அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, March 4, 2010

2004 தேர்தல் அசம்பாவிதங்கள் பற்றி வெளியிட்ட அறிக்கை

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவுக்குத் தலைமைதாங்கிப் போட்டியிட்டவருமாகிய திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்களின் தேர்தல் அசம்பாவிதங்கள் பற்றி வெளியிட்ட அறிக்கை.

உயர்ந்த ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட தமிழ் தலைவர்களில் ஒருவராகிய தமிழ் மக்களால் பாசத்துடன் தந்தை செல்வா என்றும், ஈழத்துக் காந்தி என்றும் அன்போடு அழைக்கப்பட்ட கியூ சி பட்டம் பெற்ற காலஞ்சென்ற தந்தை உயர்திரு சா.ஜே.வே. செல்வநாயகம் அவர்கள் தலைமையில் உருவாகிய அரசியற் கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.

அவரால் 1949ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று அழைக்கப்பட்ட சமஷ்டிக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதும் அவராலேயே அக்கட்சி செயலிழக்கவைக்கப்பட்டது. இக்கட்சியினை மீளப்புதுப்பிக்கும் எண்ணமே இல்லாதிருந்த அவர் இப்பொழுது நடக்கும் சம்பவங்களைப் பார்த்து அவருடைய ஆவி நிச்சயமாகச் சஞ்சலப்படும்.

1983ம் ஆண்டு அன்றைய அரசு பாராளுமன்றத்தின் கால எல்லையை சர்வசனவாக்கெடுப்பின் மூலம் நீடித்த போது தமது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்கின்ற ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதை ஆட்சேபித்து, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்ததன் மூலம் தமிழர் விடுதலைக் கூட்டணி பாரிய ஜனநாயகக் கட்சியாக சரித்திரத்தில் இடம்பிடித்துக் கொண்டது.

1983-1989க்கும் இடைப்பட்ட காலத்தில் இக்காலி இடங்களை நிரப்புவதற்கு நியமனப்பத்திரங்கள் பலதடவைகள் கோரப்பட்ட போதும் எவருமே நியமனப்பத்திரம் தாக்கல் செய்யாது அவ்விடங்களை காலியாகவே வைத்திருந்தது பெருமை தேடித் தந்த தமிழ் மக்களையும், அப்பாராளுமன்ற உறுப்பினர்களையும் முழு உலகமுமே பாராட்டிக்கொண்டது.

இப்பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றம் செல்லவிடாது தடுப்பதற்காக அரசியற்சாசனத்தில் 6வது திருத்தப் பிரேரணை வேண்டுமென்றே கொண்டுவரப்பட்டது. 6வது திருத்தப் பிரேரணையின் கீழ் எடுக்கப்படவேண்டிய சத்தியப் பிரமாணத்தை செய்யாது பிடிவாதமாக நின்றமையால் இப்பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் செல்லமுடியவில்லை. இத்தகைய பெரும் பாரம்பரியத்தை தமிழர் விடுதலைக் கூட்டணி கொண்டிருந்தமையினாலேயே ஜனநாயகக் கோட்பாடுகளில் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை இன்றும் மதிக்கிறார்கள்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியாகிய சமஷ்டிக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பு 22 பாராளுமன்ற ஆசனங்களைக் கைப்பற்றியதாகவும், வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் வாக்குகளில் 2/3 பங்கு வாக்குகளை பெற்றதாகப் பெருமையாகக் கூறுகின்றனர். ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும், அகிம்சை வழிமுறைகளுக்கும் கட்டுப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிநிதித்துவப்படுத்தும் சில உறுப்பினர்களிடம் ஜனநாயக முறைப்படி சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற்ற தேர்தலில்தானா அவர்கள் வெற்றிபெற்றார்கள்? என்று அவர்களையே கேட்க விரும்புகின்றேன்.

தமிழ் தேசிய அமைப்பில் உள்ள முன்னைய தமிழர் விடுதலைக் கூட்டணியினர், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தைப் பெறத் தவறியபின் பலகாலமாக செயலிழந்திருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தை மோசடி மூலம் பாவித்தனர். அகிம்சை முறைக்குக் கட்டுப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்டதன் பின் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியை மீளப்புதுப்பிக்க எண்ணியதேயில்லை. அக்கட்சியின் ஸ்தாபகரின் கொள்கைகளுக்கு முரணானதான வன்முறை, பயமுறுத்தல், தகாத முறையில் வாக்கு மோசடி, பெருமளவில் ஆள்மாறாட்டம் முதலியவற்றைச் செய்து வெற்றிபெற்றதனை எண்ணி தமிழ்த் தேசிய அமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியினர் வெட்கித் தலைகுனிய வேண்டும்.

சர்வதேச சமூகம் அதன் ஸ்தானிகர்கள் முலமாகவும், பல்வேறு உள்ளுர், வெளிநாட்டுக் கண்காணிப்புக்குழு மூலமாகவும் வடக்கு கிழக்கில் தேர்தல் எவ்வாறு நடைபெற்றது என்பதை நன்கு அறிந்தே வைத்துள்ளனர். வடக்கு கிழக்கு தமிழ்மக்களை ஒன்றிணைத்து விட்டோமென்றும், இடைக்கால நிர்வாகத்தை அமைப்பதற்கு தமிழ் மக்களின் ஆணையைப் பெற்றுவிட்டோமென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூற்றைக் கேட்டு சர்வதேச சமூகம் எள்ளி நகையாடும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கக்கூடாது.

நாட்டின் நடப்புக்களை மிக அவதானத்துடன் கண்காணித்துக் கொண்டிருக்கும் சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாது. எமது பிரச்சனையில் வெறும் பாராளுமன்ற ஆசனங்களில் கண்வைத்துச் செயற்படும் சில தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிலும் பார்க்க பல நன்கொடை கொடுக்கும் நாடுகள் கூடுதலாக அக்கறை கொண்டுள்ளனர் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். நீதியாகவும் நியாயமாகவும் ஒரு தேர்தல் நடந்திருந்தால் எமது பிரச்சனையின் தீர்வில் சர்வதேச சமூகம் ஒரு உற்சாகமாக செயற்பட்டிருக்க உதவியிருக்கும். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உணரத்தவறிவிட்டனர். தேர்தலில் பல மோசடிகள் மூலம் வெற்றிபெற்றதமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் நடந்த பல தில்லுமுல்லுகளை அறிந்திருக்கும் சர்வதேச சமூகத்திடமிருந்து நூறு வீத ஆதரவையோ, இவர்கள் கூறும் அத்தனையையும் சரியென்று ஏற்றுக் கொள்வார்கள் என்பதை எதிர்பார்க்கவும் கூடாது. வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தல் செல்லுபடியற்றதாக்கவேண்டும் என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்று. தேர்தல் ஆணையாளர் இத்தேர்தலினை செல்லுபடியற்றதாக்கக் கூடிய அதிகாரம் தனக்கு இல்லையென்று சொன்னாரே தவிர நியாயமான முறையில், நீதியானவகையில் இத் தேர்தல்கள் நடைபெறவில்லையென்பதை ஏற்றுக்கொண்டார். பல்வேறு நாடுகளிலிருந்தும் வந்திருந்த கண்காணிப்புக் குழுக்களும், உள்ளுர் குழுக்களும் பாதகமான அறிக்கைகளையே சமர்ப்பித்தும் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் வடக்கு கிழக்கில் நடைபெற்ற தேர்தல் மிரட்டல்களும், வன்முறைகளும் கொண்டிருந்ததாக தமது ஆதங்கங்களை வெளியிட்டனர். மட்டக்களப்பு ஐ.தே.கட்சி வேட்பாளருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவருக்கும் என்ன நடந்ததென்பதை சர்வதேச சமூகம் அறிந்திருக்கவில்லையென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கருதுகின்றார்களா? எனது குழுவைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு எத்தகைய இடைஞ்சல்களைக் கொடுத்தார்கள் என்பதையும் எவ்வாறு அவர்கள் தாக்கப்பட்டனர் என்பதும் துண்டுப்பிரசுரங்கள் பறிக்கப்பட்டு எரிக்கப்பட்டன என்பதும் உலகம் அறியாததல்ல. யாழ் மாவட்டத்தில் தேர்தல் செல்லுபடியற்றதாக்கவேண்டும் என்று சீ.எம்.ஈ.வி (CMEV) என்ற தேர்தல் கண்காணிப்புக் குழு கூறியுள்ளது.

இத் தேர்தலில் எவ்வாறு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்ய உபயோகிக்கப்பட்டார்கள் என்பதும், எவ்வாறு வாக்குப் பெட்டிகள் நிரப்பப்பட்டன என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு உண்மையில் தெரியாதா? உண்மையான வாக்காளர்கள் பல்வேறு சிரமங்களினால் வாக்களிக்க விடாது தடுக்கப்பட்டார்கள் என்பதையும், எவ்வாறு இடம்பெயர்ந்தவர்களினதும், இறந்தவர்களினதும் வாக்குகள் அளிக்கப்பட்டன என்பதும் இவர்கள் அறியாததா? சிறுபேரூந்துகள், முச்சக்கரவண்டிகள் போன்ற ஏனைய வாகன உரிமையாளர்கள்எவ்வாறு தமது வாகனங்களை தேர்தலுக்கு முந்திய தினம் தம்மிடம் கையளிக்க வேண்டும் என எச்சரிக்கப்பட்டனர் என்பதையும் தேர்தல் தினத்தன்று அத்தனை வாகனங்களும் எந்த அதிகாரிகளினதும் இடையூறு இன்றி பெருமளவில் வாக்கு ஆள்மாறாட்டம் செய்ய பயன்படுத்தப்பட்டதும் நீங்கள் அறியாததா? எந்த வாகனமும், தேர்தல் பிரசாரத்திற்காக எவருக்கும் வாடகைக்கு அமர்த்த விடக்கூடரது என்று வாகனச் சொந்தக்காரர்கள் எச்சரிக்கப்பட்டதும் இவர்கள் அறியாததா? உள்ளுர் பத்திரிகைகள் தமிழ் தேசிய அமைப்பின் தலையீடின்றி தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கான உரிமையாவது வழங்கப்பட்டிருந்தனவா? விளம்பரங்களுக்கான கட்டணம் செலுத்தப்பட்டிருந்தும் இறுதி நேரத்தில் அவைகள் விளம்பரப்படுத்தாது தடுக்கப்பட்டதும் அறியாதவர்களா?

தமிழ்த் தேசிய அமைப்பு தமது பாவனைக்காக 78 மோட்டார் சைக்கிள்களையும், 6 ஜீப் வண்டிகளையும் தமது தேவைகளுக்காக பயன்படுத்தியது. அவற்றில் 48 மோட்டார் சைக்கிள்கள், 2 ஜீப் வண்டிகள் பதியப்படாத வாகனங்கள் என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மறுப்பார்களா? அப்பாவி மக்களுக்கு எத்தகைய பயத்தினையும், பீதியையும் இம்மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களும் உடன் இருந்து சவாரி செய்தவர்களும் ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதை கற்பனை பண்ணிப்பார்க்க முடியும். இவர்கள் தான் யாழ்ப்பாண குடாநாட்டில் சகல மூலைமுடுக்குகளில் எல்லாம் சென்று வாக்காளர்களை மிரட்டித் துன்புறுத்தி பிரச்சார நாட்களிலும், தேர்தல் தினத்தன்றும் செயற்பட்டதை தமிழ் தேசிய அமைப்பினர் அறியாததா? மேலும் எத்தனை வாகனங்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டனவென்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இளம் தீவிர ஆதரவாளர்கள் இவ்வாறு மூலைமுடுக்குகளுக்கு அதிவேகமாகச் சென்று மக்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும் சிலிர்ப்பூட்டும் செயலாக இருக்கலாம். ஆனால் எனது பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி நண்பர்கள் அப்பாவி மக்களை இவ்வாறு பயமூட்டுவதில் என்ன சிலிர்ப்பைக் கண்டீர்கள் என்பதைக் கேட்க விரும்புகின்றேன். அப்பாவி வாக்காளர்கள் பலரை வீட்டைவிட்டு வெளியில் வராமல் செய்யவும், பெருமளவில் ஆள்மாறாட்டம் செய்யவும் உதவியது இத்தகைய செயல்கள்தான்.

1996ம்ஆண்டு உள்ளுராட்சித் தேர்தல்களின் போதும், 2000ம் ஆண்டு பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போதும் வீதிகளில் நடமாடக் கூட எவ்வாறு பயந்து செயற்பட்டார்கள் என்பதை பழைய தமிழர் விடுதலைக் கூட்டணி நண்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இத்தகைய பழைய கூட்டணித் தலைவர்கள் அகிம்சை வழியில் சென்ற எமது மறைந்த தலைவர்களுக்கு சிறிதளவேனும் மதிப்பு வைத்திருந்தால் தமது புதிய நண்பர்களுடைய வன்முறைகளைக் கண்டித்திருப்பார்கள். ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளின் ஆரம்பகால உறுப்பினர்கள் அமைதியாக இச்செயல்களைக் கண்டு கண்ணீர் விடுகின்றார்கள்.

சுயேட்சைக்குழு தலைவர் என்ற கோதாவில் 582 வாக்களிப்பு நிலையங்களுக்கும் தலா இருவர் வீதம் வாக்களிப்பு நிலைய முகவர்களை நியமித்திருக்கலாம். ஆனால் இந்த 572 நிலையங்களில் ஏதாவது ஒன்றில் தன்னும் எமது முகவர்களை செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விட்டார்களா? ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி முகவர்கள் சிலர் தாக்கப்பட்டனர். சிலர் விரட்டப்பட்டனர். சிலர் வாபஸ்பெற்றுக் கொண்டனர். அதன் விளைவாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழ் தேசிய அமைப்பினர் மட்டுமே முகவர்களை நியமிக்க முடிந்தது. தமிழ் தேசிய அமைப்புக்கு இந்த வசதிகள் இருந்தபோது 95% அல்ல 100% வாக்குகள் பெறுவதற்கு இன்னும் என்ன தேவைப்பட்டன? எம்மால் ஒரு கூட்டமேனும் நடத்த முடியவில்லை. வாக்குச் சேகரிக்க அனுமதிக்கப்படவில்லை. பத்திரிகை விளம்பரங்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளும் தணிக்கை செய்யப்பட்டன. அவைகளும் இறுதி நேரத்தில் பிரசுரிக்க விடாது தடுக்கப்பட்டன.

கடிதமூலமாவது எங்களின் கொள்கைகள் வாக்காளர்களுக்கு அனுப்பினாலும் அவைகள் உரியவர்களைச் சென்றடையவிடாது தடுக்கப்பட்டன. அத்தோடு இடம் பெயந்தவர்கள் இறந்தவர்கள் தமக்கு மாறானவர்கள் எனக் கருதப்பட்ட உண்மையான வாக்காளர்கள் ஆகியோரின் வாக்காளர் அட்டைகளுடன் 78 மோட்டார் சைக்கிள்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த சகல முச்சக்கர வண்டிகள் வான்கள் சிறுபேரூந்துகள் போன்றவற்றைப் பாவித்து ஆள்மாறாட்டம் செய்தமை எல்லாவற்றிற்கும் மேலாக எந்தவொரு மாற்றுக் குழுவினரின் முகவர்கள் இல்லாமல் முறைதவறிப் பெறப்பட்ட வாக்காளர் அட்டைகள் ஒவ்வொன்றிற்கும் ஒன்றிற்கு மேற்பட்ட வாக்குச் சீட்டுக்கள் கொடுக்கப்படுகின்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் ஆகியோரின் ஒத்துழைப்போடு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 95 சதவீதமல்ல 100 வீதம் வாக்குகளை ஏன் பெறமுடியவில்லை உண்மையில் அவர்களுக்கிருந்த வசதிகளைப் பார்க்கும் போது விழுத்திய வாக்குகள் போதுமானவையல்ல.

வடக்கு கிழக்கு மாகாண மக்களுடைய ஆணையினையும் மூன்றில் இரண்டு வாக்குகளையும் பெற்று விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு கிழக்கில் உள்ள அரச கட்டுப்பாட்டில் இல்லாதபிரதேசத்தில் இருந்த நிலமையை இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எடுத்துக் கூறுவார்களா?

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் தெருக் கூத்து என்ற போர்வையில் என்னை மிகவும் கீழ்த்தரமான முறையில் சித்தரித்தும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியும் நாடகமாடி அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்தகைய குற்றச்சாட்டுகள், பிரச்சாரங்களுக்கு மறுப்புத் தெரிவித்து அல்லது மறுதலித்து பேசவோ துண்டுப் பிரசுரம் விநியோகிக்கவோ கூட்டம் வைத்து விளக்கமளிக்கவோ அனுப்பப்பட்ட கடிதங்கள் மக்களிடம் சென்றடைய கூடியவாறாக இருந்தனவா என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உலகிற்கு தெரிவிக்கவேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முழு மரியாதை செலுத்தி வன்னி கிளிநொச்சி போன்ற பகுதிகளில் மக்களுக்கு வாக்குரிமையினைப் பெற்றுக்கொடுக்க காட்டிய ஆர்வம் அரசகட்டுப்பாட்டில் இல்லாத விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இருந்து வருகின்ற வாக்காளர்கள் தமது வேட்பாளர்கள் யாரென்பதை அறிய எக்கட்சிக்கோ கொள்கைக்கோ வாக்களிக்க வேண்டும் என்று அறிகின்ற அடிப்படை உரிமையினை பெறுவதில் ஆர்வம் காட்டத் தவறிவிட்டனர். விடுவிக்கப்படாத பிரதேச அப்பாவி வாக்காளர்களுக்கு இவ் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதை ஐரோப்பிய ஒன்றியம் அறிந்தால் நிச்சயம் அதிர்ச்சி அடையும். ஆயிரக்கணக்கானவர்கள் வாக்களிக்க வந்தார்கள். வாக்களிக்கும் தகுதியற்ற இளைஞர்களும் மாணவர்களும் வன்னியில் உள்ள யாரோ ஒரு அதிகாரியின் பணிப்பிற்கிணங்க பிறரின் வாக்கினை அளிக்க அனுமதித்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு இத்தேர்தல் வாக்களிப்பு ஒரு சுற்றுலாவாகவே இருந்தது. 1959ல் இருந்து 1983ம் ஆண்டு வரை ஏறக்குறைய 25 ஆண்டுகள் கிராம சபைத் தலைவராகவும் பட்டின சபைத் தலைவராகவும் 13 ஆண்டுகளுக்கு மேல் பாரளுமன்ற உறுப்பினராக சேவை செய்து யாழ் மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சியை தனிமாவட்டமாகப் பிரித்தெடுத்த எனக்கு கிளிநொச்சி தொகுதியில் 171 வாக்குகள் விழுந்தது பெரும் ஆச்சரியமல்ல. 11601 அதிகப்படி வாக்குகளால் இத்தொகுதியை வென்ற நான் தோற்பது எனது எதிரானவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விடயமாயிருக்கலாம். ஆனால் நான் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன். எனது ஒரே கவலை நல்லதொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைத்தும் தம்மை விடுவிக்கத் தவறிவிட்டனர். நிச்சயமாக தமிழ் தேசிய அமைப்பினர் முகமாலை கொத்தணி வாக்குச் சாவடிகளில் வாக்களிப்பு ஆரம்பித்து இரண்டு மணித்தியாலங்களுக்குள் 24000 வாக்குகளுக்கு மேற்ப்பட்ட வாக்காளர்கள் வாக்களித்து விட்டனர் என்பதை தெரிந்திருப்பார்கள். “நம்ப முடியாத அளவிற்கு நிமிடத்திற்கு 3 வாக்குகள் வீதம் இங்கு வாக்களிப்பு நடந்திருக்கின்றது!”

தேர்தலில் தாம் அடைந்த வெற்றியைப் பெரிதாகக் கொக்கரிக்காமல் மிக அமைதியாகத் திருப்திப்படும்படி ஆலோசனை கூறவிரும்புகிறேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள தமிழர் விடுதலைப் கூட்டணி உறுப்பினர்கள் சிலர் கட்சியில் பொறுப்புள்ள பதவிகள் வகுத்த முதிர்ச்சி பெற்ற உறுப்பினார்களாயிருந்தும் அனுபவமற்ற இளம் அரசியல் அனுபவம் இல்லாத இளைஞர்களுக்கு வேண்டிய ஆலோசனைகளையும் வழிநடத்தல்களினையும் கொடுக்கத் தவறியதால் இன்று அவர்கள் மோசடி மூலம் தேர்தலில் வெற்றி பெற்றார்கள் என்று அவப் பெயரினை சுமக்க வேண்டியுள்ளது. அவர்களை தனிமையில் விட்டிருந்தால் முறைப்படி சில ஆசனங்களைப் பெற்றதாக சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக் காட்டியிருப்பார்.

தமிழர் தேசிய அமைப்பு வடக்கு-கிழக்கு மாகாணத்தில் தேர்தல் மோசடி மூலமாக 20 ஆசனங்களைப் பெற்றன என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகள் கூட்டு மாற்றுக் கட்சியினர் எவரையும் சுதந்திரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அனுமதிக்கவில்லை என்பதை முழு உலகமும் அறிந்திருக்கின்றது. அத்தோடு 1960ம் ஆண்டில் இருந்து இன்று வரை 45 வருடமாக நடைபெற்ற ஒவ்வொரு பாரளுமன்றத் தேர்தல்களில் போட்டிபோட்ட என்னை என் அனுபவத்தில் இன்றுவரை கண்டறியாத முறையில் தனிமைப்படுத்தி கீழ்த்தரமான முறையில் பிரச்சாரம் செய்தனர். பட்டம் பதவிக்கு கெடுப்பிடித்து தமிழ் தேசிய அணியில் உள்ள முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் எமது பகுதியில் முன்பு என்றும் கண்டும், கேட்டும் இராத வகையில் தேர்தலில் மிரட்டல், சண்டித்தனம் போன்ற புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். வடக்கு கிழக்கில் நடைபெற்ற ஆள்மாறாட்ட வீதம் இந்த நாட்டில் என்றும் கண்டிராத வகையில் நடைபெற்றுள்ளது. 20 ஆண்டு காலமாக சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வாழும் எமது மக்களை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும். இத்தேர்தலில் தோற்ற ஒரு வேட்பாளரின் உள்ளக் குமுறல் அல்ல. வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல் காலத்திலும், தேர்தல் தினத்தன்றும் கடும் பயப்பீதிக்கு உள்ளாக்கப்பட்ட வாக்காளர்களின் உணர்வாகும்.

தமிழர் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதி மக்களை எதிர் நோக்கும் தைரியம் இருக்கும் என்று நான் நம்பவில்லை. தமிழ் தேசிய அமைப்பு தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெற்றது என்றறிந்த சர்வதேச சமூகம் மக்களின் ஆணையைப் பெற்றுவிட்டோம் என்ற இவர்களின் கூற்றினை நிச்சயம் எள்ளி நகையாடும். இவர்களின் கூற்று நியாயமாக சிந்திக்கும் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் தப்பபிப்பிராயத்தினையே உண்டுபண்ணும். இதற்கு தமிழ் தேசிய அமைப்பில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களே முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.


வீ. ஆனந்தசங்கரி,
தமிழர் விடுதலைக் கூட்டணி
25.12.2004

No comments: