அன்பு எதையும் கேட்பதில்லை: கொடுக்கிறது - மகாத்மா காந்தி

Tuesday, September 16, 2008

ஜூலை 25 – கண்ணீர் நாள் (கலைஞர் கடிதம்)

கலைஞர் கண்ணீர் காலத்தின் குரல்

இலங்கையில் தமிழினப் படுகொலை ஒரு தொடர் கதை.இலங்கையில் 1958ல் இனக் கலவரம் - 1977ல் இனக் கலவரம் - 1981ல் இனக்கலவரம் - 1983ல் இனக் கலவரம்.
இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுகிறது. தமிழன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.
இலங்கையில் தமிழனுக்கு ஆபத்து என்ற நேரத்திலெல்லாம் தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர் தம்பிகள் குரல் கொடுக்க என்றும் தவறியதில்லை.
இன்று தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஏன் ஐந்துகோடித் தமிழர்களும் ஒன்றுபட்டுக் குமுறி எழுந்திருப்பதால் இந்திய அரசே குரல் கொடுக்கிறது.
ஆனால் ஈழத் தமிழகத்து விடுதலை இயக்கங்களோ கூறுநூறாய் பிளவுபட்டு எதிரிக்கே வேலையில்லையெனும் அளவுக்குத் தம்முள் மோதி அழியும் பகைவராய் இருப்பதை எண்ணித்தான் வேதனை.
ஐந்துகோடித் தமிழர்களின் இந்த வேதனைக்குரல் - இனமான உணர்வுகளின் நம்பிக்கைச் சின்னம் - ஏ! தாழ்ந்த தமிழகமே! என அழைத்து, தமிழினத்தை விழித்தெழ வைத்த அண்ணாவின் தன்மானத் தம்பி, களம்பல கண்ட தலைவர் கலைஞர்.
1984 ஜூலை 25ஆம் நாள், பெரியார் திடலில் பெருவெள்ளமென மக்கள் கூட்டம் - பழம் பெரும் பகுத்தறிவாளர் நீல நாராயணன் தலைமையில் திமுக கூட்டம் - இலங்கைத் தமிழர் படுகொலை - கண்ணீர் நாள் - கூட்டம்.
ஓ, ஈழத் தமிழினமே! என் உடன் பிறப்புக்களே! என அழைத்து ஆற்றிய கண்ணீர் உரை - எழுதிய செந்நீர் மடல் - காலத்தின் குரல் - அவை அனுபவ முத்திரைகள் - தமிழினத்தை ஒன்றுபடுத்திடும் ஒளிமிக்க வைரக்கற்கள் - தமிழன் இதயத்தில் ஆழப் பதிந்து வைக்கக் கூடியன.
அதனால், இதனை ஒரு மலராய் இணைத்துத் தமிழின விடுதலைக்குக் களப்பலியாகிவிட்ட சுதந்திர வீரர்களுக்கு அர்ப்பணிக்கின்றோம்.

தமிழீழம் மலர்க!
அன்புடன்
மாவை. சேனாதிராசா.

கலைஞர் கடிதம்

உடன்பிறப்பே,

ஜூலை 25 – நினைத்தாலே நெஞ்சு நெருப்பாகிறது! கண்கள் நீர் வீழ்ச்சிகளாகின்றன!அய்யோ! நமது இனம் பூண்டோடு அழிக்கப்பட வேண்டுமென்று பொல்லாத சிங்களக் காடையர்கள் கத்தியும் துப்பாக்கியும் கோடரியும் கொடிய ஆயுதங்களும் தூக்கி இலைந்த அந்த நாட்கள் - அம்மவோ! மீண்டும் ஒரு முறை நினைத்தப் பாரக்கவே முடியவில்லையே!
அன்றந்த சிங்கஏறுகள் - மலை குலையினும் நிலைகுலையா மனஉறுதி படைத்த மாமல்லன்கள் - பதவியும் பவிசும் வரும்போகும். அதிகாரமும் அந்தஸ்தும் நிரந்தரமல்ல. இதோ எங்கள் மண்ணுக்காகவும் கொண்ட கொள்கைக்காகவும் இறுதிவரையில் நிமிர்ந்துநின்று, இடையிலே ஓர் இளை அளவும் வளையாமல் உயிரை வழங்குகிறோமே. இதுதான் சரித்திரத்தில் சாகாப் புகழை நட்டுவளர்க்கக் கூடியது என முழங்கியவாறு இலங்கை வெலிக்கடைச் சிறையில் மாண்டு மடிந்த மாவீரத் தளபதிகள் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன், மற்றும் ஐம்பதுக்கு மேற்பட்ட விடுதலைப் போராளிகள் நம்மையெல்லாம் துயரக் கடலில் அல்லவா மிதக்க விட்டார்கள்!
இன்னமும் அந்தத் துயரத் தழும்புகள் நமது இதயத்தில் தொடர் வலியைத் தந்து கொண்டுதானே இருக்கின்றன.
குழந்தை மலர்கள் கசக்கி எறியப்பட்டன! தமிழ்க் கோதையர் கற்போ நடுத்தெருவில் அலங்கோலமாக்கப்பட்டது. ஆயிரமாயிரம் தமிழ் இன மக்கள் பிணங்களாக்கப் பட்டனர்! உயிர்கள், மாட்டு மந்தை நுழைந்த கழனியின் பயிர்களாகப் பாழடைந்தன! உடைமைகள் சூறை! தமிழ்க் குலத்திற்கு வந்துற்ற நாசத்தைக் கண்டு பதைத்தோம்! பதறினோம்! வுhய்விட்டக் கதறினோம்!

இன்றுதான் என்ன: முடிந்தவிட்ட கதையென்று ஆறுதல் பெற முடிகிறதா?இன்னமும் இலங்கையில் தமிழ் இனம் நிம்மதிப் பெருமூச்சு விட முடியாமல் தணலில் நின்று தள்ளாடியபடிதான் இருக்கிறது!

தமிழகமே கொதித்தெழுந்தது – ஏன்: உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ்க்குலமே ஆரத்தெழுந்தது! பயன் என்ன?

(மீதி நாளை தொடரும்.)

1 comment:

Unknown said...

இந்தியர் யாரோ எம் மக்கள் மீது கரிசனை கொண்டு விடுதலைப் போரையும் ஈழ விடுதலை இயக்கங்களையும் ஆதரிக்கலாம், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தை யோகேஸை மாவை சேனாதி, சம்பந்தனால் பத்மநாபாவை சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிவசோதி ஆனந்தனால், ஸ்ரீசபாரெத்தினத்தை செல்வம்,சிவாஜிலிங்கத்தினால்,போராளிகளின் தலைவனென உரத்துக் கூற, ஏற்றுக் கொள்ள முடியாதுள்ள போது
தமிழக மக்கள் எம்மை நேசிக்க தவறுகின்றார்கள் என்று எப்படிக் குறை கூற முடியும்.