அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, October 4, 2008

நவராத்திரியில் எமது மனங்களை அறிவோமா? – பகுதி 3

2. இயற்கையே செயல்புரிகிறது.
அர்ஜூனா! இந்த செயல்களெல்லாம் இயற்கையில் நிகழ்கின்றன! அது தன் நியதிகளை நமது உடல்களிலும், உள்ளங்களிலும் செயல்படுத்துகிறது. நாம் அதனுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொண்டு நான் இதைச் செய்கிறேன் என்கிறோம். இவ்வாறு நாம் மனமயக்கத்திற்கு உள்ளாகிறோம்.(3:27)
நாம் ஏதோ ஒரு வற்புறுத்தலுக்கு உட்பட்டே எப்போதும் செயல்புரிகிறோம். பசி வற்புறுத்தும்போது உண்கிறோம். துன்புறுதல் அதைவிடக் கொடியது. அது வெறும் அடிமைத்தனம். உண்மையான நான் எப்போதும் சுதந்திரமானது. ஒன்றைச் செய்யுமாறு அதை எது கட்டாயப்படுத்தமுடியும்? உடலுடன் நம்மை ஒன்றுபடுத்திக்கொள்ளும்போதுதான் துன்புறுகிறோம். நூன் இன்ன பெயருடையவன் என்றெல்லாம் பொருளற்றவற்றைப் பிதற்றுகிறோம். உண்மையை உணர்ந்தவன் தன்னைத் தனியாக வைத்தக் கொள்வான். அவனது உடல் எதைச் செய்தாலும் மனம் எதைச் செய்தாலும் அவன் கவலைப்படுவதில்லை.
3. சுயநலம் கூடாது.
நாம் சுயநலநாட்டம் உடையவர்களாக இருக்கும்வரை உண்மையறிவு நமக்கு ஒருபோதும் வராது. ஒவ்வொன்றிற்கும் நாம் நம்முடைய சாயத்தைப் பூசுகிறோம். உள்ளது உள்ளபடியே பொருட்கள் நம்மிடம் வருகின்றன. அவை தம்மை மறைத்துக்கொள்கின்றன என்பதில்லை. நாம்தான் அவற்றை மறைக்கிறோம். நம்மிடம் தூரிகை இருக்கிறது. ஒரு பொருள் வந்ததும் அது நமக்குப் பிடிக்காவிட்டால் அதற்கு சிறிது சாயம் பூசிவிட்டுப் பிறகு பார்க்கிறோம். நாம் எதையும் அறிந்து கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒவ்வொன்றின்மீதும் நமது வண்ணத்தைப் பூசுகிறோம். எல்லாக் காரியங்களிலும் தூண்டுதலாக இருப்பது சுயநலம். ஒவ்வொன்றும் நம்மால் மறைக்கப்படுகிறது. பட்டுப்புழு தன்னுடலிலிருந்தே நூலை நூற்று அதனால் ஒரு கூண்டை செய்து அதிலேயே தன்னை அடைத்துக்கொள்வதுபோல் நாமும் இருக்கிறோம். தன் செயலாலேயே அது தன்னை சிறைப்படுத்திக் கொள்கிறது. அதையே நாமும் செய்கிறோம். நான் என்று நாம் சொன்னால் அந்தக் கணமே நூல் ஒரு சுற்றுச் சுற்றுகிறது. நான் - எனது என்றால் இன்னொரு சுற்றுச் சுற்றுகிறது. இப்படியே சுற்றிக்கொண்டு போகிறது. செயலின்றி ஒருகணங்கூட நம்மால் இருக்கமுடியாது. செயல்புரியுங்கள்! உங்கள் அண்டை வீட்டுக்காரர் உங்களிடம் வந்து சற்று எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டால் எப்படிச் செய்வீர்களோ அந்த அளவிலேயே உங்களுக்கும் உதவி செய்து கொள்ளுங்கள். அதற்குமேல் அல்ல, இன்னொருவனின் உடலைவிட உங்கள் உடல் உயர்ந்த மதிப்படையதல்ல. அவனது உடலுக்கு செய்வதைவிட அதிகமாக உங்கள் எடலுக்கு எதுவும் செய்யாதீர்கள். இதுதான் சமயம் கூறுகிற உண்மை. யாருடைய முயற்சிகள் எந்தவிதமான ஆசையும், சுயநலமும் அற்றதோ அவன் கர்மத்தளைகளை ஞானத்தீயால் எரித்துவிட்டவன் அவனே அறிஞன். (4:19) புத்தகங்களைப் படிப்பதால் அது கிடையாது. கழுதையின்மீது ஒரு நூல் நிலையத்தையே சுமத்திவிடலாம். ஆதனால் அது கல்வியறிவு பெற்று விடாது. புல நூல்களைப் படிப்பதால் என்ன பயன்? செயலில் பற்றை முற்றிலுமாக விட்டு, எப்போதும் திருப்தியான மனதுடன் இலாபத்தில் ஆசைகொள்ளாமல் செயல்புரியும் ஞானி கர்மத்தைக் கடந்தவன். (4.20)

No comments: