அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Sunday, May 10, 2009

இந்திய இலங்கை ஒப்பந்தம் - தமிழக மக்களுக்கும் நன்றி - சில கடந்த கால நினைவுகள்

இந்திய இலங்கை ஒப்பந்தம் வந்த வரலாறு - பலருக்குத் தெரியும்! சிலருக்குத் தெரியாது! - சில கடந்த கால நினைவுகளை மீட்டுப் பார்ப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது.

திரு. ஜே.என் டிக்ஷித் இந்தியத் தூதுவர் அவர்கள் எழுதிய Indian Foreign Policy 1947 - 2003 இலங்கை இந்திய ஒப்பந்தம் பற்றி சில பக்கங்களை ஒதுக்கியுள்ளார். அதில் அவர் இந்திரா காந்தியின்பின் திரு. ராஜீவ் காந்தி பிரதமராக வந்தபோது எவ்வாறு திரு. ரொமேஷ் பண்டாரியின் அணுகுமுறை இருந்ததெனத் தெளிவாகக் கூறியுள்ளார். இந்திய அரசு இலங்கைப் பிரச்சனையில் இந்திய கொள்கையுடன் அணுக எண்ணுகிறதே தவிர தமிழக அணுகுமுறையால் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியிட்ட (1987இல்) இந்நூலின் இறுதியில் இருப்பதை தருவது பொருத்தமானதென்று கருதி பதிவிலிடுகிறேன்!

தம் உயிரையே பணயம் வைத்து இந்த ஒப்பந்தத்தைச் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கும், இந்திய அரசுக்கும், இதற்குத் தூண்டுகோலாக இருந்த தமிழக முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், தமிழக அரசியல் தலைவர்கள் கட்சிகள் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக எம்மை காக்கும் கேடயமாக அன்போடு பாதுகாத்த தமிழக மக்களுக்கும் எமது நன்றியை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஆதரவாக நடைபெற்ற கிளர்ச்சிகளில் தமது உயிரை அர்ப்பணித்த தமிழ்நாட்டுத் தியாகிகளை நாம் எப்போதும் மறக்க முடியாது. அதுபோலச் சிறை சென்றும் பதவிகளைத் துறந்தும் இன்னல் பல ஏற்ற தலைவர்கள், தொண்டர்கள் எல்லோருக்கும் இக்கட்டத்தில் நாம் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

ஒப்பந்தம் நிறைவேற்றப்படுமோ இல்லையோ என்று ஆரூடம் கூறத் தேவையில்லை.அரசியலில் எதுவும் சாத்தியமே. என்ன நடந்தாலும் தமிழக மக்களின் அன்பும் ஆதரவும், இந்தியாவின் மேலான ஆதரவும் பாதுகாப்பும் எப்போதும் எமக்கிருக்க வேண்டும். அதுவே எமது பாதுகாப்புக்கு உத்தரவாதம். அதற்குப் பாத்திரமானவர்களாக நாம் நடந்து கொள்வோம்.

No comments: