அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Thursday, September 11, 2008

இன்று அமரத்துவமடைந்த யாழ் முன்னாள் முதல்வர் பொன் சிவபாலனின் 10வது நினைவு தினம்.

எனது நினைவுகளில் சிவபாலன் அண்ணன் ஒரு தனித்த முக்கிய இடத்திலிருப்பவர். காரணம் அவர் எமதூருக்கு அண்மையில் சித்தங்கேணியில் வசித்தவர். எமக்கு உறவினர்கள் பலர் சித்தங்கேணியிலிருப்பதால் அவரும் உறவினர்தான் அடிக்கடி சென்றுவருவதுண்டு. அவரைப்பற்றி தொடரில் எழுதலாம் என்றிருந்தாலும் இன்றைய நினைவு நாளில் அவர்சம்பந்தப்பட்ட சில நினைவுகளையாவது வாசகர்களுடன் பகிரலாம் என இன்று பதிவிடுகிறேன். விரிவாக இன்று குறிப்பிட நேர அவகாசம் இல்லாமைக்கு மன்னிக்கும்படி அன்பாக வேண்டுகிறேன்.

அளவுகடந்த சமய நம்பிக்கையுடன் நிறைந்த கல்வி அறிவும் - பேச்சுத்திறனிலும் கவிபாடும் திறமையும் அவருக்குண்டு. ஒரு தடவை எமதூரில் இடம்பெற்ற இந்து இளைஞர் மன்றத்தின் ஆண்டுவிழாவுக்கு அவரும் புதுவை இரத்தினதுரை போன்ற பலரும் கவி அரங்கிற்க வந்தவேளை இவர் ஏதாவது இடக்குமுடக்காக கவி பாடுவார் என்று நான் கருதியதும் அப்படியே அவரும் கவிதை வடித்ததையும் இன்று நினைத்துப் பார்க்கின்றேன். அவரை மீண்டும் வாசகர்களுடன் நினைவு கொள்வதில் ஓரளவு மனநிறைவடைகிறேன்.

நான் தமிழர் விடுதலைக் கூட்டணியில் உறுப்பினராக இணைந்தது எனது பெரியதந்தையாரின் மறைவுக்குப்பின் என்றாலும் தொடர்பு ஏற்பட்டது சிறு வயதிலிருந்தே. ஏனெனில் எனது 5ஆவது வயதில் 1970 பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் பெரியப்பா தோல்வியடைந்தபோது இரவிரவாக பலர் வந்த தமது சோகத்தைத் தெரிவித்துச் சென்றதுபற்றி எனது பெரியப்பா என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் (வரலாற்றின் மனிதன் - அமிர்தலிங்கம் பவள விழா மலரில் 32வது கட்டுரை) குறிப்பிட்டிருக்கின்றேன். அதேநேரம் வீரகேசரியில் வெளியான நம்மவர் நட்புகளை பார்த்தால் கடவுள்தான் வந்தாலும் காப்பாற்றுவாரோ தெரியாது – யாழ் மாநகர உறுப்பினர் உள்ளம் குமுறுகிறார் என்ற தலைப்பிட்டு வீரசேகரியில் 17.04.1999 10ஆம் பக்கத்தில் பிரசுரித்தது. நான் 20.03.1999 திகதியிட்டு எழுதிய ஈழப் போராட்ட விடுதலை வீரர்களுக்கு மனிதாபிமானத்தின் பெயரால் விடுக்கம் பணிவான வேண்டுகோள் என்ற 3 பக்கச் செய்தியின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட வரிகளை வீரகேசரி ஓரிரு சொற்களை மாற்றி வெளியிட்டிருந்தாலும் மீண்டும் இன்று இங்கே குறிப்பிடுவது இன்றைய கால கட்டத்திற்குப் பொருத்தமானதென நினைக்கின்றேன்.
ஆயுதக் குழுக்கள் தமக்குள் முட்டி மோதுவதைக் கண்டு உளம் நொந்துபோன யாழ் மாநகரசபை உறுப்பினர் தங்க. முகுந்தன் ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார். அந்த வேண்டுகோள் வருமாறு:-
தந்தை செல்வா காலத்திலிருந்து அரசியல் நடவடிக்கைகளை அறிந்தவன் என்ற வகையில் இந்த வேண்டுகோள்.
1976-5-14 பண்ணாகத்தில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்ப மாநாட்டில் பங்கு பற்றியவன் நான்.

தந்தை செல்வா அவர்கள் உதயசூரியன் கொடியை ஏற்றியபோது பாடல் இசைத்தவன் நான். வீர உணர்வு வரக் கூடிய அந்த அடிகள் இன்னும் என் மனதில் பசுமையாக நிலைத்திருக்கிறது. அதாவது தந்தை வாழ்ந்த நாட்டிலே நம் தாயும் வாழ்ந்த நாட்டிலே சொந்தமற்ற பிரஜையாய் நாம் நிந்தையுற்று வீழ்வதா? என்பதே அந்த வைர வரிகள.; மக்களின் இன்றைய அவல வாழ்வுக்கும் புரையோடிப்போயுள்ள இந்நாட்டின் இனப்பிரச்சனைக்கும் காரணமான ஆயுதப் போராட்டம் இன்று மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஒருவித விரக்தி நிலையையும் ஏற்படுத்தியுள்ளதை எவரும் நியாய சிந்தனையுடன் பார்க்கும்போது மறுப்பதற்கில்லை. இன்றுள்ள சூழ்நிலையில் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்பதுபோல எதுவுமே எமக்கு வேண்டாம் நிம்மதியாக எமது சொந்த வீடுகளில் இருக்க விட்டாலே போதும் என்ற ஆதங்கமே மக்களிடத்திலே வலுப்பெற்றிருக்கிறது.

சாத்வீகப் போராட்டங்கயோ பேச்சுவார்த்தைகளோ எமது பிரச்சனையைத் தீர்ப்பதற்கு சரிவராது என்றுகூறி இவற்றை நிராகரித்தும் கொச்சைப்படுத்தியும் விலக்கிவட்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்த இளைஞர்கள் தமக்குள் பிளவுண்டு நான் என்ற ஆணவத்தாலும் தலைமைப் பதவி மோகத்தினாலும் இன்று தம்மைத்தாமே அழித்துக்கொள்வதோடு எந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கவெனக் கூறிப் புறப்பட்டார்களோ அந்த மக்களுக்கெதிராகச் சொல்லொணாத வேதனைகளை அளிப்பதும் சிலவேளைகளில் அவர்களது உயிர்களையும் அழிக்கம் போக்கை எண்ணியோ என்னவோ தந்தை செல்வா தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிச் சென்றார் போலும்.
ஒரு போராட்டத்தை நிராகரித்து அதைக் கொச்சைப்படுத்தி அப்படிச் செய்பவரஇகள் அனைவருமே துரோகிகள் என்று கூறிவிட்டு அதே செயலைத் தாம் செய்யும்பொழுது இதைச் சந்தர்ப்பவாதம் என்பதா? அல்லது அரசியல் சித்தாந்தம் என்பதா?

எது எப்படியாயினும் சிங்கள அரசுகளின் படையினர் செய்த அட்டுழியங்களை எதிர்க்க ஆயுதம் ஏந்திப் புறப்பட்ட எமது இளைஞர்கள் எந்தப் பொது எதிரியை தமது நம்பிக்கைக்குரியவர்களாக கருதி இன்று சொந்த இனத்தினுள் தமது கருத்துக் கொள்கைகளுக்கெதிரானவர்களைக் கொன்று தீர்த்துப் பழிவாங்கப் போனார்கள் என்பதுதான் புரியாத புதிராகவுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய சூழ்நிலையில் விடுதலை காணப் புறப்பட்ட உங்களிடம் மனிதாபிமான ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக விடுக்கும் வேண்டுகோள் இதோ:-
எந்த ஒரு மனித உயிரையும் கொல்லாதீர்கள். அது யாராயிருந்தாலும் இனிமேல் ஒருபோதும் வேண்டாம்.
ஆவல வாழ்வின் ஒடுங்கிப்போயுள்ள மக்களை அதிலிருந்து மீட்டெடுக்க உங்கள் அனைத்து முயற்சிகளையும் திரிகரண சுத்தியோடு மேற்கொள்ளுங்கள். அவர்கள் மீது எந்த வன்முறையையும் பிரயோகிக்காதிருங்கள். அவர்களிடமிருந்து வரி மற்றும் தண்டப்பணம் பெறாதிருப்பது குறித்துப் பகிரங்கமான உறுதியுரை வழங்குங்கள்.
ஒருவர்மீது ஒருவர் பழி சுமத்துவதையும் குற்றம் கூறுவதையும் விடுத்து எதிர்காலத்தில் மக்களின் தேவைகளைப் பூரணப்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
மேற்குறிப்பிட்ட முயற்சிகளை முன்னெடுப்பதன் மூலம் மக்கள் மத்தியில் நிலவும் பதற்றத்தையும் சந்தேகங்களை நீக்கி ஒன்றுபட்ட சமுதாயம் சீர்நிலைபெற உறுதுணை புரிவீர்களென எதிர்பார்க்கின்றேன்.
மீதி பின் தொடரும்.

No comments: