அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Saturday, March 20, 2010

ஜனநாயகம் இலங்கையில் எங்காவது இருக்கிறதா?

கடந்த 17ஆந் திகதி புதன்கிழமை வெளியான யாழ்ப்பாணப் பத்திரிகைகளான வலம்புரியிலும் உதயனிலும் ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சரத் என் சில்வா அவர்கள் கருத்தை மையமாக வைத்து ஜனநாயகம் பற்றிய வாதங்கள் மிக அருமையாக ஆசிரியர் தலையங்கத்தில் தீட்டப்பட்டிருந்தன.

இலங்கையில் ஜனநாயகம் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே சுத்தமாக இல்லை என்பதே எனது அடிப்படை வாதம். இந்திய சுதந்திரத்துக்குப் பின் இலங்கைக்கு 1948இல் பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்கிய பொழுதிலே இந்நாட்டுக்கு என்று ஒரு கொடி ஒழுங்காக வடிவமைக்கப்படவில்லை.அதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டு 2 வருடங்களின் பின்பே சிறுபான்மையினத்தின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த ஒட்டுக் கொடியை தேசியக் கொடியாக ஏற்றது அரசு. இதை ஏற்கனவே எனது பதிவில் குறிப்பிட்டிருந்தாலும் இப்போது குறிப்பிட வேண்டிய கட்டாயமிருக்கிறது. அதன்பின் நாடாளுமன்றத்தில் மலையக மக்களின் பிரதிநிதிகளின் பிரவேசத்தைத் தடுப்பதற்காக குடியுரிமை மசோதாவைக் கொண்டுவந்து மலையக மக்களின் வாக்குரிமைகளைப் பறித்தார்கள். இதன்பிறகு சிங்களம் மட்டும் சட்டம். அதன்பின் தரப்படுத்தல் - புதிய அரசியல் சாசனம். பல தமிழ்த் தரப்பின் எதிர்ப்பையும் மீறி இதை நிறைவேற்றிய அரசு இருந்த இடம் தெரியாமல் போனது. பின் வந்த புதிய அரசு பெற்ற அதிகூடிய ஆசனங்களின் ஆணவத்தால் இன்னும் பல திருவிளையாடல்களை மேற்கொண்டது. பாராளுமன்ற ஜனநாயகக் கோட்பாட்டை மீறி தனது ஆட்சியை மீளவும் 6 வருடங்கள் நீடிக்க விரும்பி சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியது.

இதற்கு முன் 1981இல் மாவட்ட சபைத் தேர்தலில் நடந்த ஒரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தை முன்வைத்து அரச படையினரின் ஆதரவோடு யாழ்ப்பாண நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.1983இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு களியாட்ட விழாவில் தமிழ் இளைஞர்களுக்கும் படைத்தரப்பினருக்கும் ஏற்பட்ட கைகலப்பு - துப்பாக்கியால் சுடுமளவுக்குச் சென்று நாடே கலவரத்தால் அல்லோலகல்லப்படுமளவுக்கு வித்திட்டது. வெலிக்கடைப் படுகொலைகளும் வல்வெட்டித்துறை குமுதினப் படகுப் படுகொலைகளும் இன்னும் பலவும் நினைவுகொள்ளப்படுவது அவசியம்.

அதன்பிறகு தாக்குதல்கள் கொள்ளைகள் கடத்தல்கள் கொலைகள் என்று தொடர்ந்து பின்னர் அது பெரிய எறிகணை - குண்டுத் தாக்குதல் கப்பல் விமான பீரங்கித் தாக்குதல் என பல அப்பாவிகளின் உயிரைக் கொத்தாகவும் அவர்களது சொத்துக்கள் உடைமைகள் என அனைத்தையும் அழித்து நாடு குறிப்பாக வடக்கு கிழக்குப் பகுதியே இன்று சாம்பல் மேடாகியிருக்கிறது.

சரி இது அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஜனநாயகம்.

இனி எம்மவர் பக்கத்தில் ஜனநாயகத்தைப் பார்க்க வேண்டும்.

1985களில் 4 ஆயுதக் குழுக்கள் ஒன்றான சம்பவம் பலருக்குத் தெரிந்திருந்தாலும் இன்றைய இளம்பராயத்தினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. இதுபற்றியும் நான் படங்களாக ஒரு பதிவு அண்மையில் இட்டேன். இவர்கள் ஒன்றாகி பின் தமக்குள் முரண்பட்டு ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டதுதான் உண்மை. அல்லது மற்றவர்களை அழிக்க மேற்கொள்ளப்பட்ட சதியோ? என இப்போது ஆராய வேண்டியிருக்கிறது.

சம்பந்தரும் ஜனநாயகமும்

இதன்பின் 2002இல் தமிழர் விடுதலைக் கூட்டணிக்குச் சேரவேண்டிய ஒரு பாராளுமன்றப் பதவிக்காக விடுதலைப் புலிகளிடம் நியாயம் கேட்டு வெற்றிபெற்ற சம்பந்தன் தனது தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவரை தேசியப்பட்டியலில் நியமித்தார். இதுபற்றிய குறிப்புக்கள் அனைத்தும் எனது முன்னைய பதிவில் இருக்கிறது. விரிவாகச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதுவரை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யாத சம்பந்தனும் சரி - மறைந்த ஜோசப் பரராஜிங்கமும் சரி தமது கிழக்குப் பிராந்தியத்துக்கு ஒரு நியமன உறுப்பினரைப் பெற்றுக் கொள்வதற்காகவே அமரர் சிவசிதம்பரத்தின் மரணச் சடங்கில் பங்குபற்ற முதலில் கிளிசொச்சிக்கும் பின் யாழ்ப்பாணத்துக்கும் அவரது பூதவுடலுடன் வந்தார்கள். 1998இல் யாழ்ப்பாண மாநகர சபைத் தேர்தலுக்கு அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் மறைந்த ஜோசப் பரராஜசிங்கத்தை பிரச்சாரத்துக்கு அழைத்தும் புலிகளுக்கு அமைவாக அவர் பங்குபற்றவில்லை.சில வேளை அவர் வந்து பேசியிருந்தால் 9 பிரதிநிதிகளைப் பெற்றிருந்த நாம் சில அதிக ஆசனங்களை 1998இல் யாழ் மாநகர சபைத் தேர்தலில் பெற்றிருக்க முடியும்.

2000தேர்தலுக்கும் 2001 தேர்தலுக்கும் ஒரு தடவையாவது வந்துபேச அழைத்தும் வராதவர்கள் 2004இல் போட்டிபோட்டு வந்தார்கள்! எதற்காக - ஒன்று பதவிக்காக! மற்றயது புலிகளின் விசுவாசத்திற்காகவே! இப்போது புலிகளுமில்லை!முன்னரைப்போல தமிழ்மக்களின் ஆதரவு இருக்குமா என்ற சந்தேகத்தில் திட்டமிட்டு வன்னிக்கும் - யாழ்ப்பாணத்துக்கும் தனது விஜயத்தை ஏற்பாடுசெய்திருக்கிறார். தமக்கு எப்படியாவது பதவி தேவை என்பதற்காக சம்பந்தன் ஆடாத ஆட்டம் போடுகிறார்! அமரர் அமிர்தலிங்கத்தின் மறைவுக்கு யாழ்ப்பாணப் பக்கமே எட்டிப் பார்க்காத சம்பந்தன் (இந்திய அமைதிப்படையின் விமானத்தில் திருமலைக்கு வந்து இறங்கியவர் திரும்ப அதே விமானத்தில் இந்தியா சென்றதுதான் உண்மை யாழ்ப்பாணத்துக்கு வரவேயில்லை) கடந்த 2004 தேர்தலிலும், இம்முறையும் அவரது பிறந்த இடமான பண்ணாகத்துக்கு - வழக்கம்பரைக்குச் சென்று பேசியிருக்கிறார்.

3 comments:

Jana said...

ஜனநாயகம்????? ஏதாவது வேற்றிக்கிரகத்தில் தேடிக்கண்டுபிடிக்கவேண்டியது என நினைக்கின்றேன்!!!

Ram said...

1983 incident happened after killing of 13 army in Jaffna.as you mentioned
the attack on police in school carnival happened in 1977.pls correct

Ram

Unknown said...

எமது பிறந்த மண்ணில் ஓர் அளவேனும் ஜனநாயகம் இருந்ததால்தான் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மாறி மாறி தமிழ் மக்களின் தலையில் மிளகாய் எளிதாய் அறைக்கின்றார்கள் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி mullaimukaam.blogspot.com