அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 4, 2010

சம்பந்தப்பட்டவர் கருத்துக் கூறமுன்பே ஆய்வாளர் - பத்திரிகை ஆசிரியர் முண்டியடித்துக கருத்துக் கூறுவதால்தான் தமிழர்கள் என்றும் தலைநிமிர முடியாமலுள்ளது.

பத்திரிகைச் செய்தி - 23.10.2004

நான் கடந்த 16.10.2004 ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தை ஓரளவிற்கு சகல ஊடகங்களும் வெளியிட்டன. அதில் ஒரு குறிப்பிட்ட ஊடகம், எனக்கு ஒரு முன்னுரை கொடுத்து அதன்பின்பு எனது கடிதத்தை வெளியிட்டிருந்தது. அது மட்டுமல்ல அடுத்தநாள் அதன் ஞாயிற்றுக்கிழமை(17.10.2004) பதிப்பில் அவசர அவசரமாக ஒரு ஆய்வாளரின் ஆய்வுக்கட்டுரையுடன், ஆசிரிய தலையங்கமும் தீட்டியிருந்தது.

எனது கடிதத்திற்கு சம்பந்தப்பட்டவர் கருத்துக் கூறுவதற்கு முன்பே, ஆய்வாளர்களும், பத்திரிகை ஆசிரியரும் முண்டியடித்துக்கொண்டு கருத்துக் கூறுவதால்தான் தமிழர்கள் என்றும் தலைநிமிர முடியாமல் உள்ளது. நல்ல தரத்தில் உள்ள அந்தப் பத்திரிகைக்கு நன்றாகத் தெரியும், யாழ் மாவட்டத்தில் தேர்தல் எவ்வாறு நடந்தது? எவ்வாறு நான் நிராகரிக்கப்பட்டேன்? என்று! அதுமட்டுமல்ல, தேர்தல் கண்காணிப்புக்குழுக்கள், யாழ் மாவட்டத்தில் நடந்த தேர்தல் வன்முறைகளை அறிக்கையாக வெளியிட்டு தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. அதனால்தான் சர்வதேச சமூகத்திற்கு முன்னால் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக விழுமியங்களைப்பற்றி பேச முடியாமல் கூனிக்குறுகிப்போயுள்ளனர்.

தேர்தலை மட்டும் ஜனநாயக முறைப்படி நடத்தி முடித்திருப்பார்களேயானால், தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஜனநாயக வழிக்கு வந்துவிட்டார்கள் என்று சர்வதேச சமூகமே இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து, எமது பிரச்சனையை முற்று முழுதாக தீர்ப்பதற்கு முழுமூச்சுடன் செயலில் இறங்கியிருக்கும். ஆனால் சர்வதேச சமூகமே இன்று சற்றுக் கூச்சத்துடன்தான் இலங்கை அரசுக்கு அழுத்தங்களைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜனநாயக வழிக்கு வந்துவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்று முழுதாக நான் ஆதரிப்பேன். அவ்வாறு அவர்கள் ஜனநாயக விழுமியங்களை தேர்தல் காலத்தில் மீறியபோது இந்த ஊடகங்கள் எல்லாம் இடித்துரைக்காமல், ஒத்து ஊதியபடியால்தான் இன்று இந்த நிலைமை என்பதை சம்பந்தப்பட்ட ஊடகம் உணர்ந்துகொள்ள வேண்டும். அதை விடுத்து எனது கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எழுதுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர தமிழ் மக்களுக்கு எதுவித நன்மையும் ஏற்படப்போவதில்லை.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு ஏறக்குறைய இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இன்னும் எதுவும் நடக்கவில்லை. இந்தக் காலதாமதத்திற்கு யார்காரணம்? நமது பிரச்சனைக்கு என்ன தீர்வு என்பது நம்நாட்டுமக்கள் அனைவருக்கும் தெரியும், சர்வதேச நாடுகளுக்குப் போய்த்தான் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. வன்னியில் வயலில் வேலை செய்யும் ஒரு சாதாரண தமிழனுக்கே நன்கு தெரியும், நமக்கு எது தேவை என்று. இதற்காக நாட்டுக்கு நாடுபோய் கூடிக்குலாவி பேசவேண்டிய அவசியமில்லை. இந்தக் காலதாமதங்களுக்கெல்லாம் யார் காரணம்? அழுத்தங்களைக் கொடுக்கவேண்டிய முறையில் கொடுத்திருந்தால் பிரச்சனையை முடிவிற்குக் கொண்டுவரலாம். அதைவிடுத்து சாதாரண விசயங்களுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதும், மிக முக்கியமான விடயங்களை கிடப்பில்போடுவதும்தான் இன்றுவரை நடந்துகொண்டிருக்கின்றது.

சகதமிழன் ஒருவன் சாவது சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். அதை வைத்து அவர்கள் வியாபாரம் நடத்தலாம், ஆனால் ஒரு மனிதாபிமானமுள்ள எவனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான். அந்தவகையில் போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தங்களுக்குள்ளே மோதி மரணமாவதைத் தடுக்கவே கருணாவுடன் ஒரு சமரசம் செய்துகொண்டால் என்ன? என்ற கருத்துப்பட நான் எனது கடிதத்தில் கூறியிருந்தேன். ஆனால் சம்பந்தப்பட்ட பத்திரிகை ஆசிரியர் தமிழர்களின் இரத்தத்தில் குளிர்காய நினைப்பதும், தமிழர்களின் குருதியில் வியாபாரம் செய்ய முற்படுவதும் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. இரத்தஆறும், வன்முறையும் இருந்தால்தான் தனது பத்திரிகை விற்பனையாகும் என்பதை தனது பத்திரிகை தர்மமாகக்கொண்டுள்ள அவருக்கு நான் இடையூறாக இருக்கின்றேன் போலும், அதனால்தான் எனது மரணத்திலும் வியாபாரம் செய்ய விளைகிறார்.

அடுத்து வடக்குகிழக்கு இணைந்த தீர்வே தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரதீர்வு என்பதாலேயே நான், கிழக்கில் உள்ள முஸ்லிம், சிங்களவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து அவர்களின் மனதை வெல்லவேண்டும் என கூறினேன். அதற்கேற்றாற்போல, அதே நாளில் முஸ்லிம் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி சமமான இடைக்கால நிர்வாகம் தங்களுக்கும் வேண்டும் என கூறியுள்ளார்கள், இது எதைக் காட்டுகிறது. சிறுபான்மை முஸ்லிம்களின் மனதை தமிழீழ விடுதலைப் புலிகள் வெல்லத் தவறிவிட்டார்கள் என்பதைக் காட்டவில்லையா? இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பின் பாகிஸ்தான் பிரிந்ததுபோல எமது சுதந்திரத்திற்குப் பின் கிழக்கு பிரிந்துவிடக் கூடாது என்ற எனது ஆதங்கமே! எனது கடிதத்தை நான் எழுதும் போது கனவில் கூட எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு ஆழத்திற்குப்போய் அலசி ஆராய்ந்த அந்த ஆய்வாளர் மேலோட்டமாக எல்லோருக்கும் தெரிந்த கருத்தை தனது ஆய்வில் காணத் தவறிவிட்டார். கிழக்கில் முஸ்லிம், சிங்கள மக்களின் மனதை வெல்லக் கூடிய சந்தர்ப்பம் விடுதலைப் புலிகளுக்கு அதிகமாகவே உண்டு. அடுத்து அரசுக்கு அழுத்தத்தை கொடுக்க சமமான இராணுவ பலமும், ஏதோ ஒருவகையில் தெரிவுசெய்யப்பட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் அரசியல் பலமும் உள்ள இந்த நேரத்தில் கொடுக்க முடியாத அழுத்தத்தை அவர்கள் வேறு எந்தச் சந்தர்ப்பத்தில் கொடுத்து எமது மக்களின் பிரச்சனையைத் தீர்க்கப் போகின்றார்கள்?

அதுமட்டுமல்ல ஆய்வாளர் பழைய கதைகளையும் கிளறியுள்ளார். “ஈழம்” கேட்டு விட்டு, “மாவட்ட சபைக்கு போனது போல என்று – நான் அந்த விபரமான ஆய்வாளரிடம் ஒன்று கேட்கின்றேன். உயிரிழந்த போராளிகள் 17,000க்கு மேலானவர்கள் தமது இன்னுயிரை இழந்தது ஈழத்திற்காகத்தான், இடைக்கால நிர்வாகத்திற்கல்ல. இதை பேராசிரியர் பீஷ்மாச்சாரியார் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்பாரா? கேட்டால் அவரின் நிலை என்ன? எங்களிடம் மட்டும் இடித்துக் கேட்பவர் எல்லோரையும் இடித்துக் கேட்க வேண்டும். அதுதான் பத்திரிகை தர்மம்.

அதுமட்டுமல்ல அந்த தினசரி தன்னைத்தானே “பிஞ்சிலே பழுத்தது” என்று கூறிக்கொண்டு கதை விடுகிறது. தனது உண்மை நிலையை ஒத்துக் கொள்கிறது. அந்தளவிற்கு எனக்குச் சந்தோஷமே! “பிஞ்சிலே பழுத்ததுகள் சபைக்கும் உதவாது சமூகத்திற்கும் உதவாது” தன்னைப் பிஞ்சிலே பழுத்தது என்றுகூறி தன்னைத் தாழ்த்திக் கொண்ட அந்த தினசரியைப்பற்றி மக்கள் இனித் தெரிந்துகொள்ளட்டும். பிஞ்சிலே பழுத்ததுகள் தமிழ் சமூகத்திற்குத் தேவையில்லை. அதற்கு ஒரு மறுபெயர் உண்டு “வெம்பல்கள்”. வெம்பல்கள் வேலைக்கு ஆகாது. இதற்குமேல் அந்த வெம்பல்களுக்கு விளக்கங்கள் தேவையில்லை.

வீ. ஆனந்தசங்கரி,
தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி.

No comments: