லவில்லை என்பதுடன் அரசு அதற்கீடான மாற்றுத் திட்டத்தை முன்வைத்தால் அதை கூட்டணி பரிசீலித்து பின் தமிழ் மக்களின் அனுமதிக்குஅவர்கள் முன் அதை சமர்ப்பிக்க வேண்டும் என்ற தீர்மானமும் இன்றுவரை மாற்றப்படவில்லை. மாற்றவும் முடியாது. இந்நிலையில் கடந்த 1997 – 1998 ஆம் ஆண்டு தந்தை செல்வா நூற்றாண்டுத் தேசிய அவையின் முடிவுக்கு இணங்க சிலை ஒன்றை நிறுவ எடுத்த முடிவும் தாமதமாக நிறைவேறியமைக்கம் - நடைபெறவிருக்கும் தேர்தலுக்கம் முடிச்சுப் போடுவதுதான் மிகவும் வேதனையைத் தருகிறது.

குறிப்பிட்ட நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு பத்திரிகையான உதயன் நகரில் நேற்று நடந்த உணர்வுபூர்வ நிகழ்வில் தந்தையின் சிலை திறப்பு என்று வெளியிட்ட செய்தியையும் குறிப்பிடுவது பொருத்தமானது.

குறை கண்டுபிடிக்கும் ஒரே நோக்குடன் செய்திகள் வெளிவருவது நடுநிலைப் பத்திரிகையான வீரகேசரிக்கு அழகல்ல.
பல இடர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபோதும் தமிழ்மக்களின் இன்னல்களைப் போக்குவதற்கான நடவடிக்கைகளில் இன்று ஈடுபடுவதாக தெரியவில்லை என்பதும் முழுக்க முழுக்க கூட்டணியைக் குற்றம் சுமத்தும் நோக்கிலேயே எழுதப்பட்டது. கட்டுரைகள் எழுதும்போது பிரிக்கும் வழியை முன்னெடுக்காது,ஒற்றுமைப்படுத்தும் வழியில் எழுதினால் சிலவேளை பிரிந்து நிற்பவர்கள் கூட ஒன்றுபட முடியும். தந்தை செல்வாவின் இலட்சியத்தை முன்னெடுத்துச் செல்ல முன்வருவோர் முதலில் தந்தைiயை அறிந்திருக்கவேண்டும். வீணே பெயரைச் சொல்வதால் மட்டும் அவரது இலட்சியம் ஈடேறாது. துமிழர் விடுதலைக் கூட்டணி தந்தை செல்வா வழியில்தான் என்றும் இயங்கி வருகிறது. தோடர்ந்தும் அவர் வழியிலேயே செல்லம் என்பதை ஆர். தயாபரன் உட்பட தவறாகக் கருதுவோர்கள் இனிமேலாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

துரையப்பா விளையாட்டரங்குப் புதைகுழிகள் சம்பந்தமான தகவல்களைத் தெரிவிக்கப்படக்கூடிய சாத்தியமான நிலை அன்றில்லை. காரணம் ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்ட விடயம் - தற்போது ஆய்விலும் விசாரணையிலும் இருக்கும்போது அதுபற்றி அறிவுள்ள ஒருவன் கருத்துக் கூறமுடியாது என்பதே எனது கருத்தாகும். மேலும் சிலை திறப்புக்கு மாவை சேனாதிராசா படியில் ஏறியபோது கம்பி கீழே விழுந்தது என்ற செய்தி பிழையானது. ஏந்தக் கம்பியும் விழவில்லை. அது முழுமையாகச் செய்யப்பட்ட ஒரு படிக்கட்டு.

மேலும் காற்றினால் தற்காலிகமாகப் போடப்பட்டிருந்த கொட்டகை இருக்கும் கம்பிகள் காற்றின் வேகத்தினால் கீழே விழுந்து ஒருவருக்கு மட்டுமே மேல் நெற்றியில் காயம் ஏற்பட்டது. அவராகவே எழுந்துவந்தபோது நாமே அவரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தபோது கூடவே சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் உதவியாளர் சென்றபோதும் அவரை வைத்தியசாலையில் தங்கவேண்டும் என்று கூறியமையால் திரும்ப அவர் கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்து தனது துவிச்சக்கரவண்டியில் வீடு சென்று மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றார். இதனை அறியாது குண்டு வெடித்ததா? ஏன்றெல்லாம் பொய்யான தகவல் தெரிவித்து குண்டுவெடிப்புக்கள் இன்னும் ஏற்பட வேண்டும் என்ற ஆதங்கமிருக்கும் இந்நபர்களைக் கருத்தில்வைத்தோ என்னவோ தந்தையவர்கள் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார்: ஏதோ கடவுளின் கிருபையால் நிகழ்வும் மிகச் சிறப்பாக மதியம் 12 மணியளவில் நிறைவடைந்தது.

தங்க. முகுந்தன்.
யாழ் மாநகர சபை உறுப்பினரும்
தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய செயற்குழு உறுப்பினரும்.






நன்றி - தமிழ் நெற்(மேலேயுள்ள 3 படங்கள்)

Saturday, June 13, 2009

பத்திரிகைகள் நடுநிலை நின்று மக்களின் நல்வாழ்வுக்கு பணியாற்ற வேண்டுவதுடன் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும்

யாழ் மாநகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 8.4.99 அன்று வீரகேசரியல் வெளியான மாநகரசபை சம்பந்தமான செய்திக்கு எனது பதில் அறிக்கை இன்றுவரை பிரசுரிக்காத காரணத்தால் இங்கு பதிவிடுகிறேன்.

பதில் அறிக்கை

பாதுகாப்புக் கருதி கூட்டம் நடைபெறும் இடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் யாழ். மாநகர சபையின் அவலநிலை என்ற தலைப்பில் 8.4.99 வெளியான வீரகேசரியின் 2ஆம்பக்கச் செய்திக்கு சில நியாயமான மாற்றுக் கருத்துக்கள் இருப்பதால் - அதனைத் தெரிவிப்பதற்காகவே இக்குறிப்பை எழுதுகின்றேன். வேறு யாராவது கட்டுரை எழுதியிருப்பின் இந்தச் செய்திக்கு முக்கியத்துவமிருக்கின்றதோ இல்லையோ – ஒரு பத்திரிகை நிருபர் சில விடயங்களை மறைத்துக் கூறுவது நடுநிலைப் பத்திரிகை என்று கூறப்படும் வீரகேசரிக்கு களங்கத்தையே ஏற்படுத்தும். நடுநிலையும் - நியாயமும் இல்லாதபடியால்தான் என்னவோ இப்பத்திரிகை ஆசிரியர்கள் பிரிந்து சென்றார்கள் என்ற கருத்தும் வலுப்பெற்றுவிடும். எம்மைப் பொறுத்தவரையில் நாம் சிலவிடயங்களில் பாரம்பரியம் என்று சொல்லப்படும் தலைமுறைப் பழக்க வழக்கங்களைக் கைக்கொள்பவர்கள். வாழ்க்கையில் எல்லா விடயங்களிலும் ஒன்றையே எடுத்தக் கொள்பவர்கள். ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் சுதந்திரன், ஈழநாடு, வீரகேசரி போன்ற பத்திரிகைகள் தமது விற்பனையில் வளர்ச்சி கண்டிருந்தன. ஈழநாடு பத்திரிகைக் காரியாலயமும், பொது நூல் நிலையமும், 1981இல் மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலின் பின் எரிக்கப்பட்டதை மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது என்ற நூலில் ஆசிரியர் நீலவண்ணன் வீரகேசரியையும் தினபதியையும் பெரும்பகுதிகளில் மேற்கோள்காட்டி எழுதியுள்ளதைக் குறிப்பிடுவது பொருத்தமாக அமையும்.

பொதுநூல் நிலையம் எரிக்கப்பட்ட பின்பு 1985ஆம் ஆண்டுப் பகுதியில் யாழ் மாநகர சபைக் கட்டடம் சிறிது சிறிது சேதமடைந்திருப்பினும் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டது எமது இளைஞர் அமைப்புக்களால் என்ற உண்மையை மறைத்துவிட்டு குட்டிப்பாராளுமன்றம் போல மாநகரசபை இயங்கியதென்றும் இன்று அவசரமாக அந்தரங்கமாக கூட்டங்கள் நடைபெற்று முடிகின்றன என்றும் நிருபர் கவலைப்படுவது வேதனையைத் தருகிறது. எமது பிரச்சனைகளைப் பகிரங்கப்படுத்துவதால் உண்மையும் நேர்மையும் முதன்மைகொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டால் தவறுகள் எமக்கிடையில் இருப்பதும் அதனால் மேலும் எமக்குள் பிளவுகள் ஏற்படுவதும் சாதாரணமாகிவிடும். இப்போதும் ஒன்றும் பெரிதாக ஒற்றுமையென்றில்லை.

50ஆவது பொன்விழாவைக் கொண்டாடுவதற்கு ஒரு நிரந்தரக் கட்டிடமில்லாத நிலையில் இருந்த இந்து விடுதிக் கட்டிடத்தையும் இழந்துவிட்ட நிலையில் மாநகர சபை தமிழ் மக்களைப் போலவே அகதியாக இருக்கிறது.

சுதந்திரமாகக் கூட்டம் நடத்தவும் கலகலப்பாகவும் இருக்கக் கூடிய நிலையில் யாழ்மக்கள் இன்றில்லை என்பதை ஏன் நிருபர் உணரவில்லையென்று சந்தேகம் எழுகிறது. நாங்கள் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கூட்டங்களை நடத்திச் சென்றாலும் யாழ் நிலையைத் தெரிந்து கொண்டுதான் இருக்கிறோம். யாழ்ப்பாணத்தில் இருந்துகொண்டே யாழ் நிலைமைகளை அறியாமல் கருத்துத் தெரிவிக்கும் நிருபர் முதலாவது மாநகர சபைக் கூட்டத்தில் (அதாவது கடந்த 1998 தேர்தலின் பின் நடந்த) எத்தனை பேர் கலந்துகொண்டார்கள் என அறியாமல் இரு முதல்வர்களை இழந்தபின் கைவிரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்களுடன் கூட்டங்களை நடத்தி முடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். முதல் முதல் நடைபெற்ற மாநகரசபைக் கூட்டத்தில் முதல்வருட்பட பன்னிரண்டு உறுப்பினர்களே சத்தியப் பிரமாணஞ்செய்து பதவியெடுத்தனர். அதன்பின் 17.05.98 ஞாயிறன்று முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன் சுட்டுக்கொலைசெய்யப்பட்ட பின் முதல்வராக திரு. பொன் சிவபாலன் பதவியேற்ற இரண்டாவது மாநகரசபையின் பொதுக் கூட்டத்தில் 16 உறுப்பினர்கள் பங்குபற்றினர்(29.06.98). அதன்பின் 27.07.98இல் 17 உறுப்பினர்களும், 4.8.98இல் 18 உறுப்பினர்களும் பங்கு கொண்டனர். 11.9.98 அன்று இந்து விடுதிக் கட்டிடக் குண்டுவெடிப்பின் பின் நடைபெற்ற (15.9.98) கூட்டம் பாதுகாப்புக் காரணங்களுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணிக் காரியாலயத்தில் நடைபெற்றது. அதன்பின் 16.12.98இல் 17 உறுப்பினர்களுடனும், 1.1.99இல் 14 உறுப்பினர்களுடனும், 30.3.99ல் 13 உறுப்பினர்களுடனும் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. தற்பொழுது தமிழர் விடுதலைக் கூட்டணியில் 2 வெற்றிடங்களும் புளொட்டில் ஆரம்பத்திலிருந்து நிரப்பப்படாத இரண்டு வெற்றிடங்களுமாக 4 வெற்றிடங்களுள்ளன. யாழ் தேர்தல் அலுவலகம் இன்றுவரை பொன் சிவபாலனின் மறைவையொட்டி வெற்றிடமுள்ள விபரத்தையோ வெற்றிடமான உறுப்பினரின் இடத்துக்கு ஒருவரை நியமிக்கும்படியோ தெரிவிக்கவில்லை.

கைவிரல்கள் 10. சிலவேளைகளில் 11, 12 ஆகவுமிருக்கலாம். இந்நிலையில் கைவிரல் விட்டு எண்ணக்கூடியதென்ற சொற்தொடர் கட்டுரைக்குப் பொருத்தமற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைதி ஏற்பட்டுள்ளது மீண்டும் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற விதண்டாவாதங்களும் வீண் சர்ச்சைகளையே ஏற்படுத்தும்.

உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்புத்தரவிரும்பினால் பொலிசார் ஈடுபடுத்தப்படவேண்டும். உறுப்பினர்களின் சிபார்சுப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இராணுவப் பயிற்சி அளித்து – ஆயுதம் வழங்குவதுடன் சம்பளமும் கொடுப்பது அரசின் இயலாமையைக் காட்டுவதுடன் ஏற்கனவே சீரழிந்து கொண்டிருக்கும் தமிழ்மக்களின் வாழ்வில் மேலும் அழிவுகளை ஏற்படுத்தும் என்பது எனது கருத்து.(இதை 19.2.99 தங்கள் பத்திரிகையில் நான் தெரிவித்திருந்தேன்)

இந்து விடுதிக் கட்டிடத்தை நாம் இழந்தபின்னர் எமது முதல்வரும் 4 மாநகரசபை ஊழியர்களும் சில படை அதிகாரிகளும் கொல்லப்பட்ட பின்னர் முழுநேரமும் பாதுகாப்புள்ள கூட்டணிக் காரியாலயத்தில் கடந்த 3 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதிக் கூட்டம் ஈபிஆர்எல்எப் காரியாலயத்தில் நடைபெற்றது. அடிக்கடி மாற்றப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்வதுடன் ஒன்றை நினைவுபடுத்தவும் விரும்புகின்றேன். திரும்பத் திரும்பு பொதுச்சொத்துக்களை இழக்க நாம் தயாரில்லை. அதுவும் எம்மவர்கள் - எமது மக்களைத் துன்புறுத்துவதும், எமது பாரம்பரிய பிரதேசங்களில் எமது சொத்துக்கள் அழிப்பதையும் நாம் வன்மையாக எதிர்ப்பதுடன் இவற்றை மக்களுக்காகப் போராடுகின்றோம் என்று கூறுபவர்கள் சற்றுச் சிந்திக்கவும் வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன்.

இறுதியாக பத்திரிகைகள் நடுநிலை நின்று மக்களின் நல்வாழ்வுக்கு பணியாற்ற வேண்டுவதுடன் தவறுகளையும் சுட்டிக்காட்ட வேண்டும் எனவும் பணிவாக வேண்டி எனது குறிப்பை நிறைவு செய்ய முன்பு முக்கியமான ஒரு விடயம் யாதெனில் மாநகர சபை ஊழியர்கள் இந்து விடுதிக் குண்டுவெடிப்பின் பின் மரணமடைந்ததைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்கள் எவரும் (சுருக்கெழுத்தாளர் கூட) கூட்டங்களில் பங்குகொள்வதில்லை. ஆணையாளர் மாத்திரமே பங்குபற்றி வருகிறார். மேலும் மாநகர சபை உறுப்பினர்கள் - ஊழியர்கள் மத்தியிலும் ஒரு பிணைப்பில்லாத நிலை உண்டு என்பதையும் கூறி நிறைவு செய்கின்றேன்.

தங்க. முகுந்தன்.
யாழ். மாநகர சபை உறுப்பினர்.

Wednesday, August 13, 2008

பத்திரிகைச் செய்திகள் (இன்றுவரை எவரும் பிரசுரிக்காதவை)

04.09.2006

பத்திரிகை செய்தி

கடந்த 01.09.2006 தினக்குரல் பத்திரிகையில் முதற்பக்கத்தில் நோர்வே அத்துமீறுவதாக அரசாங்கம் குற்றச்சாட்டு என்ற ஒரு தலைப்பிலும், ஏழாம் பக்கத்தில் கண்காணிப்புக்குழுவின் குற்றச்சாட்டை விடுதலைப் புலிகள் நிராகரிக்கின்றனர் என்ற தலைப்பிலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே முன்னைய ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சியிலும் நவாலி தேவாலய படுகொலைகளுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கண்டனம் தெரிவித்தபோது அதற்கு அன்றைய வெளிவிவகார அமைச்சர் மறைந்த திரு. லக்ஸ்மன் கதிர்காமர் கண்டனம் தெரிவித்திருந்தார். அத்துடன் நியூயோர்க்கில் கருத்துத் தெரிவித்த சமயத்தில் இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா சபையாகினும்சரி, வேறெந்த நபர்களாயினும்சரி தலையிடுவதைத் தவிர்க்கவேண்டும் எனக் கூறியிருந்தார். அதனடிப்படையில்தான் தற்போதும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவும், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவும் நோர்வேயின் செயற்பாடுகளுக்கும், போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தலைவர் தெரிவித்த கருத்துக்களுக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

அமைச்சர்கள் பலர் வெளிநாடுகளுக்குச் சென்று, ஏன் மேதகு ஜனாதிபதியும் கூட (முன்னைய ஆட்சிக்காலங்களிலும்சரி, இப்போதும்சரி) விடுதலைப் புலிகளைத் தடை செய்யவேண்டும் என கோரிக்கைவிடுவதுபோலவே, இந்நாட்டில் பல மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்ளும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா சபையின் அகதிகளுக்கான புனரவாழ்வுக் கழகம், இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு, சர்வதேச மன்னிப்புச் சபை போன்ற அமைப்புக்கள் இந்நாட்டில் நடைபெறும் படுகொலைகளை – அம்பலப்படுத்தி மனிதாபிமான முறையில் வெளிக்காட்டுகிறார்கள். மக்கள்மத்தியில் பிரிவினையை எற்படுத்தி ஒருதலைப்பட்சமாக சிங்கள் மக்களுக்கு கூடிய சலுகைகளை வழங்கும் அரசின் நடவடிக்கை நியாயமற்ற செயல் என்பதையே மனிதாபிமான அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதைப் புரிந்துகொள்ளாத அரசு ஒருபோதும் நியாயமான ஆட்சியை வழங்காது.

இதே நேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள்மீதும் கண்காணிப்புக்குழு குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ள வேளையில் அதற்கும் விடுதலைப்புலிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மாவிலாறு அணைக்கட்டு சம்பந்தமான பிரச்சனை ஏன் ஏற்பட்டதென இன்றுவரை தெரியாத நிலையில், அரசு பொறுமை காக்காது விமான, எறிகணைத் தாக்குதல்களை ஆரம்பித்ததும், அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தியதும், பின்னர் அப்பாவி முஸ்லீம்கள் அதிகமாகவாழும் மூது}ர் பிரதேசத்தின்மீதும், வடக்கு இராணுவ நிலைகள்மீதும் தேவையற்ற முறையில் தாக்குதல்களை ஆரம்பித்தமையும், தற்போது இதனால் பல இன்னல்கள் ஏற்பட்டதும் - அவை தொடர்ந்த வண்ணம் இருப்பதுவும் மிகவும் வேதனைதரும் விடயங்களே. சம்பந்தப்பட்டவர்கள் இதில் ஆராய்ந்து முடிவெடுக்கத் தவறியமையே பிரதான காரணமாகும்.

பலகாலமாக தமிழ்மக்களை ஏமாற்றிவந்த அரசின்மீதிருந்த நம்பிக்கையற்றதன்மை -தற்போது விடுதலைப் புலிகளின்மீதும் - கடந்த மாவிலாறு சம்பந்தமான பிரச்சனையின்பின் ஏற்பட்ட தாக்குதல்களினால் ஏற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் வடக்கிலும் கிழக்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகள் மட்டுமன்றி, போக்குவரத்து, மற்றும் முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படவேண்டிய தேவை மிகமிக முக்கியமான தேவையாயிருக்கிறது. இதனை கருத்தில் வைத்து மனிதாபிமான அடிப்படையில் அப்பாவி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியது இலங்கை அரசினதும், அதே நேரத்தில் ஏகப் பிரதிநிதிகள் என தெரிவாகிய தமிழீழ விடுதலைப் புலிகளினதும் தாற்பரிய கடமையாகும்.

தங்க. முகுந்தன்.

------------------

18.08.2007.

செய்தி

எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல்நெறிதெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி தோன்றும்
மனிதாபிமானப் பணிகளைப் பார்வையிடச் சென்று கருத்துத் தெரிவித்த ஐ.நாவின் மனிதாபிமானப் பணிகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் அவர்களைப் பற்றி இலங்கை அரச அமைச்சர் ஐெயராஐ; பெர்னாண்டோபிள்ளே தெரிவித்த கருத்து முட்டாள் தனமானதுடன் அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களையும் தலைகுனியச் செய்யும் செயலாகிறது.
இவர் மாத்திரமல்ல இதற்கு முன்னர் நானறிந்தவரையில் இரு சந்தர்ப்பங்களில் முன்னைய வெளியுறவு அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்களும் இப்படியான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றார். மரணமடைந்த பின்னர் ஒருவரைப்பற்றி அவதூறாகப் பேசக்கூடாது என்ற ஒரு தர்மம் இருப்பினும் உண்மையின் தேவை கருதி இதை நான் குறிப்பிட விரும்புகின்றேன் (நான் முன்னர் எழுதிய கடிதங்களின் பிரதிகளை இணைத்துள்ளேன்)

09.07.1995 நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதலைக் கண்டித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிக்கை விடுத்தபோது அதைக் கண்டித்தவர்: இதேபோல 1999 செப்ரெம்பரில் நியூயோர்க்கில் இலங்கையின் உள் விவகாரங்களில் ஐ.நா. சபையாகினும் சரி வேறெந்த நபர்களாயினும் சரி தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

எமது நாட்டில் ஐனநாயகம் மீது மதிப்பு வைத்திருப்பவர்களுக்குத் தெரியும் சிங்களப் பேரினவாத அரசியல் தலைவர்களில் எத்தனைபேருக்கு அரசியல் அறிவு இருக்கிறது என்பது? இவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கருத்து வெளியிடுவதும் எழுதிய ஒப்பந்தங்களை முறிப்பதும் சர்வசாதாரணமாகிய விடயங்களே! இப்படியான அரசியல் நாகரீகம் தெரியாதவர்கள் அகன்று எப்போது புரிந்துணர்வுடன் செயற்படக்கூடிய அரசியல் நெறி தெரிந்தவர்கள் வருகின்றார்களோ அன்றுதான் எமது நாட்டில் அமைதி ஏற்படும்.

தங்க. முகுந்தன்
முன்னாள் மாநகர சபை உறுப்பினர்.
தங்க. முகுந்தன்