அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Friday, September 26, 2008

விஜயதசமியன்று கிருத்தியத்திலே சைவசமய வினாவிடைப் போட்டி - குறுக்கெழுத்துப்போட்டி ஆரம்பம்.

கிருத்தியம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே சென்னை மாறன் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அதாவது வினாவிடைப் பகுதியொன்றை ஆரம்பிக்குமாறு. அவருக்கு நான் எழுதிய பதிலை இங்கு குறிப்பிடுவது வாசகர்களுக்குப் பிரயோசனமானதாயிருக்கும் எனக் கருதுகிறேன்.
திரு. சென்னை மாரன் அவர்களுக்கு,
வணக்கம். வருகை வாழ்த்துடன் அபிப்பிராயமும் தெரிவித்திருக்கிறீர்கள். இதயபூர்வமான நன்றிகள். நமது நாட்டில் சமயம் கட்டாயபாடமாக இருக்கிறது. சமய வகுப்புக்கள் அரச திணைக்களத்தால் நடைபெறுகின்றன. வாரந்தோறும் ஞாயிறு அறநெறிப் பாடசாலையாக சில பாடத்திட்டங்களுடன் முறையாக நடைபெற்று வருகிறது. சிறுவயதில் நானும் பாடம் படித்து பின்னர் போதித்ததில் ஓரளவு அனுபவம் உண்டு. வினாவிடையுடன் மாதமொருதடவை குறுக்கெழுத்துப் போட்டியொன்றினையும் எதிர்வரும் நவராத்திரி - வித்தியாரம்பம் முதல் ஆரம்பமாக ஏற்பாடு செய்து வருகின்றேன்.
எல்லாம் திருவருள் துணையுடன் இனிதே நடைபெறவேண்டும்.
அத்துடன் உங்களுடைய ஊக்கங்களும் எமக்குத் தேவை.
தொடர்பாக இருங்கள்.
என்றும் நன்றி மறவாத
தங்க. முகுந்தன்.
இவருக்குக் குறிப்பிட்டதை மீள எமது வாசகர்களுக்கும் கோரிக்கையாக வைக்கின்றேன். உங்களால் முடிந்தளவுக்கு என்னுடன் தோள்நிற்பீர்கள் என எண்ணுகின்றேன். மேலும் சந்தேகங்கள் கேள்விகள் பிரச்சினைகள் போன்ற பகுதிகளும் தொடங்கலாம் என்றிருக்கின்றேன். அதற்கு இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள சமயப் பெரியார்களின் விளக்கங்களைப் பதிவிடவும் எண்ணியிருக்கின்றேன். இந்த விடயங்களில் தயவுசெய்து சமயத்தில் ஆர்வமுடையவர்கள் உதவியாக இருக்கவேண்டும் என மிகவும் தாழ்மையுடனும் உரிமையோடும் வேண்டுகிறேன்.
விஜயதசமியன்று கிருத்தியத்திலே சைவசமய வினாவிடைப் போட்டியும் குறுக்கெழுத்துப் போட்டியும் ஆரம்பிக்கப்படவிருக்கிறது. போட்டியில் பங்குபற்றுவோர் தமது விபரங்களை உடன் எமக்குத் தெரியப்படுத்தவேண்டும். முதலில் மாணவர்களிடையே சமய அறிவை விருத்திசெய்ய இப்போட்டி ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிக அக்கறை காட்டுவார்களாயிருந்தால் அவர்களுக்கு ஆர்வத்தை மேலும் ஏற்படுத்த ஏதேனும் பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தலாம். தொடர்ந்து பங்குகொள்வோருக்கும் அதிக மதிப்பெண்கள் பெறுவோருக்கும் பரிசில்கள் வழங்க நாம் எண்ணியிருக்கிறோம். எல்லாம் அவன் செயல். இம்முறை விஜயதசமி 09.10.2008 வியாழக்கிழமை வருகிறது. தேவர்களின் குலகுருவான வியாழபகவானுடைய நாளில் இந்தப் போட்டி ஆரம்பிப்பதால் முறையே ஆங்கில மாதந்தோறும் வரும் 2ஆம் 4ஆம் வியாழக்கிழமைகளில் வினாவிடைப் போட்டிகள் முறையாக நடைபெறும். எனவே மாணவர்கள் இம்முறை 2008 ஆம் ஆண்டு எதிர்வரும் 09.10.2008, 23.10.2008, 13.11.2008, 27.11.2008, 11.12.2008, 25.12.2008 ஆகிய 8 வியாழக்கிழமையும் தவறாமல் பங்கு பற்ற வேண்டும். விடைகளை எமக்கு அடுத்துவரும் செவ்வாய்க் கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் அனுப்பி வைக்க வேண்டும். அதேபோல குறுக்கெழுத்துப் போட்டி விஜயதசமியன்றும் அடுத்து வரும் 13.11.2008 11.12.2008 ஆகிய 3 முறை நடைபெறும். அதற்கும் விடைகளை மேற்குறிப்பிட்டதுபோல அடுத்துவரும் செவ்வாய்க் கிழமைக்கு அல்லது அதற்கு முன்னர் அனுப்பவேண்டும்.
போட்டிகளில் பங்குகொள்ளும் மாணவர்கள் எந்த நாட்டில் வசிப்பவராயிருந்தாலும் சரி தமது முழுமையான உண்மையான தகவல்களை எமக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க வேண்டும்.
விபரங்கள் -
முழுப்பெயர் - தமிழிலும் ஆங்கிலத்திலும்
பிறந்த திகதி -
கல்வி கற்கும் தரம் -
தற்போது வசிக்கும் நாட்டின் பெயர் -
தொடர்பு மின்னஞ்சல் முகவரி –
எமது மின்னஞ்சல் முகவரி –
இந்து சமய ஒற்றுமைப் பேரவையுடன் (hindureligiousunitedfederation@gmail.com) தொடர்புகொள்க!

No comments: